தமிழ்நாட்டில் அமுல் நிறுவனம், பால் கொள்முதல் செய்வதைத் தடுத்து நிறுத்தக் கோரி உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார். அந்தக் கடிதத்தில்,"கைரா மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் (அமுல் நிறுவனம்) இது நாள்வரையில் தங்களது தயாரிப்புகளை தமிழ்நாட்டிலுள்ள அவர்களுடைய விற்பனை நிலையங்கள் வாயிலாக மட்டுமே விற்பனை செய்துவந்த நிலையில், தற்போது தமிழ்நாட்டில், பால் உற்பத்தி செய்யப்படும் பகுதிகளில் அந்த நிறுவனம் பால் கொள்முதல் செய்வதால் எழும் பிரச்னைகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சர் உடனடியாகத் தலையிட்டு தீர்வு காண வேண்டும்.

பிற மாநிலங்களில் திறம்படச் செயல்படும் பால் கூட்டுறவு சங்கங்களைப்போலவே, தமிழ்நாட்டிலும் ஊரகப் பகுதிகளிலுள்ள பால் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோரின் நலனுக்காக 1981-ம் ஆண்டு முதல், மூன்றடுக்கு பால் கூட்டுறவு அமைப்பு திறம்பட செயல்பட்டுவருகிறது. ஆவின் நிறுவனம் தலைமைக் கூட்டுறவு விற்பனை இணையமாகவும் செயல்பட்டுவருகிறது. தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில், ஆவின் கூட்டுறவு இணையத்தின்கீழ், 9,673 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டுவருகின்றன.
அந்தச் சங்கங்கள் நாளொன்றுக்கு 35 லட்சம் லிட்டர் பாலை 4.5 லட்சம் உறுப்பினர்களிடமிருந்து கொள்முதல் செய்கின்றன. இதன் வாயிலாக, பால் உற்பத்தியாளர்களுக்கு ஆண்டு முழுவதும் லாபகரமான மற்றும் சீரான விலை கூட்டுறவு சங்கங்களால் உறுதிசெய்யப்படுகிறது. மேலும், தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம், பால் உற்பத்தியை அதிகரிக்கவும், நிலைநிறுத்தவும், கால்நடைத் தீவனம், தாது உப்புக் கலவை, கால்நடை சுகாதாரப் பராமரிப்பு மற்றும் கால்நடைகளுக்கான இனப்பெருக்க சேவைகளையும், இடுபொருள்களையும் பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கிவருவதுடன், தரமான பால் மற்றும் பால் பொருள்களை நுகர்வோருக்கு மிகக் குறைந்த விலையில் வழங்குவது உறுதிசெய்யப்படுகிறது.

கிராமப்புற பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதிலும், நுகர்வோரின் ஊட்டச்சத்தைப் பூர்த்திசெய்வதிலும் ஆவின் நிறுவனம் முக்கியப் பங்காற்றுகிறது. இந்தச் சூழ்நிலையில், அமுல் நிறுவனம், தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், குளிரூட்டும் மையங்கள் மற்றும் பதப்படுத்தும் நிலையத்தை நிறுவியிருப்பது குறித்தும், தமிழ்நாட்டில், கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள பால் உற்பத்தியாளர்கள் மற்றும் சுயஉதவிக்குழுக்கள் மூலம் பால் கொள்முதல் செய்யத் திட்டமிட்டிருப்பது குறித்தும் அரசின் கவனத்துக்குத் தகவல் வந்திருக்கிறது.
இந்தியாவில், மாநிலங்களுக்குள் ஒருவருக்கொருவர் பால் உற்பத்திப் பகுதியை மீறாமல், தங்களது கூட்டுறவுச் சங்கங்கள் செழிக்க பால் கொள்முதலை அனுமதிப்பது வழக்கமாக இருந்துவரும் நிலையில், அமுல் நிறுவனம் மேற்கொள்ளும் இத்தகைய எல்லை தாண்டிய கொள்முதல், ‘வெண்மைப் புரட்சி’ என்ற கொள்கைக்கு எதிராக அமைவதுடன், நாட்டில் பால் பற்றாக்குறை இருக்கும் சூழ்நிலையில், நுகர்வோர்களுக்கு மேலும் சிக்கல்களை ஏற்படுத்தும். அமுல் நிறுவனத்தின் இத்தகைய செயல்பாடு, பல்லாண்டுகளாகக் கூட்டுறவு மனப்பான்மையுடன் செயல்பட்டுவரும் ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்திப் பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தும்.

அமுல் நிறுவனத்தின் இத்தகைய செயல், பால் மற்றும் பால் பொருள்களைக் கொள்முதல் செய்து விற்பனை செய்யும் கூட்டுறவு சங்கங்களிடையே ஆரோக்கியமற்ற போட்டியை உருவாக்கிவிடும். மாநிலங்களில் செயல்படும் கூட்டுறவு அமைப்புகள், பால் வளத்துறையின் வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கிவருவதுடன், பால் உற்பத்தியாளர்களை அந்தத் தொழிலில் ஈடுபடுத்துவதற்கு ஊக்குவிப்பதற்கும், தன்னிச்சையான விலை உயர்விலிருந்து நுகர்வோரையும் பாதுகாக்கிறது. எனவே, இந்த விவகாரத்தில், மத்திய உள்துறை அமைச்சர் உடனடியாகத் தலையிட்டு, தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்திப் பகுதிகளில், அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்வதைத் தடுத்து நிறுத்திட வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.