தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் தி.மு.க அரசு வஞ்சிப்பதாகவும், அவர்களுக்கு வழங்கப்படவேண்டிய நிலுவைத்தொகையை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.

அண்ணாமலை இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``கொடுத்த வாக்குறுதிகளையெல்லாம் காற்றில் பறக்கவிட்டுவிட்டு வாக்களித்த பொதுமக்களை வஞ்சித்துவரும் இந்தத் திறனற்ற தி.மு.க அரசு, அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும்கூட விட்டுவைப்பதாக இல்லை. ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற தி.மு.க-வின் தேர்தல் வாக்குறுதியை தி.மு.க-வின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் மறந்திருக்கலாம் பொதுமக்கள் இன்னும் மறக்கவில்லை.

2021-ம் ஆண்டு தமிழகத்திலுள்ள வேலைவாய்ப்பு பதிவு அலுவலகத்தில் பதிவுசெய்தோரின் மொத்த எண்ணிக்கை 8,60,000. பதிவுசெய்தோரில் வெறும் 2,000 பேருக்கு மட்டுமே கடந்த ஆண்டு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. 2023-ம் ஆண்டு டி.என்.பி.எஸ்.சி வழங்கிய அட்டவணையின்படி வெறும் 1,752 பணியிடங்கள் உருவாக்கப்படும் என்று தெரிவித்திருக்கின்றனர். நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளுக்கு, எவ்விதச் சம்பந்தமும் இல்லாத சூழலே நிலவிவருகிறது. விளம்பரங்களை மட்டுமே தேடிச் செல்லும் இந்தத் திறனற்ற தி.மு.க அரசு, முதலீடுகளை ஈர்ப்பதில் எவ்வித ஆர்வமும் காட்டுவதாகத் தெரியவில்லை. தன் மகனுக்கு அமைச்சர் பதவி கொடுப்பதில் மட்டுமே கவனம் செலுத்திவந்ததால், மக்களை மறந்துவிட்டார் முதல்வர்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த முடியுமா, முடியாதா என்ற எந்தப் புரிதலும் இல்லாமல், அரசு ஊழியர்களை ஏமாற்றும் நோக்குடன் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என்கிறார் திறனற்ற தி.மு.க அரசின் நிதியமைச்சர். அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் 01.01.2022 அன்று அறிவிக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வை 01.07.2022 எனக் காலம் தாழ்த்தி வழங்கியது தமிழக அரசு. ஆனால், 6 மாதகாலம் தாழ்த்தியதற்குக் கொடுக்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை இப்போது வரை வழங்கவில்லை. மேலும், 01.07.2022 வழங்கப்படவேண்டிய அகவிலைப்படி விலை உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிடாமல் கள்ள மெளனம் சாதிக்கிறது திறனற்ற தி.மு.க அரசு.

கொடுத்த வாக்குறுதிளை நிறைவேற்றாமல், உள்கட்டமைப்பை மேம்படுத்த செலவு செய்யாமல், அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஊதிய உயர்வும் நிலுவை பாக்கியும் வழங்காமல் ஆண்டின் இறுதியில் நிதி பற்றாக்குறையை குறைத்து விட்டோம் என்று பொய்யான பிம்பத்தை கட்டமைக்க நீங்கள் பாடுபட்டுவருகிறீர்கள். மக்களை நீண்ட நாள்களுக்கு ஏமாற்ற முடியாது என்பதை தி.மு.க உணர வேண்டும். நீங்கள் உணரவில்லையெனில், கடந்தகாலத்தில் மக்கள் தங்களுக்கு உணர்த்தியதைப்போல் மீண்டும் உணர்த்துவார்கள். இதற்கு மேலும் காலம் தாழ்த்தாமல், அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வழங்கப்படவேண்டிய அகவிலைப்படி உயர்வு மற்றும் நிலுவைத்தொகையை உடனடியாக தமிழக அரசு வழங்க வேண்டும் என்று மிக பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.