Published:Updated:

"விடியா ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மையால் கள்ளச்சாராய மரணம்!" - எடப்பாடி பழனிசாமி தாக்கு

எடப்பாடி பழனிசாமி

``மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கின்றேன்." - எடப்பாடி பழனிசாமி

Published:Updated:

"விடியா ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மையால் கள்ளச்சாராய மரணம்!" - எடப்பாடி பழனிசாமி தாக்கு

``மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கின்றேன்." - எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்திய ஆறு பேருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர்கள் மயக்கமடைந்த நிலையில், நேற்றிரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில், ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுரேஷ் (65), சங்கர் (50), தரணிவேல் (50) ஆகிய மூன்று பேர் சிகிச்சை பலனின்றி பலியானார்கள். மேலும் முண்டியம்பாக்கம், மரக்காணம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் 13 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சாராயம்
சாராயம்

இந்த விவகாரத்தில் கள்ளச்சாராய வியாபாரி அமரன் கைதுசெய்யப்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தச் சம்பவம் குறித்து அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், ``மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் அருந்தியதால் சுரேஷ், சங்கர், தரணிவேல் ஆகிய மூன்று பேர் மரணம் அடைந்ததாகவும், மேலும் 16 பேர் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் வருத்தத்துக்குரிய செய்திகள் வருகின்றன.

கள்ளச் சாராயம்
கள்ளச் சாராயம்
மாதிரிப் படம்

மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். சிகிச்சைப் பெற்று வருவோரை கவனத்துடனும் அக்கறையுடனும் கவனித்து அவர்களின் உயிரைக் காக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவும் வலியுறுத்துகிறேன். கடந்த 10 ஆண்டுக்கால கழக ஆட்சியில் கள்ளச்சாராயம் என்ற ஒன்றே இல்லாத அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது மீண்டும் இந்த விடியா ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மையால் கள்ளச்சாராய கலாசாரம் தமிழ்நாட்டில் தலைதூக்கியிருக்கிறது.

தமிழக காவல் துறை
தமிழக காவல் துறை

இதே மரக்காணம் பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை தீவிரமாக இருப்பதாக கடந்த ஜனவரி மாதமே செய்திகள் வந்தன. அவற்றை அறிந்தும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தினால் தற்போது நிகழ்ந்துள்ள இந்த மரணங்களுக்கு விடியா அரசு பொறுப்பேற்க வேண்டும். இனியாவது கள்ளச்சாராயத்தை அறவே ஒழிக்க நடவடிக்கைகளை எடுக்க இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன்" எனத் தெரிவித்திருக்கிறார்.