நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களாகக் கடந்த மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நேற்று பதவியேற்றுக்கொண்டனர். குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு முன்னிலையில் பதவியேற்றுக்கொண்ட இவர்கள், இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு விசுவாசமாக இருப்பேன் என உறுதிமொழியேற்றனர். இதில் மத்திய அமைச்சர்களான பியூஷ் கோயல் மற்றும் நிர்மலா சீதாராமன் உட்பட பல பாஜக எம்.பி-க்களும் பதவியேற்றனர்.
பின்னர் நேற்று மாலை, புதிதாகப் பதவியேற்றுக்கொண்ட பாஜக எம்.பி-க்களுடன், பிரதமர் மோடி ஆலோசனைக் கூட்டம் நடத்தி எம்.பி-க்களின் பொறுப்புகள் குறித்து அவர்களுக்கு விளக்கினார்.

இதில் முக்கியமாக, `நாடாளுமன்ற கூட்டங்களுக்குத் தவறாமல் வர வேண்டும், அவையில் வார்த்தைகளைக் கவனமாகப் பயன்படுத்த வேண்டும்’ என எம்.பி-க்களுக்கு மோடி அறிவுறுத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பா.ஜ.க-வின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மாவின், நபிகள் நாயகம் குறித்த சர்ச்சைக் கருத்தால் இந்தியாவில் பல போராட்டங்களும், கலவரங்களும் நடந்தன. அதன் தொடர்ச்சியாகத்தான் உதய்பூர் படுகொலைச் சம்பவம்கூட நடந்தது எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே வார்த்தைகளை கவனமாகப் பயன்படுத்துமாறு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜ்யசபா பாஜக எம்.பி-க்களுக்கு மோடி அறிவுரை கூறியதாகக் கூறப்படுகிறது.
