கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “வருமான வரித்துறை சோதனை ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்டதுதான். அவர்கள் தவறு செய்திருக்கிறார்கள். அதனால் சோதனை நடைபெறுகிறது. முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கரூர் பொதுக்கூட்டத்தில், ‘தமிழ்நாட்டில் ஊழல் அமைச்சர் செந்தில் பாலாஜிதான்’ எனக் கூறினார். செந்தில் பாலாஜி திமுக-வில் இணைந்தவுடன், அவர் ஒரு புண்ணியவான் என்று ஆர்.எஸ்.பாரதி கூறுகிறார்.

இதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பி.டி.ஆர் ஆடியோ விவகாரத்தில் ஆர்.எஸ்.பாரதி ஏதேனும் விவாதத்தை முன்வைத்தாரா... அப்போதெல்லாம் எதுவும் கூறாமல் செந்தில் பாலாஜி என்று வரும்போது விவாதம் செய்கிறார் என்றால் பணம் இருந்தால் அவர்களுக்கு திமுக-வில் மரியாதை என்று மக்களுக்குப் புரிகிறது.
இந்த வருமான வரித்துறை சோதனை ஓரிரு நாள்களில் முடிவதுபோல் தெரியவில்லை. தமிழ்நாட்டையே சாராய மாநிலமாக மாற்றியிருக்கக்கூடிய ஓர் அமைச்சர் சோதனையைப் பற்றிப் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. `திமுக ஃபைல்ஸ்’ (DMK FILES) இரண்டாம் பாகத்தை விரைவில் வெளியிடவிருக்கிறோம். அது முழுவதுமே திமுக ஆட்சிக்கு வந்த பிறகு என்னென்ன செய்திருக்கிறார்கள் என்பதுதான். `என் மண் என் மக்கள்’ என்ற பயணம் ஜூலை 9-ம்தேதி தொடங்கவிருக்கிறது.

அந்தப் பயணத்தில் ஊழலைப் பற்றி மட்டும்தான் பேசவிருக்கிறோம். ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்குச் செல்லும்போதும் அங்குள்ள திமுக-வின் ஊழலைப் பற்றித்தான் பேசப்போகிறோம். `திமுக ஃபைல்ஸ் 2’-ல் திமுக-வைச் சேர்ந்தவர்களும், திமுக-வைச் சாராதவர்களும் இருக்கிறார்கள்.
பாஜக வெளியிடும் ஊழல் பட்டியலுக்கும், மத்திய அரசின் சோதனைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பாஜக-வை சின்னக் கட்சி என்று சொன்னார்கள். மேலும் நாங்களெல்லாம் பாஸ் கிடையாது. எங்கள் பாஸ் டெல்லியில் இருக்கிறார்கள் என்றெல்லாம் சொன்னார்கள். வருகிற காலத்தில் யார் பாஸ்... யார் பாஸ் இல்லை என்று தெரியவரும். இதை நான் யாருக்கும் நேரடியாகச் சொல்லவில்லை.

ஆனால் கட்சியைத் தாண்டி ஊழல் குறித்துப் பேசப்போகிறோம். யார் செய்தாலும் ஊழல், ஊழல்தான். கடந்த ஒன்பது ஆண்டுகளில் மத்திய அரசின் திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஊழல் நடந்திருக்கிறது. அவை அனைத்தும் வெளியிடப்படும்” என்றார்.