விருதுநகர் மாவட்டத்தில், நேற்று மாலை லேசான மழை பெய்தது. அந்தச் சமயத்தில், அருப்புக்கோட்டை பணிமனை கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் `TN 67 N 0709' என்ற எண்கொண்ட அரசுப் பேருந்து விருதுநகரிலிருந்து அருப்புக்கோட்டை நோக்கி சென்றுகொண்டிருந்தது. அப்போது, பேருந்தின் மேற்கூரையிலிருந்த விரிசல் காரணமாக மழைநீர் பேருந்தினுள் பல்வேறு இடங்களிலும் ஒழுகிக் கொட்டியது. இதனால் அசௌகரியமாக உணர்ந்த பயணிகள், அவரவர் தங்களின் இருக்கையைவிட்டு எழுந்து தங்களைத் தற்காத்துக்கொண்டனர்.

அப்போது, அரசுப் பேருந்தின் அவலநிலை குறித்து விமர்சித்த பயணிகள் சிலர் பயணச்சீட்டு வாங்க மறுத்து, நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பயணிகள் பயணச்சீட்டு வாங்கமறுத்ததால் ஆத்திரமடைந்த நடத்துனர், கொட்டும் மழையில் பேருந்தை சாலையின் ஓரமாக நிறுத்திட சிக்னல் கொடுத்தார்.
இதனால் சில நிமிடங்கள் சாலை ஓரமாகப் பேருந்து நின்றது. பின்னர், சமாதானத்துக்கு இறங்கிவந்த பயணிகள், காசுகொடுத்து பயணச்சீட்டு வாங்கவும், பேருந்து அங்கிருந்து புறப்பட்டு அருப்புக்கோட்டைக்கு வந்து சேர்ந்தது.

பேருந்துக்குள் மழைநீர் ஒழுகியது தொடர்பாக பயணிகள், பேருந்து நடத்துனரிடம் வாக்குவாதம் செய்தது தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுவருகிறது. அரசுப் பேருந்தின் நிலை குறித்துப் பலரும் விமர்சித்துவருகின்றனர்.