சென்னை, கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக அரசின் ஈராண்டு சாதனைகளை விளக்கும் வகையில், அமைக்கப்பட்டிருக்கும் புகைப்படக் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்து பார்வையிட்டார். மேலும், தி.மு.க ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, ஒரு லட்சம் பயனாளிகளுக்கு ஓய்வூதிய ஆணைகளை வழங்கினார். அதைத் தொடர்ந்து பேசிய அவர், ``முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்…” உங்களால் மறக்க முடியாத குரல் இது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இதே நாளில் தமிழ்நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டுசெல்ல என்னை அர்ப்பணித்துக்கொண்டேன். மக்களின் நம்பிக்கையை, எடுத்துக்கொண்ட பணியை வெற்றிகரமாகச் செயல்படுத்தி, காப்பாற்ற முடியுமா என எனக்கு நானே கேட்டுக்கொண்டபோது, எனக்கு ஆதரவாக தைரியம் கொடுத்தவர்கள் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகிய மூவர்தான். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக சனாதனத்தால் முடங்கிக்கிடந்த திராவிட இனத்தை, தன்னுடைய ஒயாத உழைப்பால் சுயமரியாதைக் கொண்டவர்களாக மாற்றிக்காட்டியவர் பெரியார். சுயமரியாதைப் பெற்றவர்கள், தனக்கான உரிமைகளைப் பெற்றாக வேண்டும் என ஏழை, எளிய மக்களுக்காக சிந்தித்து ஆட்சியை கட்டமைத்தவர் அண்ணா. தன்னுடைய ஆட்சியின்போது இயற்றப்பட்ட சட்டங்கள் மூலம் ஆட்சியின் இலக்கணத்தை இந்தியாவுக்கே இயற்றிக்காட்டியவர் கலைஞர்.
இவர்களுடன், அம்பேத்கர், காமராஜர், தோழர் ஜீவானந்தம், காயிதே மில்லத் போன்றவர்களின் சிந்தனையும் எனக்குள் தன்னம்பிக்கையைக் கொடுத்தது. மக்களுக்குப் பணியாற்றுவது எனக்குப் புதிதல்ல. பிறந்து வளர்ந்தது அனைத்தும் பொது வாழ்க்கையின் அத்தனை தன்மைகளைக்கொண்ட கோபாலபுரம் இல்லத்தில்தான். சிறுவனாக இருந்தபோதே திராவிட இயக்கத்துக்கு என்னை அர்ப்பணித்துக்கொண்டு, 50 ஆண்டுகளுக்கும் மேல் பல சோதனைகளைத் தாண்டி அரசியலில் பயணித்திருக்கிறேன். எதையும் தாங்க வேண்டும் என்று அண்ணாவும், இதையும் தாங்க வேண்டும் என கலைஞரும் எனக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறார்கள்.

பதவியேற்றபோது செய்தியாளர்களிடம் 'எனக்கு வாக்களித்தவர்கள் மட்டுமல்ல வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்தே பணியாற்றுவேன்' எனக் கூறினேன். இது தமிழ்நாட்டு மக்கள் தந்த பொறுப்பு. என்னால் முடிந்தவரை, என்னுடைய சக்திக்கு மீறி பணியாற்றுகிறேன். அதன் பலனை உங்களின் முகங்களில் பார்ப்பதின் மூலமும், உங்கள் அன்பின் மூலமும் அறிகிறேன். `திராவிட மாடல்' என்று கேட்பவர்களுக்கு மக்களின் முகமும், அதன் மகிழ்ச்சியும் பதிலளிக்கிறது. `பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என திருக்குறள் சொல்கிறது. எல்லாருக்கும் எல்லாம் என்பதுதான் `திராவிட மாடல்'. மக்களை சாதி, மதம், அதிகாரம், ஆவணத்தால் பிரித்துப் பார்ப்பவர்களுக்கு `திராவிட மாடல்' என்றால் புரியாது. அறிவார்ந்த தமிழ்நாட்டு மக்களுக்கு அது புரியும்.
மக்களுக்குச் சம்பந்தமில்லாத பதவியில் இருப்பவர்கள் கூறுவது பற்றிக் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. நம் கடமையைச் செய்தால் போதும் என்கிற குறிக்கோளுடன் நான் செயல்படுகிறேன். சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னால் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற பயணத்தை தமிழ்நாட்டில் இருக்கிற 234 தொகுதிகளுக்கும் நான் நடத்தினேன். மக்களிடம் மனுக்களைப் பெற்றபோது நான் சொன்னது, உங்கள் கவலைகளை, உங்கள் கோரிக்கைகளை, உங்கள் எதிர்பார்ப்புகளை என்னிடம் ஒப்படைத்திருக்கிறீர்கள். இனி இதெல்லாம் என்னுடைய கவலைகள், என்னுடைய கோரிக்கைகள், என்னுடைய எதிர்பார்ப்புகள்.

