இந்திய வடக்கு எல்லையான ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாகவே, தீவிரவாத அமைப்புகளால் பொதுமக்கள், குறிப்பாக வெளி மாநிலத்தவர்கள் கொல்லப்பட்டுவருகின்றனர். அதிலும் குறிப்பாக, காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு எதிராக வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துவருவதாக அரசியல் கட்சிகள் பலவும் மத்திய அரசை விமர்சித்துவருகின்றன. மேலும், சமீபகாலங்களில், அரசு ஊழியரான காஷ்மீர் பண்டிட் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டது, டிக் டாக் பிரபலம் ஒருவர் வீட்டுக்கு வெளியே சுட்டுக்கொல்லப்பட்டது, காஷ்மீரில் வங்கியொன்றில் வேலை பார்த்துவந்த நபர் வங்கியிலேயே சுடப்பட்டது, அதே நாளில் மேலும் இரண்டு பேர் தீவிரவாதிகளால் உயிரிழந்த சம்பவம் என அடுத்தடுத்து வன்முறைச் சம்பவங்கள் நடந்துகொண்டேயிருக்கின்றன. இந்த நிலையில், ``காஷ்மீரில் நிலைமையை மேம்படுத்த மத்திய அரசு ஏதாவது செய்ய வேண்டும்’’ என ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கூறியுள்ளார்.

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய உமர் அப்துல்லா, ``இங்கு நிலைமை என்னவென்பது உங்கள் அனைவரின் முன்பும் இருக்கிறது. அசம்பாவிதச் சம்பவங்கள் நடக்காத நாளே இல்லை. மக்கள் அனைவருமே துன்பத்தில் உள்ளனர். அவர்களின் நிலைமை மேம்பட வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். அதற்கு மத்திய அரசு ஏதாவது செய்ய வேண்டும்" எனக் கோரிக்கை வைத்தார்.
மேலும், ஜம்மு காஷ்மீர் மாநில சட்டமன்றத் தேர்தல் குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த உமர் அப்துல்லா, ``தேர்தலை நடத்தும் பொறுப்பு தேர்தல் ஆணையத்திடம் உள்ளது. தேர்தல் ஆணையம் அதை முடிவு செய்த பிறகுதான், அதற்கான பணிகளை நாங்கள் தொடங்குவோம். இப்போதைக்கு தேர்தல் பற்றி பேசவோ அல்லது அதற்கு நாங்கள் தயாராகவோ இல்லை" எனக் கூறினார்.
