Published:Updated:

``தொண்டர்களை இனியும் ஏமாற்றாதீர்கள்..!" - வைகோவுக்கு எழுதிய கடிதம் குறித்து துரைசாமி

சு.துரைசாமி

``எந்த வாரிசு அரசியலை எதிர்த்து வைகோ கட்சி ஆரம்பித்தாரோ அதற்கு நேர்மாறாக, மதிமுக-வில் இன்று குடும்ப அரசியல் தலைவிரித்தாடுகிறது.”- மதிமுக அவைத்தலைவர் சு.துரைசாமி குற்றச்சாட்டு

Published:Updated:

``தொண்டர்களை இனியும் ஏமாற்றாதீர்கள்..!" - வைகோவுக்கு எழுதிய கடிதம் குறித்து துரைசாமி

``எந்த வாரிசு அரசியலை எதிர்த்து வைகோ கட்சி ஆரம்பித்தாரோ அதற்கு நேர்மாறாக, மதிமுக-வில் இன்று குடும்ப அரசியல் தலைவிரித்தாடுகிறது.”- மதிமுக அவைத்தலைவர் சு.துரைசாமி குற்றச்சாட்டு

சு.துரைசாமி

அண்ணா காலத்து அரசியல்வாதியான மதிமுக அவைத்தலைவர் சு.துரைசாமி, அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவுக்கு எழுதியிருக்கும் கடிதம் அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியிருக்கிறது. `30 ஆண்டுக்காலமாக உங்கள் உணர்ச்சிமயமான பேச்சை நம்பி வாழ்க்கையை இழந்த தொண்டர்களை இனியும் ஏமாற்றாதீர்கள். மதிமுக-வுக்கு எதிர்காலம் இல்லை. தாய்க் கழகமான திமுக-வுடன் இணைப்பதே நல்லது’ என அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

வைகோ
வைகோ
தி.விஜய்

அந்தக் கடிதம் குறித்து சு.துரைசாமியிடம் பேசினோம். அப்போது அவர், ``வாரிசு அரசியலை எதிர்க்க வேண்டும். ஈழத் தமிழர்களுக்கு உதவ வேண்டும். ஊழலற்ற அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்று பேசியவர் வைகோ. மிகச்சிறந்த பேச்சாற்றல், நினைவாற்றல்கொண்டவர். அந்த வகையில் அவரின் செயல்பாடும் நேர்மையாக இருக்குமென்று கருதி தமிழகத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் 1993-ம் ஆண்டு இறுதியில் வைகோவை நம்பி திமுக-விலிருந்து பிரிந்து மதிமுக-வில் இணைந்தோம்.

இந்த 30 ஆண்டுகளில் தேர்தல் நேரங்களில் அவர் எடுத்த முடிவுகளாலும், பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர் பேசிய பேச்சுகளாலும் மதிமுக-வுக்குப் பின்னடைவுதான் ஏற்பட்டிருக்கிறது. இது மதிமுக-மீது மக்கள் நம்பிக்கை இழக்கவும் காரணமாக அமைந்தது. எந்த வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி ஆரம்பித்தாரோ, அதற்கு நேர்மாறாக மதிமுக-வில் இன்று குடும்ப அரசியலை ஊக்குவிக்கும் வகையில் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன.

வைகோ
வைகோ

மதிமுக விதிகள்படி, பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியவர்கள் என்று எடுத்துக்கொண்டால் அவைத்தலைவர், பொதுச்செயலாளர், துணைப் பொதுச்செயலாளர், பொருளாளர், ஆட்சிமன்றக்குழு மற்றும் தணிக்கைக்குழு உறுப்பினர்களால்தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். மற்றவை பொதுச்செயலாளரால் நியமிக்கப்படும் பதவிகள்.