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்ததும் இதற்கெல்லாம் 100 நாள்களில் தீர்வு காண்பேன் என்று உறுதி கொடுத்தேன். சொன்னதைச் செய்வதுதான் `திராவிட மாடல்'. மனு கொடுத்தவர்கள் எங்களுக்கு வாக்களித்தவர்களா... வாக்களிக்காதவர்களா... என்று பிரித்துப் பார்க்கவில்லை. தி.மு.க ஜெயித்த தொகுதியா... தோற்ற தொகுதியா... என்று பார்க்கவில்லை. பெரும்பாலான கோரிக்கைகளை நாங்கள் இன்றைக்கு நிறைவேற்றியிருக்கிறோம்.
இன்றைக்குக்கூட இந்த நிகழ்ச்சியில் சாதனைகளை மட்டும் சொல்லுகிற நிகழ்ச்சியாக இல்லாமல் ‘புதுமைப் பெண்’ – ‘நான் முதல்வன்’ திட்டங்களின்கீழ் ஆணைகளும், ஒரு லட்சம் பயனாளிகளுக்கு `முதியோர் உதவித்தொகை' வழங்குகின்ற விழாவாகவும் ஏற்பாடு செய்திருக்கிறோம். செயின்ட் ஜார்ஜ் கோட்டை என்பது, இரண்டாண்டு காலமாக ஏழை மக்களின் நலன் காக்கக்கூடிய குடியிருப்பாக மாறியிருக்கிறது. தலைமைச் செயலகம் என்பது தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரையும் முன்னேற்ற உழைக்கும் முதன்மைச் செயலகமாக மாறியிருக்கிறது.

இந்த ஆட்சியின் முகம் என்பது அதிகார முகமல்ல, அன்பு. ஆணவ முகமல்ல, ஜனநாயகம். அலங்கார முகமல்ல, எளிமை. சர்வாதிகாரமல்ல, சமத்துவம். சனாதனமல்ல, சமூகநீதி. அதனால்தான் சிலரால் விமர்சிக்கப்படுகிறது. பலரால் விரும்பப்படுகிறது. நமது ஆட்சி என்பது, சமூகநீதி, சமநீதி, சுயமரியாதை, சமதர்மம், சகோதரத்துவம் ஆகிய உயரிய பண்பாட்டின் அடிப்படையில் அமைக்கப்பட்டிருக்கக்கூடிய ஆட்சி. இரண்டு ஆண்டுகளை முடித்துவிட்டு, இப்போது மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம்.
தமிழ்நாட்டில் வாழும் எட்டு கோடி மக்களும், ஏதாவது ஒரு விதத்தில் நன்மையை அடைந்திருக்கும் ஆட்சியாக நமது திராவிட மாடல் ஆட்சி அமைந்திருக்கிறது. உங்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தார்கள் என்றால், அந்தக் குழந்தைகளுடைய ஊட்டச்சத்தை உறுதிசெய்யக்கூடிய சத்தான உணவை நம் அரசு வழங்குகிறது. உங்கள் வீட்டில் அரசுப் பள்ளியில் படிக்கின்ற ஒரு மாணவனோ - மாணவியோ இருந்தால், அவர்களுக்கு காலைச் சிற்றுண்டியை அரசு வழங்குகிறது. உங்கள் வீட்டில் அரசுப் பள்ளியில் படித்து, காலேஜுக்குப் போகின்ற ஒரு மாணவி இருந்தால், `புதுமைப்பெண் திட்டம்' மூலமாக அவர்களுக்கு மாதா மாதம் ஆயிரம் ரூபாயை நம் அரசு வழங்குகிறது.

