Published:Updated:

'திமுக நடத்துவது கூட்டணி ஆட்சி இல்லை' - என்ன சொல்கின்றன கூட்டணிக் கட்சிகள்?!

ஸ்டாலின்

"திமுக நடத்துவது கூட்டணி ஆட்சி என்று சொல்ல முடியாது. அவர்கள் தனியாகத்தான் ஆட்சி செய்கிறார்கள்" என்று விசும்புகிறார்கள், அதன் தோழமைக் கட்சியினர்.

Published:Updated:

'திமுக நடத்துவது கூட்டணி ஆட்சி இல்லை' - என்ன சொல்கின்றன கூட்டணிக் கட்சிகள்?!

"திமுக நடத்துவது கூட்டணி ஆட்சி என்று சொல்ல முடியாது. அவர்கள் தனியாகத்தான் ஆட்சி செய்கிறார்கள்" என்று விசும்புகிறார்கள், அதன் தோழமைக் கட்சியினர்.

ஸ்டாலின்

2 ஆண்டுக்காலம் நிறைவு!

திமுக ஆட்சிக்கு வந்து வரும் 7-ம் தேதியுடன் இரண்டு ஆண்டுக்காலம் நிறைவுபெறுகிறது. இதற்கிடையில் அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. முன்னதாக இது குறித்து கடந்த மார்ச் 1-ம் தேதி நடத்த தனது 70-வது பிறந்தநாள் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

தேர்தல்
தேர்தல்

அப்போது அவர், "2024 நாடாளுமன்றத் தேர்தலில் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதைவிட யார் ஆட்சி அமைத்துவிடக் கூடாது என்பதற்கான தேர்தல் அது. ஒன்றுபட்ட இந்தியாவை வகுப்புவாத பாசிசத்தால் பிளவுபடுத்தும் பாஜக-வை அரசியல்ரீதியாக வீழ்த்தியாக வேண்டும். அனைத்துக் கட்சிகளும் ஒன்று திரள வேண்டும்.

ஒற்றுமைதான் காரணம்!

அந்த ஒற்றுமை உணர்வு வந்துவிட்டாலே பாஜக-வை வீழ்த்தியதாகச் சொல்லிவிடலாம். மாநிலங்களுக்கு இருக்கும் அரசியல் வேறுபாட்டைவைத்து தேசிய அரசியலைத் தீர்மானித்தால், இழப்பு நமக்குத்தான் என்பதை அனைத்துக் கட்சிகளும் உணர வேண்டும். காங்கிரஸ் உட்பட அனைத்துக் கட்சிகளுக்கும் சேர்த்தே சொல்கிறேன்.

கே.பாலகிருஷ்ணன்
கே.பாலகிருஷ்ணன்

தமிழ்நாட்டில் கடந்த நான்கு ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் தொடர்ந்து வெற்றிபெற்றிருக்கிறோம் என்றால் அதற்கு ஒற்றுமைதான் காரணம்" என்று தெரிவித்திருந்தார். ஆனால் மறுபுறம், "திமுக நடத்துவது கூட்டணி ஆட்சி என்று சொல்ல முடியாது. அவர்கள் தனியாகத்தான் ஆட்சி செய்கிறார்கள்" என்கின்றன, அதன் கூட்டணி கட்சிகள். திமுக கூட்டணியில் என்னதான் நடக்கிறது?

`மின்சாரத்தில் தினமும் ஒரு உத்தரவு!’

நம்மிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன். "கொரோனா பாதிப்பு, மத்திய அரசின் பழி வாங்கும் நடவடிக்கைகளுக்கு மத்தியில் திமுக கொடுத்த வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்றிவருவது பாராட்டுதலுக்குரியது. மாணவர்களுக்குக் காலைச் சிற்றுண்டி திட்டம், பெண்களுக்கு உரிமைத்தொகை போன்ற திட்டங்கள் பாராட்டுதலுக்குரியவை.

மின்சாரக் கட்டணம்
மின்சாரக் கட்டணம்

அதேசமயத்தில் மின்சாரக் கட்டணத்தில் தினமும் ஓர் உத்தரவு போடுகிறார்கள். அதாவது கட்டண உயர்வு, பல இணைப்பு வைத்திருந்தால், அதை ஒன்றாக மாற்றுவது. அனுமதி பெற்ற அளவைவிடக் கூடுதலாக மின்சாரம் பயன்படுத்தினால் அதற்கு அபராதம் விதித்தல் போன்றவை. இந்தப் போக்கு மக்கள் மத்தியில் கசப்பை உருவாக்கியிருக்கிறது.

