Published:Updated:

`கிறிஸ்தவ, இஸ்லாம் மதத்துக்கு மாறினாலும் தீண்டாமை தொடரும் என திமுக அரசு சொல்கிறதா?’ - வானதி காட்டம்

வானதி சீனிவாசன்

"நீதிமன்ற வரம்புக்குள் இருக்கும் இந்த விவகாரத்துக்கு எதற்குத் தீர்மானம் கொண்டுவர வேண்டும்?" - வானதி சீனிவாசன்

Published:Updated:

`கிறிஸ்தவ, இஸ்லாம் மதத்துக்கு மாறினாலும் தீண்டாமை தொடரும் என திமுக அரசு சொல்கிறதா?’ - வானதி காட்டம்

"நீதிமன்ற வரம்புக்குள் இருக்கும் இந்த விவகாரத்துக்கு எதற்குத் தீர்மானம் கொண்டுவர வேண்டும்?" - வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்

இந்து, சீக்கியம், புத்த மதத்தைப் பின்பற்றும் பட்டியலினத்தவருக்கு வழங்கப்படும் சலுகைகள் கிறிஸ்தவர்களாகவும், இஸ்லாமியர்களாகவும் மாறிய பட்டியலினத்தவருக்கு வழங்கப்படுவதில்லை. இது தொடர்பாகப் பல வழக்குகள் 2004-ம் ஆண்டு முதல் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன. இந்த நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில், 'இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்பட்டுவரும் சட்டரீதியான பாதுகாப்பு உரிமைகளை, மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கும் வழங்கும் வகையில் மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும்' எனத் தனித் தீர்மானம் கொண்டுவந்தார்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்
DD

இந்தத் தீர்மானம் குறித்து பா.ஜ.க உறுப்பினர் வானதி பேச, அவர் தீண்டாமை குறித்து சொன்ன கருத்துகள் அவைக்குறிப்பில் இடம்பெறாது என சபாநாயகர் தெரிவித்தார். இதனால் பா.ஜ.க உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். அதைத் தொடர்ந்து பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``மத்திய அரசு பட்டியலினத்தவருக்கான சலுகைகளை, கிறிஸ்தவ, இஸ்லாம் மதம் மாறிய பட்டியலினத்தவருக்கும் வழங்குவது தொடர்பாக ஓய்வுபெற்ற முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் ஆய்வுக்குழுவை ஏற்படுத்தி ஆராய்ந்துவருகிறது. இந்த நிலையில், இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

இந்தத் தனித்தீர்மானம் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. ஏனென்றால், இது தொடர்பாகப் பல்வேறு ரிட் மனுக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன. கடந்த வாரம்கூட இந்த விவகாரம் தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடந்தது. அடுத்த மாதத்துக்கு இந்த விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்திருக்கிறது. நீதிமன்ற வரம்புக்குள் இருக்கும் இந்த விவகாரத்துக்கு எதற்குத்  தீர்மானம் கொண்டுவர வேண்டும்?

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

இதன் மூலம், பட்டியலின மக்கள் கிறிஸ்தவ, இஸ்லாம் மதத்துக்கு மாறினாலும் தீண்டாமை தொடரும் என தி.மு.க அரசு மறைமுகமாகச் சொல்கிறதா... திராவிட மாடல் அரசு என மார்தட்டிக்கொள்ளும் இந்த அரசு பட்டியலின மக்களின் பிரச்னையான வேங்கைவயல் விவகாரம், பஞ்சமி நில மீட்பு சிறப்புச் சட்டம், ஆணவக்கொலை தடுப்புச் சட்டம் உள்ளிட்டவற்றைப் பற்றி அக்கறையில்லாமல், இந்தத் தீர்மானம் கொண்டுவந்திருப்பதில் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது.

பொது மயானம், பஞ்சமி நிலம், ஆணவக்கொலை, தென் தமிழகத்தில் கிறிஸ்தவர்களாக இருந்தாலும், ஒவ்வொரு சாதியைச் சேர்ந்தவர்களுக்கும் ஒரு மயானம் உள்ளிட்ட விவகாரங்கள் மாநில அரசின் வரம்புக்குள் வருகின்றன. அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், பட்டியலின மக்களை ஏமாற்றி, துரோகம் செய்து, எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை முன்வைத்து இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டிருப்பதாகக் கருதுகிறோம். அதனால்தான் இந்தத் தனித்தீர்மானத்தை  எதிர்த்து வெளிநடப்பு செய்திருக்கிறோம்" எனத் தெரிவித்திருக்கிறார்.