சென்னையில் பல்வேறு பகுதிகளில் அனுமதி பெறாமல் ஸ்பா, மசாஜ் சென்டர்கள், அழகு நிலையங்கள் செயல்பட்டுவருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துவருகின்றன. சென்னை மாநகரக் காவல்துறையினரும் இந்தப் புகார்களின் அடிப்படையில் அடிக்கடி சோதனைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்த நிலையில், சென்னையில் ஸ்பா, மசாஜ் சென்டர்கள், அழகு நிலையங்களுக்கான தொழில் உரிமம் பெறுவதற்கு சென்னை மாநகராட்சியால் உருவாக்கப்பட்ட புதிய விதிகளுக்கு நேற்றைய தினம் மாமன்றக் கூட்டத்தில் ஒப்புதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில்,
* தொழில் உரிமம் பெறுவதற்கு, ஒற்றைச் சாளர முறையில், சென்னை மாநகராட்சி, தீயணைப்புத்துறை, போக்குவரத்துத் துறை, மாசு கட்டுபாடு வாரியம் ஆகிய துறைகளிடம் தடையில்லாச் சான்று பெற வேண்டும்.
* ஸ்பா, மசாஜ் சென்டர்கள், அழகு நிலையங்கள் உரிமம்பெற 21 நிபந்தனைகள், அவற்றைச் செயல்படுத்துவதற்க்கு 27 வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டிருக்கின்றன.
* கதவுகளை பூட்டிய நிலையில் மசாஜ் சென்டர்கள் செயல்பட தடை.
* வெளிப்புறக் கதவு செயல்படும் நேரத்தில் திறந்தே இருக்க வேண்டும்.
* அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து இயங்கக் கூடாது.
* வாடிக்கையாளர்களுக்கென தனி வருகைப் பதிவேடு வைத்திருக்க வேண்டும்.
* எந்த வகையிலும் பாலியல் தொடர்பான சேவைகள் வழங்குவது தடைசெய்யப்படுகிறது.
* காவல்துறையினர், மாநகராட்சி அதிகாரிகள் புகார்கள் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்வார்கள்.
* CCTV கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும்.
* தொற்று பாதிப்பு உள்ளவர்களுக்கு சேவை வழங்கக் கூடாது
* ஒருவருக்கு சேவை வழங்கிய பின்னர் பணியாளர் தனது கைகளை சோப்பு கொண்டு கழுவ வேண்டும். அதன் பின்னர்தான் அடுத்தவருக்கு சேவை வழங்க வேண்டும்.
* ஒருவருக்கு சேவை வழங்கிய பின்னர் அடுத்தவருக்கு சேவை வழங்குவதற்கு முன்பு கருவிகளை முறையாகச் சுத்தம் செய்ய வேண்டும்.
* பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடிய அழகுசாதனப் பொருள்களை பயன்படுத்தக் கூடாது.
* உரிமம் விண்ணப்பிக்கும் நபர் உரிய படிப்புச் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
... எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