`ஆட்சியை திமுக-தான் வைத்திருக்கிறது!’

சொத்து வரியை உயர்த்தியது மட்டுமல்லாமல், ஒவ்வோர் ஆண்டும் 6% உயரும் என்பது மிகவும் மோசமானது. அரசு வேலைகளில் நிரந்தரப் பணி என்பது இல்லை. உள்ளாட்சி அமைப்புகளில் இருக்கும் தூய்மைப் பணி உள்ளிட்டவற்றை ஒப்பந்த அடிப்படையில் மாற்றுவது என்பது ஏற்புடையது இல்லை. எனவே, கூடுதல் பணியிடங்களை உருவாக்கி, நிரந்தரப் பணிகளை வழங்க வேண்டும்.

சொத்து வரி
சொத்து வரி

திடீரென திருமண மண்டபங்களில் மது விநியோகிக்க திட்டம், 12 மணி நேர வேலைக்கான சட்ட மசோதா போன்றவை தேவையில்லாத விஷயங்கள். இவை அரசுக்கு கெட்ட பெயரை உருவாக்கிருக்கின்றன. அரசியல்ரீதியாக திமுக-வுடன் கூட்டணி வைத்திருக்கிறோம். ஆனால் ஆட்சியை திமுக-தான் வைத்திருக்கிறது.

"பாஜக வந்துவிடக் கூடாது..."

தமிழகத்தில் பாஜக வந்துவிடக் கூடாது என்பதற்காக திமுக கூட்டணியில் இருக்கிறோம். மத்திய அரசு அதிகாரத்தைக் கையில் வைத்துக்கொண்டு பல்வேறு இழுத்தடிப்பு வேலைகளைச் செய்கிறது. ஆளுநர் அதிகாரத்தைக் கையில் வைத்துக்கொண்டு நிறைவேற்றப்படும் மசோதாக்களை கிடப்பில் வைத்திருக்கிறார்.

ஆளுநர் ரவி
ஆளுநர் ரவி

இப்படியான மத்திய அரசின் மோசமான போக்கு, மதவெறி அரசியல், இந்தித் திணிப்பு போன்ற மொழி உரிமை பறிப்பு, ஒற்றைத்தன்மையை இந்தியாவில் திணிக்க முயல்வது போன்றவற்றை எதிர்த்து தமிழகத்தில் வலுவான கூட்டணி இருக்கிறது. அது தொடரும்" என்றார்.

"போர்க்கால அடிப்படையில்..."

காங்கிரஸ் ஊடகத்துறை தலைவர் கோபண்ணா, "திமுக பொறுப்பேற்றபோது 5 லட்சத்து 70 ஆயிரம் கோடி கடன் இருந்தது. பொதுத்துறை நிறுவனங்களும் கடனில் இருந்தன. இருந்தபோதும் பதவியேற்ற அன்றே ஐந்து திட்டங்களில் முதல்வர் கையெழுத்திட்டார்.

கோபண்ணா
கோபண்ணா

கொரோனா தொற்றும், பலியும் அதிகமாக இருந்தபோது போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வால் கடுமையான பாதிப்பைச் சந்தித்துவருகிறார்கள். அதற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. மின்துறையில் 14 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின் இணைப்பு வழங்கப்படவில்லை.

"செய்ய ேண்டிய பணிகள் அதிகமாக..."

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 1.5 லட்சம் பேருக்கு இணைப்பு கொடுத்திருக்கிறார்கள். மகளிருக்கு இலவசப் பேருந்து திட்டம், மாணவர்களுக்குக் காலைச் சிற்றுண்டி திட்டம், உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 போன்றவை மிக முக்கியமானவை. ஆளுநருக்கு எதிராகப் போராடிவருகிறார்கள். இரண்டு ஆண்டுகளில் கொடுத்த வாக்குறுதிகளில் 85% நிறைவேற்றியிருக்கிறார்கள்.

இருப்பினும் செய்யவேண்டிய பணிகள் அதிகமாக இருக்கின்றன. பல இடங்களில் சாலை வசதி மிகவும் மோசமாக இருக்கிறது. பேருந்துகள் போதுமான அளவுக்கு இல்லை. உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக அதிகாரம், நிதி ஒதுக்க வேண்டும். 100 நாள் வேலைத் திட்டத்தை மிகவும் சிறப்பாகச் செயல்படுத்த வேண்டும். மாவட்ட ஆட்சியர் தலைமையில் கண்காணிக்க வேண்டும்" என்றார்.

"கூட்டணி ஆட்சி என்று சொல்ல முடியாது..."

