நபிகள் நாயகம் குறித்த சர்ச்சைப் பேச்சு தொடர்பாக, நுபுர் ஷர்மாவைக் கைதுசெய்யக் கோரி கடந்த வெள்ளிக்கிழமையன்று டெல்லி, உத்தரப்பிரதேசம் உட்பட பல மாநிலங்களில் இஸ்லாமியர்கள் போராட்டங்கள் நடத்தினர். இந்தப் போராட்டம் உத்தரப்பிரதேசத்தில் கலவரமாக வெடித்தது. இதில், வன்முறையைத் தூண்டியதாக 60-க்கும் மேற்பட்ட இளைஞர்களை போலீஸார் கைதுசெய்திருந்தனர். அதைத் தொடர்ந்து கடந்த ஞாயிறு அன்று போராட்டத்தைத் தூண்டியதில் முக்கியமானவராக போலீஸாரால் கைதுசெய்யப்பட்ட ஜாவேத் முகமதுவின் வீடு முறையான அனுமதி வாங்காமல் கட்டப்பட்டதாக இடிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பரவலாக வைரலானது. மேலும், வீடு இடிப்பு குறித்து தங்களுக்கு எந்த முன்னறிவிப்பும் வரவில்லை என்று குடும்பத்தினர் கூறியிருந்தனர். அதைத் தொடர்ந்து, ஜாவேத்தின் மனைவியின் பெயரில் வீடு இருப்பதால், இத்தகைய இடிப்பு சட்டத்துக்கு எதிரானது என்று அலகாபாத் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு, வழக்கறிஞர்கள் குழு கடிதம் எழுதியது.

இந்த நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக, உத்தரப்பிரதேசத்தின் ஆளுங்கட்சியான பா.ஜ.க மீது மாநில எதிர்கட்சித் தலைவரான அகிலேஷ் யாதவ் கேள்வியெழுப்பியிருக்கிறார்.
இது குறித்து இன்று பேசிய அகிலேஷ் யாதவ், ``அரசியலமைப்பும் அதன் சட்டமும், பா.ஜ.க-வின் புல்டோசரைத் தடுத்து நிறுத்தும். அவர்கள் புல்டோசர் கொண்டு தகர்க்கப்பட்ட வீடு, வரி செலுத்தியிருக்கிறது. அரசாங்கம் ஏன் அந்த வரியை வசூலிக்கிறது. அதுமட்டுமல்லாமல் குற்றம்சாட்டப்பட்டவர் அந்த வீட்டின் உரிமையாளர் அல்ல என்று ஆவணங்கள் தெரிவிப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அரசாங்கம் தனது தவற்றை ஏற்றுக்கொள்ளுமா... அதுமட்டுமல்லாமல், வீட்டை புல்டோசர் மூலம் இடித்த அதிகாரிகள், மீண்டும் அதைச் சீரமைப்பார்களா என்பதுதான் கேள்வியும்கூட" எனப் பேசினார்.
