தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கிப் படித்த அரியலூர் மாவட்டம், வடுகபாளையத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி, கடந்த மாதம் 19-ம் தேதி உயிரிழந்தார்.

இந்த விவகாரம் கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. முதலில், மதம் மாறச் சொன்னதால்தான் மாணவி தற்கொலை செய்துகொண்டதாக மாணவி அளித்த வாக்குமூலம் என வீடியோவை பா.ஜ.க-வினர் சிலர் வெளியிட்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதையடுத்து வாக்குமூல வீடியோவில் தவறு நடந்துள்ளது எனத் தமிழக புலனாய்வுத்துறை அறிக்கை சமர்ப்பித்ததையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்கத் தனிக்குழு ஒன்றை பா.ஜ.க அமைத்திருந்தது. இதற்கிடையில், தற்கொலை செய்துகொண்ட மாணவியின் பெற்றோர் இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டுமென உயர் நீதிமன்றத்தில் முறையிட்டதையடுத்து, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது.

பா.ஜ.க விசாரணைக்குழு தலைவி சந்தியா ராய், நடிகையும் தெலங்கானா முன்னாள் எம்.பி-யுமான விஜயசாந்தி, மகாராஷ்டிராவைச் சேர்ந்த சித்ரா, கர்நாடகாவைச் சேர்ந்த கீதா ஆகியோர் தற்கொலை செய்துகொண்ட பள்ளி மாணவியின் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான விஜயசாந்தி பேசுகையில், ``மதம் மாறச் சொல்லிக் கட்டாயப்படுத்தியதால் ஏற்பட்ட மன உளைச்சலில் மாணவி தற்கொலை செய்துகொண்டார்.

இந்தத் தற்கொலை விவகாரத்தில் முதல்வர் அமைதியாக இருப்பதற்கு என்ன காரணம், யாரைக் காப்பாற்ற முயல்கிறார் என்பது எங்களுக்குத் தெரியவில்லை. மாணவியின் தற்கொலைக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். சாகும் தறுவாயில் எந்தக் குழந்தையும் பொய் சொல்லாது. ஏன் அந்தக் குழந்தையின் மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதையெல்லாம்விடக் கொடுமை இறந்த பள்ளி குழந்தையின் புகைப்படம் உலகம் முழுவதும் ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பரவியதுதான். கைதுசெய்யப்பட்ட சகாயமேரி புகைப்படங்களை ஏன் ஊடகங்கள் வெளியிடவில்லை. மேலும், மற்றவர்கள்மீது ஏன் போலீஸார் இதுவரையிலும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த விவகாரத்தை பா.ஜ.க எந்த நிலையிலும் விடப்போவதில்லை. இதை இப்படியேவிட்டால் நாளை தமிழகத்தில் உள்ள மற்ற பள்ளிகளில் மதமாற்றம் கட்டாயம் நடைபெறும். எனவே, கட்டாய மத மாற்றத் தடைச் சட்டத்தைத் தமிழகத்தில் கொண்டு வர வேண்டும்.

மேலும், மாணவியின் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். இந்த விசாரணை அறிக்கையைத் தமிழக ஆளுநர் மற்றும் கட்சியின் தேசியத் தலைவர் நட்டாவிடம் சபர்ப்பிக்கவிருக்கிறோம்" என்றார்.