விசிக துணைப் பொதுச்செயலாளர் கௌதம சன்னா, "இதைக் கூட்டணி ஆட்சி என்று சொல்ல முடியாது. அவர்கள் தனியாகத்தான் ஆட்சி செய்கிறார்கள். கடன் சுமையைக் குறைத்தது பெரிய விஷயம்தான். மத்திய அரசின் ஒத்துழைப்பு பெரிய அளவில் இல்லை என்றாலும், நிறைய நலத்திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறார்கள்.

கௌதம சன்னா
கௌதம சன்னா

பெண்களுக்கு உரிமைத்தொகை கொடுப்பது போன்ற விஷயங்கள் தள்ளிப்போவதைப் பார்க்க முடிகிறது. பள்ளி கல்வித்துறையில் தடுமாற்றம் இருக்கிறது. பொறியியல் கல்லூரிகள் நிறைய மூடப்பட்டுவருகின்றன. அதைச் சீர்ப்படுத்த வேண்டும். மற்ற மாநிலங்களிலிருந்து வந்து படிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

"ஆதரவால்தான் வெற்றி..."

நிர்வாக அளவில் மிகவும் சிறப்பாகச் செயல்படுகிறார்கள். அதிமுக ஆட்சியில் தமிழகத்துக்கு என்று இருந்த தனித்தன்மை போய்விட்டது. அதை மீட்டெடுக்கவேண்டிய நிலை திமுக-வுக்கு ஏற்பட்டிருக்கிறது. அதை திராவிட மாடல் என்று கூறி மீட்டெடுத்துவருகிறார்கள். இது ஒரு புதுவகையான நடவடிக்கைதான்.

வேல்முருகன்
வேல்முருகன்

தேர்தலில் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவால்தான் வெற்றி கிடைத்தது. ஆனால் அவர்களுக்கான அங்கீகாரம் அரசு நிர்வாகத்தில் கிடைக்கவில்லை. அனைத்து அரசியல் கட்சிகளும் அரசியல், அரசு அதிகாரத்தை நோக்கித்தான் பயணிக்கின்றன. அந்த எதிர்பார்ப்பு அனைத்துக் கூட்டணிக் கட்சிகளுக்கும் இருக்கும். அதைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்" என்றார்.

"சில சறுக்கல்கள் இருக்கின்றன.."

தவாக தலைவர் வேல்முருகன், "முதல்வர் நல்ல ஆட்சி, நிர்வாகத்தை வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றம் இல்லாமல் வழங்க வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் மத்திய அரசு, ஆளுநர், சில அதிகாரிகள் தலையீடுகளின் காரணமாக தடங்கல்கள் ஏற்படுகின்றன.

12 மணி நேர வேலை
12 மணி நேர வேலை

12 மணிநேர வேலை மசோதா, திருமண மண்டபங்களில் மது விற்பனை, 100 ஏக்கருக்கு மேல் இருக்கும் நீர்நிலைகளைத் தேவைப்பட்டால் பெரு நிறுவனங்களுக்கு வழங்கலாம் என பரந்தூர் விமான நிலையத்துக்காகச் சட்டம் கொண்டுவந்தார்கள். இது சமூக ஆர்வலர்கள், சுற்றுசூழல் ஆர்வலர்கள் மத்தியில் எதிர்ப்பை ஏற்படுத்திருக்கிறது. இதுபோல் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் சில சறுக்கல்கள் இருக்கின்றன.

களையெடுக்க வேண்டும்!

பெண்களுக்கு ரூ.1,000 உடனே வழங்க முடியாது என்று சொன்னபோதும், அது குறித்து அறிவிக்கப்பட்டது. அரசு கடனில் இருந்தாலும் உங்கள் தொகுதியில் முதல்வர், இல்லம் தேடிக் கல்வி, இல்லம் தேடி மருத்துவம் போன்றவை பாராட்டுதலுக்குரியவை. 10 ஆண்டுக்கால அதிமுக ஆட்சியில் அதிகாரிகள்தான் ஆட்சி செய்துவந்தார்கள். இன்னும் ஒருசில இடங்களில் தொடர்கிறது.

முதல்வர் இதில் கவனம் செலுத்த வேண்டும். களையெடுக்க வேண்டிய அதிகாரிகள் எவ்வளவு பெரிய செல்வாக்கில் இருந்தாலும் தூக்கியெறியப்பட வேண்டும். மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று கூட்டணிக் கட்சிகளை அழைத்து மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கூட்டணிக் கட்சியினருடன் ஆலோசனை நடத்த வேண்டும்" என்றார்.