
தீரன் ‘தில்’ பேட்டி
பச்சையப்பன் கல்லூரியில், தி.மு.க-வின் மாணவர் அமைப்பான திராவிட மாணவர் முன்னேற்றக் கழகத்தின் தலைவராக தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியவர் பேராசிரியர் தீரன். பிறகு பா.ம.க., பகுஜன் சமாஜ், நாம் தமிழர் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, அ.தி.மு.க... கடைசியாக இப்போது மீண்டும் பா.ம.க என்று அவர் பயணித்த கட்சி வழிப்பாதை மிக நீண்டது. தற்போது பா.ம.க-வின் அரசியல் தலைமைக்குழுத் தலைவராக இருக்கும் தீரனின் `விறுவிறு’ பேட்டி இங்கே...
“வரும் சட்டசபைத் தேர்தலில் பா.ம.க தனித்துப் போட்டியிடுமா, அ.தி.மு.க கூட்டணியில் தொடருமா?’’
“வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு, எழுவர் விடுதலை, நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை அ.தி.மு.க அரசிடம் வைத்துள்ளோம். அவை நிறைவேற்றப்பட்டால் கூட்டணியில் நீடிப்பது குறித்துப் பரிசீலிப்போம். ஆனாலும், தனித்துப் போட்டியிட்டு அன்புமணியை முதல்வராக்க வேண்டும் என்பதே எங்கள் லட்சியம்!’’
“ஆனால், பல மாவட்டங்களில் உங்கள் கட்சிக்குக் கிளைகளே இல்லையே?’’
“பத்து எம்.எல்.ஏ-க்களுடன் ஹரியானாவில் துஷ்யந்த் துணை முதல்வராகவில்லையா... உத்தரப் பிரதேசத்தில் வெறும் 65 எம்.எல்.ஏ-க்களுடன் மாயாவதி முதல்வராகவில்லையா? மாநிலம் முழுவதும் கட்சி வலுவாக இருக்க வேண்டிய அவசியமில்லை. வன்னியர்கள் வலுவாக உள்ள வடக்கு, மேற்கு மாவட்டங்களில 160 தொகுதிகள் இருக்கின்றன. அங்கு கவனம் செலுத்தினாலேயே ஆட்சியைப் பிடித்துவிடுவோம்.’’
“முதல்வராக ஆசைப்படும் அன்புமணி, சாதி அடையாளத்தைக் கையில் டாட்டூ குத்திக்கொள்ளலாமா?”
“சாதி அடையாளத்துக்குள் எங்களைச் சுருக்கிவிட வேண்டாம். எங்கள் கட்சிக்குக் கிடைத்த முதல் மத்திய மந்திரி பதவியை தலித் ஒருவருக்குத்தான் கொடுத்தோம். எங்கள் கட்சியின் பொதுச் செயலாளராக தலித் ஒருவர்தான் வர முடியும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில்கூட எங்களுக்குக் கிடைத்த ஏழு இடங்களில், நான்கு இடங்களைப் பிற சமூகத்தினருக்குத்தான் கொடுத்தோம். 1991-ம் ஆண்டு தேர்தலிலேயே ‘தலித் ஒருவரை முதல்வராக்குவோம்’ என்று முழங்கியவர் எங்கள் ஐயாதான்!”
“பிறகு ஏன், ராமதாஸ் அந்தக் கொள்கையைக் கைவிட்டார், மகன் அன்புமணிக்காகவா?’’
“இல்லை. தலித் மக்களே எங்களை ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால்தான் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணிவைக்க வேண்டியதாயிற்று. நாங்கள் பொதுவானவர்கள். எங்களுக்குச் சாதிய சிந்தனை இல்லை.’’
“ஆனாலும், பா.ம.க மீது ‘சாதிக்கட்சி’ என்கிற விமர்சனம் முன்வைக்கப்படுகிறதே?’’
“வன்னியர் சங்கமாக இருந்து, அரசியல் கட்சியாக மாறியதால் அப்படியொரு பார்வை இருந்தது. ஆனால், நாங்கள் ‘தமிழர் உரிமை மாநாடு’ நடத்தியபோது முற்போக்காளர்கள், தமிழ்த் தேசியவாதிகள், அம்பேத்கரியவாதிகள் கலந்துகொண்டு ஆதரித்தார்களே!’’
“இப்போதும் ஆதரிக்கிறார்களா?’’
