பிரதமர் மோடி தொடர்பாக பி.பி.சி வெளியிட்ட ஆவணப்படத்தை முடக்குமாறு யூடியூப் நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
குஜராத்தில் 2002-ம் ஆண்டு நடந்த கலவரத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம், முஸ்லிம்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல், தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. `இந்தச் சம்பவங்களின்போது கலவரத்தைத் தடுக்க முறையான பாதுகாப்பு நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை’ என அப்போதைய குஜராத் முதல்வர் மோடி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் முன்வைத்தன.

இதற்கிடையே, இது தொடர்பாக மோடிக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், பி.பி.சி ஊடகம் குஜராத் கலவரம் தொடர்பாக மோடி குறித்து, ``India: The Modi Question" என்ற இரண்டு பாகங்கள் கொண்ட ஆவணப்படத்தைக் கடந்த செவ்வாயன்று வெளியிட்டது. இந்த ஆவணப்படத்தில், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்க குஜராத் காவல்துறை முயற்சி மேற்கொள்ளாமல் இருந்ததாக அப்போதைய மோடி அரசுமீது பிரிட்டிஷ் விசாரணைக்குழு குற்றம்சாட்டியிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, பி.பி.சி-யின் ஆவணப்படம் குறித்து விளக்கமளித்திருக்கிறார். இது தொடர்பாக, ``இந்த ஆவணப்படம் இந்தியாவில் திரையிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஆவணப்படம், அதை உருவாக்கிய ஏஜென்சியின் பிரதிபலிப்பு. இதுவொரு குறிப்பிட்ட, மதிப்பிழந்த கதையை முன்வைக்க வடிவமைக்கப்பட்ட பிரசாரத்தின் ஒரு பகுதியாகவே ( A Piece of Propaganda) நாங்கள் நினைக்கிறோம்'' என அரிந்தம் பாக்சி கூறியிருக்கிறார்

இந்த செய்தி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த நிலையில், பிரதமர் மோடி தொடர்பாக பி.பி.சி வெளியிட்ட ஆவணப்படத்தை முடக்குமாறு யூடியூப் நிறுவனத்துக்கு உத்தரவு பிறப்பித்திருப்பதாகவும், அந்த வீடியோவை இணைத்து வெளியிடப்பட்டிருக்கும் 50-க்கும் மேற்பட்ட ட்விட்டர் பதிவுகளை நீக்குமாறு ட்விட்டர் நிறுவனத்துக்கும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி டெரெக் ஓபிரையன் (Derek O'Brien) உள்ளிட்ட சில எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆவணப்படம் தொடர்பாக பதிவிட்டிருந்த ட்விட்டர் பதிவை ட்விட்டர் நிறுவனம் நீக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நடவடிக்கைகள் அனைத்தும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் சார்பில், யூடியூப், ட்விட்டர் நிறுவனங்களுக்கு தகவல் தொழில்நுட்ப சட்டம், 2021-ன் கீழ் அறிவுறுத்தல் அனுப்பப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. யூடியூப் மற்றும் டிவிட்டர் நிறுவனங்கள் ஆகிய இரண்டும் இந்த உத்தரவைப் பின்பற்ற ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.