அரசுத் திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக நேற்று பிரதமர் மோடி சென்னைக்கு வந்திருந்தார். சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அடையாறு வந்த மோடியை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றார். அதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாட்டுக்கு வழங்கவேண்டிய நிலுவைத்தொகையை ஒன்றிய அரசு விரைந்து வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.
இதையொட்டி, முதல்வரின் பேச்சை பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். ``தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய உரைக்காக நான் வெட்கப்படுகிறேன். முதல்வர் சொன்ன ஒவ்வொரு தகவலையும் பாஜக மறுத்து அறிக்கை வெளியிடும்'' என்றார்.
இந்தநிலையில், இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக தனது ட்விட்டர் பதிவில், ``பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய உரைக்காக தான் வெட்கப்படுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு மக்களின் நியாமான கோரிக்கைகளை பிரதமரிடம் முன்வைப்பது முதலமைச்சரின் கடமை. அதைத்தான் அவர் செய்திருக்கிறார். மேடையை அலங்கரித்து திரும்புவதற்கு நடந்தது ஒன்றும் கொலு பொம்மை விழா அல்ல.
தமிழ் மொழியைப் பற்றி அவ்வப்போது வாய்ஜாலம் காட்டும் பிரதமர், சம உரிமைக்கான கோரிக்கை பற்றியும் கூட எதுவும் பேசவில்லை. அண்ணாமலைக்கு இதைப் பற்றியெல்லாம் அக்கறை உண்டா?... முதலமைச்சர் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுவது பற்றி எதையும் சொல்லாத பிரதமரின் உரைதான் ஏமாற்றமளிப்பதாக உள்ளது. ஆனால், அதை மறைத்து - தமிழக மக்களின் முக்கியமான கோரிக்கைகளை பிரதமரிடம் முன்வைத்த முதலமைச்சரின் உரையினை அண்ணாமலை விமர்சிப்பது அவரின் அரைவேக்காட்டுத் தனத்தையே காட்டுகிறது'' என குறிப்பிட்டுள்ளார்.
