டிசம்பர் 10-ம் தேதி சென்னையிலிருந்து இண்டிகோ 6E-7339 விமானம் புறப்படத் தயாராக இருந்தபோது, அந்த விமானத்தின் அவசரவழிக் கதவை பயணி ஒருவர் திறந்ததாகச் செய்திகள் வெளியாயின. அதைத் தொடர்ந்து, சக பயணிகளின் உயிரை ஆபத்தில் சிக்கவைக்க முயன்றவர் கர்நாடக பா.ஜ.க எம்.பி தேஜஸ்வி சூர்யா என்றும், அவருடன் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இருந்ததாகவும் விமானத்தில் பயணம் செய்த பயணிகள் தெரிவித்ததாகச் சில தகவல்கள் வெளியாயின.
இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 29-ம் தேதியே தனது ட்விட்டர் பக்கத்தில் பெயர் குறிப்பிடாமல் கருத்து தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து, இந்தச் செய்தி பரவலாகப் பேசப்பட்டது. இதற்கிடையில், செவ்வாய்க்கிழமையன்று இண்டிகோ மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்ட அறிக்கையில், "பயணி ஒருவர், அவசரகால வெளியேறும் கதவைத் திறந்திருக்கிறார். அவரின் இந்தச் செய்கையால், மற்ற பயணிகளிடையே பதற்றம் நிலவியது. உடனடியாகப் பயணி மன்னிப்புக் கேட்டதைத் தொடர்ந்து, விமானப் பணியாளர்கள் விமானத்தின் அழுத்தத்தைச் சரிபார்த்தனர். அதன் பிறகு, விமானம் தாமதமாகப் புறப்பட்டது" எனக் குறிப்பிட்டிருக்கிறது.
ஆனால் அந்த அறிக்கையில், சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் என தனிப்பட்ட யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. இது குறித்து கர்நாடக காங்கிரஸின் ட்விட்டர் பக்கத்தில், ``கேம்ஸ் விளையாடும் குழந்தைகளுக்கு அதிகாரத்தை வழங்கினால் என்ன நடக்கும் என்பதற்கு தேஜஸ்வி சூர்யா ஓர் உதாரணம். விமானத்தின் அவசரகால வெளியேறும் கதவைத் திறக்க முயன்ற குழந்தைகளின் குறும்புச் செயல் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. பயணிகளின் உயிருடன் விளையாடியது ஏன்?" எனக் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

காங்கிரஸ் எம்.பி ரந்தீப் சுர்ஜேவாலா, " தேஜஸ்வி சூர்யாவின் செயல் விமானப் பயணிகளின் பாதுகாப்பில் சமரசம் செய்திருக்கிறதா? ஒருவேளை விமானம் புறப்பட்ட பிறகு இந்தச் சம்பவம் நடந்திருந்தால் நிலை என்னவாகியிருக்கும்?" என்றும் கேட்டிருக்கிறார்.
காங்கிரஸின் கர்நாடகப் பிரிவுத் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்வரும் தேர்தலை முன்னிட்டு, "பாதுகாப்பாக புறப்படுவதற்கும், தரையிறங்குவதற்கும், எப்போதும் காங்கிரஸுடன் பயணியுங்கள்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ஆனால், தேஜஸ்வி சூர்யா தரப்பில், இந்தக் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை. மாறாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அல்லது விமான நிறுவனம் அதிகாரபூர்வ அறிக்கையை வெளியிட்டால் பதிலளிப்பதாக அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறதாம்.