மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வு கட்டாயம் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து தமிழக அரசு சார்பில் மாணவர்களின் சமூக மற்றும் பொருளாதார நிலையைக் கருத்தில்கொண்டு அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க அதிமுக அரசு முடிவு செய்தது. இதையொட்டி அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் உள் ஒதுக்கீடாக 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டை வழங்கும் சட்டத்தைக் கொண்டு வந்தது. இதை அனைத்துக் கட்சிகளும் வரவேற்றன. இதை எதிர்த்து, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியது. ``மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு செல்லும். உள் ஒதுக்கீடு வழங்க தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இருக்கிறது. மேலும் 7.5 சதவிகித உள் ஒதுக்கீட்டை ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மறு ஆய்வு செய்ய வேண்டும்'' எனத் தெரிவித்திருக்கிறது.