திரைப்பட இயக்குநர் பா.இரஞ்சித்தின் உதவி இயக்குநரும், கவிஞருமான விடுதலை சிகப்பி, இந்துக் கடவுள்களை இழிவுபடுத்தும்விதமாகப் பேசியதாக, பாரத் இந்து முன்னணி அமைப்பின் தலைவர் சுரேஷ் போலீஸில் புகாரளித்திருந்தார். பின்னர் இதில் நடவடிக்கை எடுத்த போலீஸார், விடுதலை சிகப்பி மீது ஐந்து பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்தனர். இத்தகைய நடவடிக்கைக்கு பா.இரஞ்சித் எதிர்ப்பும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், `இந்துக் கடவுள்களை இழிவுபடுத்தியவர்கள்மீது முதல்வர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், ``தி.மு.க அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்தே, இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு முற்றிலும் முரணான வகையில், மதத்தையும், மதக் கடவுள்களையும் இழிவுபடுத்திப் பேசுவது என்பது தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இந்திய நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் சமயச் சுதந்திர உரிமை அளிக்கப்பட்டிருக்கிறது.
இதன்படி, அனைத்து மக்களும் தனிப்பட்ட முறையில் ஒரு மதத்தின்மீது நம்பிக்கைவைத்து வழிபாடு செய்வதற்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால், எந்த ஒரு மதத்தையும் இழிவுபடுத்துவது என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. ஒரு மதத்தை இழிவுபடுத்தும் உரிமை யாருக்கும் கிடையாது. அவ்வாறு ஒருவர் ஒரு மதத்தை இழிவுபடுத்திப் பேசினால், அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டிய கடமையும், பொறுப்பும் அரசுக்கு உண்டு.

இந்தச் சூழ்நிலையில், `விடுதலை’ என்னும் புனைபெயரில் ஒருவர் இதிகாச புராணமான இராமாயணத்தையும், மக்கள் வணங்கக்கூடிய ராமர், லட்சுமணர், சீதை, அனுமன் போன்ற இந்துக் கடவுள்களை இழித்தும், பழித்தும் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வேகமாகப் பரவிவருகிறது. இது கடும் கண்டனத்துக்குரியது. இது, `ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற பேரறிஞர் அண்ணாவின் கொள்கைக்கு முற்றிலும் எதிரானது. இதற்குப் பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. காவல்துறையினரிடம் புகாரும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இது போன்ற செயல்பாடுகள் சட்டம்-ஒழுங்கை சீரழிக்கவும், மத நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிக்கவும், மத மோதல்களை உருவாக்கவும் வழிவகுக்கும் என்பதால், முதலமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, இந்துக் கடவுள்களை இழிவுபடுத்தியவர்கள்மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், இனி வருங்காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் நிகழாவண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டுமென்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்" என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார்.