சு.துரைசாமி
சு.துரைசாமி

வைகோவின் மகன் துரை வைகோவைக் கட்சிக்குள் கொண்டுவர வேண்டும் என்பதற்காக மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வாக்கெடுப்பு நடத்தக் கூடாது என்று மாவட்டச் செயலாளர்கள் பல பேர் அறிவுறுத்தியும்கூட, ஏதோ ஜனநாயக முறையில் துரை வைகோ தேர்ந்தெடுக்கப்பட்டதைப்போல, வெளி உலகத்துக்கு வைகோ காண்பித்தார்.

12 ஆண்டுகளாக உறுப்பினர்கள் சேர்க்கை நடத்தாமல் கட்சி விதிகளை வைகோ மீறியிருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. 30 ஆண்டுக்காலமாக உங்கள் உணர்ச்சிமயமான பேச்சை நம்பி வாழ்க்கையை இழந்த தொண்டர்களை இனியும் ஏமாற்றாதீர்கள். இனி மதிமுக-வுக்கு எதிர்காலம் இல்லை என்ற காரணத்தால் திமுக-வுடன் இணைத்துவிடுவதே கட்சிக்கும் நல்லது, தொண்டர்களுக்கும் நல்லது.

சு,துரைசாமி
சு,துரைசாமி

திருப்பூர், ஈரோடு மாநகராட்சியில் உட்கட்சித் தேர்தல் அண்மையில் நடைபெற்றது. ஆனால், கட்சி விதி 13 பிரிவு 4-ன்படி, வட்டக் கிளையில் 100 பேருக்கு மேல் இருந்தால்தான், அது வார்டு என்ற நிலையை அடைய முடியும். அப்படியிருக்கையில் உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்றிருக்குமேயானால், அவர்களது பெயரையும், ஆதார் எண்ணையும் கட்சிப் பத்திரிகையான சங்கொலியில் வைகோ வெளியிடத் தயாரா... மேலும், 2022, மார்ச் மாதம் 23-ம் தேதி பொதுக்குழு நடைபெற்றபோது, செய்தியாளர்கள் சந்திப்பில், 1,490 பொதுக்குழு உறுப்பினர்கள் இருப்பதாகவும், அவர்களில் 1,284 பேர் தற்போது கலந்துகொண்டதாக உண்மைக்குப் புறம்பான தகவலை வைகோ தெரிவித்தார்.

இது போன்ற பல கேள்விகளை முன்வைத்து வைகோவுக்கு ஐந்து முறை கடிதம் எழுதியிருக்கிறேன். இதுவரை எந்தக் கடிதத்துக்கும் பதில் வந்ததில்லை. தற்போது, எனது கடிதத்துக்கு பதில் வரும் என காத்துக்கொண்டிருக்கிறேன். பெரியார், அண்ணா கொள்கைகளால் வளர்க்கப்பட்டவன் நான். கட்சி ஆரம்பிப்பதோ அல்லது திமுக-வில் இணையும் எண்ணமோ எனக்கு இல்லை” என்றார்.

வைகோ, சு.துரைசாமி
வைகோ, சு.துரைசாமி
தி.விஜய்

சு.துரைசாமியின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக மதிமுக திருப்பூர் மாநகரச் செயலாளர் ஆர்.நாகராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், ``மதிமுக-வினர் அனைவரும் வைகோவுக்குப் பின்னால் இருக்கிறோம். வைகோவைப் பயன்படுத்திக்கொண்டு இன்று அவரையே துரைசாமி குறை கூறுகிறார். திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முதலில் எதிர்ப்பு தெரிவித்தவரே துரைசாமிதான்.

தற்போது அவர் மதிமுக-வை திமுக கூட்டணியில் இணைக்க வேண்டுமெனக் கூறுவது நகைப்புக்குரியதாக இருக்கிறது. மதிமுக-வில் போலி உறுப்பினர் என அவமரியாதை செய்வது வருத்தமளிக்கிறது. இது தொடர்பாக பொதுச்செயலாளர் வைகோவுடன் தொலைபேசியில் பேசும்போது, பொறுமையாக இருக்க அறிவுறுத்தியிருக்கிறார்" என்றார்.