உங்கள் வீட்டில் இருக்கின்ற எல்லாப் பெண்களுக்கும், பஸ்ஸில் கட்டணமில்லாமல் பயணம் செய்கிற வசதியை நம் அரசு உருவாக்கித் தந்திருக்கிறது. உங்கள் வீட்டில் கல்லூரிக்குப் போகிற மாணவர் இருந்தால், அவரை எல்லா விதத்திலும் வேலைவாய்ப்புக்குத் தகுதிப்படுத்த, 'நான் முதல்வன்' திட்டம் மூலமாக நம் அரசு பயிற்சி தருகிறது.
விவசாயி இருந்தால், அவருக்கு நம் அரசு இலவச மின் இணைப்பு கொடுக்கிறது. மகளிருக்கு சுய உதவிக்குழுக்களின் மூலமாக அதிக கடனுதவியை நம் அரசுதான் கொடுத்துக்கொண்டிருக்கிறது. திருநங்கையர் - மாற்றுத்திறனாளிகள் – கோயில் பூசாரிகள் - மீனவர்கள் - தொழிலாளர்கள் என அனைத்து வகைப்பட்ட மக்களுக்கும் உதவிகளை வழங்கி கைதூக்கி விடுகிறது நம் அரசு. அரசு ஊழியர்களின் நலன் காத்து அவர்களைப் பாதுகாத்து வேலைவாய்ப்புகளை உருவாக்கியும் தருகிறது நம் அரசு. புதிய தொழில் முதலீடுகள் மூலமாக ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருவது நம்முடைய அரசு.

ஆண்-பெண், கிராமம்-நகரம், குழந்தைகள்-முதியோர் என எல்லா வகையிலும் எல்லாருக்குமான வளர்ச்சியை அடிப்படையாகக்கொண்டு செயல்படுவது நமது அரசு. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்றார் பேரறிஞர் அண்ணா. மக்களின் மகிழ்ச்சியே என்னுடைய மகிழ்ச்சி. மாதவரம் பால்பண்ணை அருகே தள்ளுவண்டி உணவுக்கடை வைத்திருந்தவர் மேரியம்மாள். கைம்பெண் உதவித்தொகை கேட்டு கடந்த ஆட்சியில் விண்ணப்பித்து அவருக்கு அது கிடைக்கவில்லை. நம்முடைய ஆட்சி வந்ததும், மாதம்தோறும் 1,000 ரூபாய் அவருக்கு உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. மேரியம்மாளின் மகிழ்ச்சிதான், என்னுடைய மகிழ்ச்சி.
தரமணியைச் சேர்ந்த சஜீத், செவித்திறன் குறைபாடுகொண்ட சிறுவனுக்கு அந்தக் கருவியை வாங்குவதற்குப் பணமில்லை, நானே சென்று அந்தச் சிறுவனுக்கு என் கையால், காதொலிக் கருவியைப் பொருத்திவிட்டேன். அருகிலிருந்து வரக்கூடிய சத்தங்களையெல்லாம் கேட்டு சஜீத் சிரித்தார், அந்த அழகைப் பார்த்தபோது எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. டானியா என்ற பள்ளிச் சிறுமியைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவருக்கு இப்போது ஒன்பது வயது. நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார்.

முகச்சிதைவு நோய் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த அந்தச் சிறுமியை, கூட படிக்கிற சில மாணவர்கள் புறக்கணிக்கிறார்கள் என்று செய்தி கிடைத்தது. உடனே அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை கொடுத்தோம். இப்போது மகிழ்ச்சியாக பள்ளிக்குச் சென்றுவருகிறார். அவர்களுடைய வீட்டுக்கே நேரில் சென்று அந்தச் சிறுமியின் முகத்தில் அரும்பிய அந்தப் புன்னகையைப் பார்த்து, வாழ்த்திவிட்டு வந்தபோது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மெரினா கடலில் கால் நனைக்கும்போது மாற்றுத்திறனாளி பவானி கணேஷ் அவர்கள் அடைந்த மகிழ்ச்சிதான் என்னுடைய மகிழ்ச்சி.
விளிம்பு நிலை மக்களாக இருக்கிற இருளர் – நரிக்குறவர் மக்களுக்கும் என்ன தேவை என்று கவனித்து எல்லா மாவட்டத்திலும் அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுத்து, அவர்களுடைய சுயமரியாதையையும் மாண்பையும் நிலைநாட்டியிருக்கிறோம். அவர்களுடைய வீட்டுக்கே சென்று நான் காலை உணவு சாப்பிட்டேன். சாப்பிட்டபோது அந்த உணவு காரமாக இருந்தது. ஆனால், அதைவிட அன்பு அதிகமாக இருந்தது, அந்த அன்புதான் இன்றைக்கு நம் அரசு இந்தப் பெயரை, இந்தச் சிறப்பைப் பெற்றிருக்கிறது. மக்களுடைய முகத்தில் மகிழ்ச்சியை செயற்கையாக வரவைக்க முடியாது. இதயம் மகிழ்ந்தால்தான் இயற்கையாக முகமும் மலரும்.

