Published:Updated:

"சிறுவாணி குறுக்கே தடுப்பணை கட்டும் கேரளா; சட்ட விதிமீறலை திமுக அரசு தடுக்க வேண்டும்" - சீமான்

சீமான்

``பினராயி விஜயனுடன் நெருங்கிய நட்பு பாராட்டி, கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணியிலுள்ள தி.மு.க அரசு, தமிழ்நாட்டின் உரிமையைப் பறிக்கும் கேரள மாநில அரசின் அத்துமீறலை இதுவரை கண்டிக்காதது ஏன்?" - சீமான்

Published:Updated:

"சிறுவாணி குறுக்கே தடுப்பணை கட்டும் கேரளா; சட்ட விதிமீறலை திமுக அரசு தடுக்க வேண்டும்" - சீமான்

``பினராயி விஜயனுடன் நெருங்கிய நட்பு பாராட்டி, கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணியிலுள்ள தி.மு.க அரசு, தமிழ்நாட்டின் உரிமையைப் பறிக்கும் கேரள மாநில அரசின் அத்துமீறலை இதுவரை கண்டிக்காதது ஏன்?" - சீமான்

சீமான்

கோவை மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமான சிறுவாணி ஆற்றின் குறுக்கே கூலிக்கடவு - சித்தூர் சாலையில் ஏற்கெனவே தடுப்பணையை கேரள அரசு கட்டி முடித்திருக்கிறது. தற்போது மீண்டும் சிறுவாணி ஆற்றின் குறுக்கே இரண்டு தடுப்பணைகளைக் கட்ட கேரளா அரசு திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் கேரள அரசுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதைத் தடுக்க வேண்டும் என வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

சீமான்
சீமான்

அந்த அறிக்கையில், ``சிறுவாணி ஆற்றின் குறுக்கே அடுத்தடுத்து மூன்று தடுப்பணைகள் கட்டும் கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசின் நடவடிக்கை பெரும் அதிர்ச்சியளிக்கிறது. கேரள அரசின் யதேச்சதிகாரப்போக்கைத் தடுக்கத் தவறி, வேடிக்கைப் பார்க்கும் தி.மு.க அரசின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது.

உலகின் மிகச் சுவையான நன்னீர் ஆறுகளில் ஒன்றான சிறுவாணி ஆறு கோவை மாவட்டத்தின் குடிநீர்த் தேவையை நிறைவேற்றுவதில் முக்கியப் பங்காற்றுகிறது. ஆனால், அதைக் கெடுக்கும் வகையில் கேரள மாநில அரசு சிறுவாணி ஆற்றின் குறுக்கே கூலிக்கடவு - சித்தூர் சாலையில் தற்போது புதிய தடுப்பணையைக் கட்டி முடித்திருப்பதுடன், மேலும் இரண்டு இடங்களில் தடுப்பணைகளைக் கட்ட தீவிர நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

இதனால் சிறுவாணி ஆற்றுநீர் உரிமை முற்று முழுதாகக் கானல் நீராகி, கோவையில் மிகப்பெரிய குடிநீர் பஞ்சம் ஏற்படக்கூடிய பேராபத்து ஏற்பட்டிருக்கிறது. இரு மாநிலங்களுக்கிடையிலான நதியின் குறுக்கே, எந்த ஒரு மாநிலமும் மற்றொரு மாநிலத்தின் ஒப்புதலின்றித் தன்னிச்சையாக எவ்வித அணையும் கட்டமுடியாது என்பதை உச்ச நீதிமன்றம் பலமுறை தனது தீர்ப்புகளில் தெளிவுபடுத்தியிருக்கிறது. அதுமட்டுமின்றி, சிறுவாணி ஆறானது காவிரி மேலாண்மை ஆணையத்தின் கீழ் வரும் நிலையில், கேரள மாநில கம்யூனிஸ்ட் அரசு தமிழ்நாடு அரசின் ஒப்புதலின்றி முறைகேடாகத் தடுப்பணைகளைக் கட்டிவருவது அப்பட்டமான நதிநீர் சட்ட விதிமீறலாகும்.

முதல்வர்கள் ஸ்டாலின் - பினராயி விஜயன்
முதல்வர்கள் ஸ்டாலின் - பினராயி விஜயன்

ஏற்கெனவே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே புதிய தடுப்பணையை கர்நாடக மாநில அரசு கட்டிமுடித்தபோது, அது குறித்துத் தனக்கு எதுவும் தெரியாது என்று தி.மு.க அரசு கைவிரித்த நிலையில், தற்போது கேரள அரசு சிறுவாணி ஆற்றின் குறுக்கே கட்டியிருக்கும் தடுப்பணையின் 90 விழுக்காடு பணிகள் நிறைவடைந்திருக்கும் நிலையில், அது குறித்தும் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறுவது தி.மு.க அரசின் நிர்வாகத் திறமையின்மையையே வெளிக்காட்டுகிறது.

அதுமட்டுமின்றி, கேரள மாநில அரசு சிறுவாணி ஆற்றின் கொள்ளளவை 50 கன அடியிலிருந்து 45 கன அடியாக ஏற்கெனவே குறைத்திருப்பதோடு, கோடைக்காலத்தில் நீர் எடுக்கும் சிறுவாணி ஆற்றின் சுரங்கப்பாதையையும் சிறிதும் மனிதத் தன்மையின்றி மூடியிருக்கிறது பினராயி விஜயன் தலைமையிலான கேரள மாநில கம்யூனிஸ்ட் அரசு.

கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் நெருங்கிய நட்பு பாராட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணியிலுள்ள தி.மு.க அரசு, தமிழ்நாட்டின் உரிமையைப் பறிக்கும் கேரள மாநில அரசின் அத்துமீறலை இதுவரை கண்டிக்காதது ஏன்?

கேரள அரசுமீது எவ்வித நடவடிக்கையும், சட்ட நடவடிக்கையும் இதுவரை எடுக்காதது ஏன்... காவிரி நதிநீரைத் தரமறுக்கும் கர்நாடக மாநில பா.ஜ.க அரசின் அத்துமீறலுக்குத் துணைபோகும் தமிழ்நாடு பா.ஜ.க-வின் துரோகத்துக்குச் சற்றும் குறைவில்லாதது, சிறுவாணி நதிநீரைத் தடுக்கும் கேரள மாநில கம்யூனிஸ்ட் அரசின் அத்துமீறலுக்குத் துணைபோகும் தி.மு.க அரசின் பச்சைத்துரோகம்.

சீமான் - ஸ்டாலின்
சீமான் - ஸ்டாலின்

காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு அணைகட்டும் கர்நாடக அரசு, பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகளைக் கட்டும் ஆந்திர அரசு, சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகளைக் கட்டும் கேரள அரசு என்று, ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாட்டின் நதிநீர் உரிமைகளை ஒவ்வொன்றாய் தாரைவார்ப்பதற்குப் பெயர்தான் தி.மு.க அரசின் திராவிட மாடலா... என்ற கேள்வியும் எழுகிறது. ஆகவே, சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகளைக் கட்டி கோவையைப் பாலைவனமாக்கும் கேரள அரசின் யதேச்சதிகாரப்போக்குக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் உடனடியாக வழக்கு தொடர்ந்து, சமரசமற்ற சட்டப்போராட்டம் நடத்தி தமிழர்களின் நதிநீர் உரிமை பறிபோகாமல் பாதுகாக்க வேண்டுமென தமிழ்நாடு அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்" என சீமான் குறிப்பிட்டிருக்கிறார்.