“நிச்சயமாக. என்ன... தேர்தல் கூட்டணியின்போது மட்டும் விமர்சனம் செய்வார்கள். ஆனாலும், அவர்களின் விருப்பத்துக்குரியவர்கள் நாங்கள் மட்டுமே!’’
“மத்திய பா.ஜ.க அரசு, மாநில உரிமைகளைத் தொடர்ச்சியாகப் பறித்துவருகிறது. ஒருகாலத்தில் மாநில உரிமைகளுக்காகக் குரல் எழுப்பிய பா.ம.க., தற்போது பதவிக்காக அமைதிகாக்கிறதா?”
“நாங்கள் அமைதியாக இருக்கிறோம் என்று யார் சொன்னது? நீட் தேர்வை ரத்துசெய்யக் கோரிக்கைவைத்தோம். தமிழகத்துக்கு கொரோனா நிவாரண நிதி குறைவாக ஒதுக்கிய தைச் சுட்டிக்காட்டினோம். மத்திய அரசின் தவறுகளை எங்கள் ஐயா சுட்டிக்காட்டிக் கொண்டுதான் இருக்கிறார்.’’

“சார்... கோரிக்கை வைப்பது, அறிக்கைவிடுவதெல்லாம் எதிர்ப்பரசியலா?’’
“தி.மு.க மட்டும் என்ன செய்கிறது? வீட்டு வாசலில் நின்று கறுப்புக்கொடிதானே காட்டுகிறது... இன்று எல்லாக் கட்சிகளுமே அப்படித்தான் இருக்கின்றன. எங்களை மட்டும் குறை சொல்லக் கூடாது.’’
“ஆனால், நீங்கள்தானே ‘தமிழகத்தின் உண்மையான எதிர்க்கட்சி’ என்று சொல்லிக் கொள்கிறீர்கள்?”
“இப்போதுதான் எங்கள் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்திக் கொண்டிருக் கிறோம். தேவைப்படும்போது போராடுவோம்.’’
“என்னது! கட்சி தொடங்கப்பட்டு 31 ஆண்டுகளாகிவிட்டன. இப்போதுதான் கட்டமைப்பையே வலுப்படுத்திவருகிறீர்களா?’’
“வடக்கு மாவட்டங்களில் எங்கள் கட்சி பலமாகவே இருக்கிறது. தொடர்ச்சியாக நிர்வாகிகள் கூட்டங்களை நடத்திவருகிறோம். அதைத்தான் அப்படிச் சொன்னேன்.’’
“வன்னியர்களுக்கு பா.ம.க துரோகம் இழைத்துவிட்டதாக வேல்முருகன், வீரப்பன் மனைவி முத்துலட்சுமி, காடுவெட்டி குருவின் குடும்பத்தினர் ஆகியோர் வைக்கும் விமர்சனங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’
“காடுவெட்டி குருவுக்கு மணி மண்டபம் கட்டியிருக்கிறோம், அவருக்குச் சிலை வைத்திருக்கிறோம். ‘வன்னியர்களுக்கு ராமதாஸ் எதுவும் செய்யவில்லை’ என்று சொல்பவர்கள் வன்னியர்களுக்கு என்ன செய்திருக்கிறார்கள்? துரோகிகள்!’’
“கருணாநிதியோடு அரசியலில் பயணித்தவர் நீங்கள். ஸ்டாலினின் அரசியல் செயல்பாடுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’
“கலைஞர் தொண்டனை நம்பினார். ஸ்டாலின் தொண்டர்களை நம்புவதாக, அவர்களிடம் கருத்து கேட்பதாகத் தெரியவில்லை. வெறுமனே ஆளும்கட்சியை எதிர்ப்பதன் வழியாக மட்டுமே வளர்ந்துவிடலாம் என நம்புகிறார். அது எடுபடாது.”
“ஜெயலலிதா காலத்து அ.தி.மு.க - எடப்பாடி, ஓ.பி.எஸ் தலைமையிலான அ.தி.மு.க. ஓர் ஒப்பீடு?’’
“ஜெயலலிதா அம்மையார்போலவே இருவரும் சிறப்பாகச் செயல்படுகிறார்கள். மத்திய அரசுக்கு அடிபணிந்து போவதாகச் சிலர் விமர்சிக்கிறார்கள். மத்தியில் நெருக்கமாக இருந்து, மாநிலத்துக்குத் தேவையான வற்றைச் சாதிப்பது எம்.ஜி.ஆரின் பாணி! இவர்களும் அதையே கடைப்பிடிக்கிறார்கள்!’’