நம்முடைய `திராவிட மாடல்' ஆட்சியில், கோடிக்கணக்கான மக்களுடைய இதயத்தில் மகிழ்ச்சியும், முகத்தில் மலர்ச்சியும் நிறைந்திருக்கிறது. அதை, நான் ஒவ்வொரு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்கிறபோது கவனிக்கிறேன். மாவட்டம்தோறும் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்களின் மூலமாக, வீட்டுமனைப்பட்டா, கல்விக் கடனுதவி, சுயதொழில் தொடங்க கடனுதவி, கூட்டுறவுக் கடன்கள், நகைக் கடன்கள், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன்கள், உழவர்களுக்குப் புதிய இலவச மின் இணைப்பு, பயிர்க்கடன்கள், புதிய ஓய்வூதிய ஆணைகள், மாணவ மாணவியர்க்கு விலையில்லா சீருடைகள், காலணிகள், புத்தகப்பைகள் உழவர்களுக்கு மரக்கன்றுகள், வேளாண் பொருள் தொகுப்புகள், கோயில் பணியாளர்களுக்கு, ஊக்கத்தொகைகள், சாலைகள் மேம்பாலங்கள், குடியிருப்புகள், சத்துணவு மையங்கள் சமூக நலக் கூடங்கள் – என்று எத்தனையோ திட்டங்களை மாவட்டம்தோறும் - நகரங்கள்தோறும் நாம் செய்து கொடுத்திருக்கிறோம். துறைகள்தோறும் சாதனைகளைச் செய்து காட்டிக்கொண்டிருக்கிறோம்.
சென்ற ஆட்சியில் சீரழிந்து கிடந்த அரசு, அந்த அரசினுடைய நிர்வாகம், அதைச் சீர் செய்ய பல்வேறு நடவடிக்கைகளை இன்றைக்கு நாம் எடுத்துவருகிறோம். தலைமைச் செயலகத்தில் என் தலைமையில் இதுநாள் வரை 350-க்கும் மேற்பட்ட துறைரீதியான ஆய்வுக்கூட்டங்கள் நடந்து பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்பட்டிருக்கிறது. ஆட்சிப் பொறுப்பேற்று இதுநாள் வரை 6,905 கோப்புகளில் கையெழுத்திட்டிருக்கிறேன்.

அதோடு நிற்கவில்லை. கோட்டையில் தீட்டுகிற திட்டங்கள் கடைக்கோடி மனிதருக்கும் சென்று சேர்வதை உறுதிப்படுத்த ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தைத் தொடங்கி இதுவரை நான்கு கட்டங்களில், 16 மாவட்டங்களில் அரசு அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தியிருக்கிறேன். இப்படி இரண்டாண்டு சாதனைகளை முழுவதுமாகச் சொல்லி முடிக்க வேண்டுமென்றால், இன்னும் இரண்டு நாள்கள் நீங்கள் இங்கேயே தங்கியிருக்க வேண்டும்.
சொன்னதைச் செய்வோம்- செய்வதைச் சொல்வோம் என்பது முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடைய நடைமுறை. அப்படித்தான் ஆட்சி நடத்தினார். ஆனால், நமது `திராவிட மாடல்' அரசு, சொல்லாததையும் செய்வோம் - சொல்லாமலும் செய்வோம் என்கிற வேகத்தோடு செயல்பட்டுவருகிறது. முதலமைச்சராக நான் பொறுப்பேற்றபோது, கடந்த ஆட்சியாளர்கள் விட்டுச் சென்ற தமிழ்நாட்டினுடைய பொருளாதார நிலைமை என்ன... அரசாங்க கஜானாவினுடைய நிலைமை என்ன... அதையெல்லாம் மாற்றி, இருண்டுகிடந்த தமிழ்நாட்டில் விடியலை உண்டாக்கியிருக்கிறோம்.

ஒன்றிய அரசிடமிருந்து தமிழ்நாட்டினுடைய உரிமைகளைக் காப்பாற்ற என்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்துகொண்டு வருகிறோம். வளமான தமிழ்நாட்டை - இந்தியாவிலேயே முதன்மையான மாநிலமாகத் தமிழ்நாட்டை- எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் தமிழ்நாட்டை உருவாக்கிவிட முடியும் என்கிற நம்பிக்கை நமக்கு அதிகமாக இருக்கிறது. உங்களுடைய மகிழ்ச்சியும், வாழ்த்துகளும் நம்முடைய இலக்கை நோக்கி என்னை இன்னும் அதிகமாக உழைக்க வைக்கும். கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற உழைப்பேன். உங்களில் ஒருவனாக, உங்களோடு ஒருவனாக என்றும் இருப்பேன். ஆட்சியின் ஐந்தாண்டுகளும் உங்களின் நலனுக்காக இருக்கும். அதன் பிறகும், உங்கள் ஆதரவோடு தொடரும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறேன்" எனப் பேசியிருக்கிறார்.