Published:Updated:

கடலூர்: அதிமுக உட்கட்சித் தேர்தல்: கோஷ்டி மோதலில் மண்டை உடைப்பு; 13 பேர்மீது வழக்கு!

அ.தி.மு.க கோஷ்டி மோதல் (கோப்பு படம்)

கடலூர் மாவட்ட அதிமுக உட்கட்சித் தேர்தல் விவகாரத்தில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் வாகனங்களில் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டிருப்பதுடன், நான்கு பேருக்குப் படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

Published:Updated:

கடலூர்: அதிமுக உட்கட்சித் தேர்தல்: கோஷ்டி மோதலில் மண்டை உடைப்பு; 13 பேர்மீது வழக்கு!

கடலூர் மாவட்ட அதிமுக உட்கட்சித் தேர்தல் விவகாரத்தில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் வாகனங்களில் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டிருப்பதுடன், நான்கு பேருக்குப் படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

அ.தி.மு.க கோஷ்டி மோதல் (கோப்பு படம்)

அதிமுக உட்கட்சித் தேர்தலில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் போட்டியின்றி தேர்வானதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாவட்டவாரியாக உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டுவருகிறது. அதன்படி கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என நான்காகப் பிரிக்கப்பட்டிருக்கும் கடலூர் மாவட்டத்தில் டிசம்பர் 22, 23-ம் தேதிகளில் தேர்தல் நடக்கும் என்று தகவல் வெளியானது. கடலூர், பண்ருட்டி என இரண்டு தொகுதிகளைக்கொண்ட வடக்கு மாவட்ட அதிமுக-வில் கடலூர் நகரச் செயலாளர், ஒன்றியச் செயலாளர் ஏற்கெனவே நீக்கப்பட்ட நிலையில் புதிய பொறுப்பாளர்ள் இன்னும் நியமிக்கப்படவில்லை.

அடித்து நொறுக்கப்பட்ட கார்
அடித்து நொறுக்கப்பட்ட கார்

அதேபோல பண்ருட்டி சட்டமன்றத் தொகுதியில் முக்கியப் பொறுப்புகளில் இருந்த நிர்வாகிகள் நீக்கப்பட்ட நிலையில், அந்தப் பதவிகளைப் பெறுவதில் கட்சிக்காரர்களுக்கு இடையே கோஷ்டிப்பூசல் நிலவிவந்தது. இந்நிலையில்தான் நேற்று பாதிரிகுப்பத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க வடக்கு மாவட்டச் செயலாளருமான எம்.சி.சம்பத் உட்கட்சித் தேர்தலுக்காக மனு வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்தார்.

அப்போது கடலூர் நகர துணைச் செயலாளரான கந்தனும் அவரின் ஆதரவாளர்களும், ``அனைத்து வார்டுகளுக்கும் புதிய விண்ணப்பம் வழங்க வேண்டும். புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்ய வேண்டும். பழைய ஆட்களுக்கு வழங்கக் கூடாது” என்று கோரிக்கை வைத்தனர். அதற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற நிர்வாகியான குமார் என்ற சேவல் குமாரின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனார். தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது எம்.சி.சம்பத், அவர்களை சமாதானப்படுத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

அ.தி.மு.க உட்கட்சித் தேர்தல்
அ.தி.மு.க உட்கட்சித் தேர்தல்

ஆனால் அதன் பிறகும் இரு தரப்பினரும் சமாதானம் அடையாமல் கட்சி அலுவலகத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த வாக்குவாதம் ஒருகட்டத்தில் கைகலப்பாக மாற இரு தரப்பினரும் கடுமையாக மோதிக்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக கடலூர் - திருவந்திபுரம் சாலையிலும் கோஷ்டி மோதல் ஏற்பட்டு அங்கிருந்த கார் உள்ளிட்ட வாகனங்களின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. அதனால் அந்த வழியாகச் சென்றுகொண்டிருந்த பொதுமக்கள் சிதறி ஓடினர். அதன் காரணமாகக் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

இந்த கோஷ்டி மோதலில் நகர துணைச் செயலாளர் கந்தன், எம்.ஜி.ஆர் மன்ற நிர்வாகியான சேவல் குமார் தரப்பைச் சேர்ந்த ஆறுமுகம், ராதாகிருஷ்ணன், பாலாஜி உள்ளிட்டவர்கள் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டனர். இரு தரப்பு மோதலைத் தொடர்ந்து டி.எஸ்.பி கரிகால் சங்கர், டி.எஸ்.பி யாஸ்மின் தலைமையில் திருப்பாதிரிப்புலியூர் போலீஸார் கட்சி அலுவலக வளாகம் மற்றும் கடலூரில் முக்கிய இடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நகர துணைச் செயலாளர் கந்தன் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருப்பாதிரிப்புலியூர் போலீஸார் பாலாஜி, வசந்த், முன்னாள் கவுன்சிலர் மணி உள்ளிட்ட நான்கு பேர் மீதும், படுகாயமடைந்த மணி கொடுத்த புகாரின் அடிப்படையில் நகர துணைச் செயலாளர் கந்தன், அவரின் தரப்பைச் சேர்ந்த பிரகாஷ், வடிவேல், சக்திவேல், கமர், மணிகண்டன், காந்தி உள்ளிட்ட ஒன்பது பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து நகர துணைச் செயலாளர் கந்தன் தரப்பைச் சேர்ந்த பிரகாஷ், வடிவேல், மணிகண்டன், மற்றொரு பிரகாஷ் உள்ளிட்ட நான்கு பேர் மீது திருப்பாதிரிப்புலியூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து அவர்களைக் கைதுசெய்துள்ளனர். இந்த கோஷ்டி மோதலைத் தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் உட்கட்சித் தேர்தல் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.