சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சசிகலா 4 ஆண்டுகள் பெங்களூரு அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரது தண்டனைக்காலம் முடிந்து சென்ற ஆண்டு ஜனவரி மாதம் விடுதலை ஆனார். அதன் பின்பு அவர் மீது சிறைத்துறை டி.ஐ.ஜி ரூபா, சிறையில் சசிகலா சொகுசாக இருப்பதற்காக டி.ஜிபி சத்திய நாராயணராவ், சிறை சூப்பிரண்டு கிருஷ்ணகுமார் ஆகியோருக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாக புகார் தெரிவித்தார். இது தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் குழு 2019-ம் ஆண்டு சசிகலா சிறையில் சிறப்புச் சலுகைகளைப் பெற்றது உண்மை என 245 பக்க அறிக்கை தாக்கல் செய்தது.
இந்த வழக்கை பெங்களூரு ஊழல் தடுப்பு படை காவல்துறை விசாரித்து வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னையைச் சேர்ந்த கீதா என்பவர் சசிகலாவின் வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கின் அடிப்படையில், நீதிபதிகள் அபய் சீனிவாஸ், சுராஜ் கோவிந்தராஜ் ஆகியோர் அடங்கிய அமர்வு சசிகலா, இளவரசி வழக்கின் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என லஞ்ச ஒழிப்பு காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், பெங்களூரு பரப்பன அக்ரஹார மத்தியச் சிறையில் சொகுசு வசதிகளைப் பெறச் சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் சசிகலா, இளவரசி ஆகியோருக்கு எதிராகப் பெங்களூரு ஊழல் தடுப்பு படை காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது.
