தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, கடந்த 14-ம் தேதியன்று தி.மு.க-வின் ஊழல், சொத்துப் பட்டியல் என ஸ்டாலின், கனிமொழி, சபரீசன், உதயநிதி, தி.மு.க அமைச்சர்கள் குறித்து சில தரவுகளை வெளியிட்டிருந்தார். இதற்கு உடனடியாக எதிர்வினையாற்றிய தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர் உதயநிதி ஆகியோர் தனித்தனியாக அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பி நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் அண்ணாமலையை வலியுறுத்தியிருந்தனர். ஆனால், அண்ணாமலை தரப்பிலிருந்து அதற்கு முடியாது என்றே பதில் வந்தது.

இந்த நிலையில் தி.மு.க எம்.பி கனிமொழி தற்போது அண்ணாமலைக்கு, கலைஞர் டி.வி-யில் தனக்கு பங்கு இல்லை எனக் குறிப்பிட்டு, 48 மணி நேரத்தில் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும், ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.
கனிமொழி சார்பாக வழக்கறிஞர் மனுராஜ் அண்ணாமலைக்கு அனுப்பியிருக்கும் அந்த நோட்டீஸில், ``தமிழக பா.ஜ.க தலைவராகிய நீங்கள் ஏப்ரல் 14-ம் தேதி உங்கள் கட்சித் தலைமையகத்தில் டி.எம்.கே ஃபைல்ஸ் (DMK Files) என்ற பெயரிலான ஓர் அவதூறு காணொலியை பத்திரிகையாளர்கள் முன்பு திரையிட்டிருக்கிறீர்கள்.
அந்த அவதூறு காணொளியில் எனது கட்சிக்காரர் தி.மு.க துணைப் பொதுச்செயலாளரும் எம்.பி-யுமான கனிமொழி கருணாநிதி பெயரைக் குறிப்பிட்டு `அபிடவிட் (Affidavit) படியான சொத்து மதிப்பு 30.33 கோடி ரூபாய், கலைஞர் டி.வி 800 கோடி ரூபாய் என்று மொத்த மதிப்பு 830.33 கோடி' எனப் புகைப்படத்துடன் காட்டப்பட்டிருக்கிறது. இது அவரை களங்கப்படுத்தும் வகையிலான அவதூறு மட்டுமல்ல. அடிப்படை ஆதாரமற்றது, கற்பனையானது, ஆவணங்களில் பதிவுகளில் இருப்பவற்றுக்கு முரண்பாடானது.

கடந்த 10-2-2023 முதல் என் கட்சிக்காரர் கலைஞர் டி.வி-யில் எந்தப் பங்கும் பெற்றிருக்காத நிலையில், எவ்வித அடிப்படைத் தகவல்களையும் சரிபார்க்காமல் என் கட்சிக்காரரின் நற்பெயரைக் குலைப்பதை உள்நோக்கமாகக் கொண்டு இந்த அவதூறு வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது. 2024 மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் நாடு முழுவதும் எதிர்கொண்டு வரும் பிரச்னைகளிலிருந்து மக்களைத் திசைதிருப்பிவிடும் வகையிலும், தி.மு.க-வின் நன்மதிப்புக்கு ஊறுவிளைவிக்கும் நோக்கத்தோடும் இந்த அவதூறு வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த அவதூறு வீடியோவுக்காக உங்கள்மீது சிவில், கிரிமினல் வழக்கு தொடர முகாந்திரம் இருக்கிறது.
இந்த அவதூறு வீடியோவைப் பார்த்து என் கட்சிக்காரரின் நண்பர்கள், நலம் விரும்பிகள் அவரைத் தொடர்புகொண்டு இது குறித்து விசாரித்திருக்கிறார்கள். மேலும், என் கட்சிக்காரரின் தொகுதியிலிருந்து மக்களும், கட்சியினரும் இது தொடர்பாக விசாரித்திருக்கிறார்கள். இதன் மூலம் என் கட்சிக்காரர்மீது தனிப்பட்ட முறையிலும், பொதுவாழ்விலும் வைத்திருந்த மதிப்புக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. மேற்கண்ட அவதூறு பரப்பும் வீடியோவை வெளியிட்டதன் மூலம் இந்திய தண்டனைச் சட்டம் 499, 500 பிரிவுகளின்படி தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்தவர் ஆகிறீர்கள்.

உங்களின் அவதூறு பிரசாரத்தின் மூலம் எனது கட்சிக்காரர் அளவிட முடியாத மன உளைச்சலால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அவதூறு பரப்பும் வீடியோ வெளியிட்ட அண்ணாமலை என் கட்சிக்காரருக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும். மேற்கண்ட அவதூறு வீடியோவை, இந்த நோட்டீஸ் கண்ட 48 மணி நேரத்தில் திரும்பப் பெற்றுக்கொண்டு அனைத்து சமூக தளங்களிலும் அதை அகற்றி, எனது கட்சிக்காரரிடம் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோர வேண்டும். தவறும் பட்சத்தில் உங்கள்மீது எனது கட்சிக்காரர் சார்பாக உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதற்கான எல்லா விளைவுகளுக்கும் தாங்களே பொறுப்பு" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.