தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தி.மு.க அரசைக் கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், `` பொய்யிலே பிறந்து பொய்யிலே வாழும் தமிழகத்தின் முதலமைச்சரும், அமைச்சர் பெருமக்களும், அவருக்குக் கீழ் பணியாற்றும் ஒருசில உயரதிகாரிகளும், அம்மாவின் ஆட்சியில் தொடங்கப்பட்ட, திட்டமிடப்பட்ட திட்டங்களை, ஈர்த்த முதலீடுகளை, விடியா அரசு கொண்டு வந்ததாக ஸ்டிக்கர் ஒட்டி, கையாளாகாத அரசைக் காப்பாற்ற முயல்கிறார்கள். கடந்த 19 மாத திராவிட மாடல் ஆட்சியின் வெப்பம் தாங்காமல் மக்கள் துடித்துவருவது கண்கூடு. ஆனால், பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின், மக்கள் தொலைபேசியில் தன்னைப் பாராட்டுவதாக தனக்குத்தானே சுய பெருமை பேசுகிறார். இவர் திருவாய் மலர்ந்தருளிய பின்பு கடந்த ஒரு வாரத்தில் அரங்கேறிய சில முக்கியச் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளை இங்கே தோலுரித்துக் காட்டுகிறேன்.

ஒரு பிரபல நடிகர் நடத்திவந்த youtube சேனலை ஆளுங்கட்சியின் வாரிசு ஒருவர் வாங்கியதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. டிசம்பர் மாதம் 8-ம் தேதி அந்த சேனலின் சர்வர் அறையில் விஜயவாடாவைச் சேர்ந்த பாலாஜி என்ற ஊழியர் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். இதை மர்ம மரணம் என்று வழக்கு பதிவுசெய்த காவல்துறை, இதுவரை நேரடியாகக் கள ஆய்வு செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. காவல்துறை செயல்படாமல் மௌனமாக இருப்பதற்கான காரணம் புரியவில்லை. இந்தச் சம்பவத்தில் தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களைச் சட்டத்தின் முன்பு நிறுத்தி தக்க தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே காசங்கோட்டை கிராமத்தில் இரு வகுப்பினரிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக அருண்குமார் என்பவர் உட்பட சிலர் மீது தீண்டாமை மற்றும் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. 25.11.2022 அன்று கைதுசெய்ய அருண்குமார் வீட்டுக்கு காவல்துறையினர் சென்றிருக்கின்றனர். அங்கு அவர் இல்லாததால் 53 வயதான செம்புலிங்கம் என்பவர் உட்பட இருவரைப் பிடித்துக் கடுமையாக தாக்கியதாகவும், பலத்த காயமடைந்த செம்புலிங்கம், டிசம்பர் 8-ம் தேதி இரவு மரணமடைந்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது. வயிற்றில் காவலர்கள் எட்டி உதைத்ததால், வயிற்றில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக அவர் மரணமடைந்ததாகவும், சம்பந்தப்பட்ட காவலர்கள்மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் பல ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தி தக்க தண்டனை பெற்றுத்தர வேண்டும்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள அல்லிக்குளம் பகுதியில் பழைய இரும்பு வியாபாரம் செய்துவந்த முனுசாமி என்பவர் கொலைசெய்யப்பட்டார். கஞ்சா வியாபாரம் மற்றும் கடத்தல்களைப் பற்றி காவல்துறைக்குத் தகவல் கொடுக்கும் இன்ஃபார்மராகச் செயல்பட்டுவந்தவர் மீது ஆத்திரமடைந்த கஞ்சா வியாபாரிகள், அவரை வெட்டிப் படுகொலை செய்திருக்கலாம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 2021-ல் தங்களுடைய பகுதியில் கஞ்சா வியாபாரம் நடைபெறுகிறது என்று காவலர்களுக்கு தகவல்களைக் கூறிய திருப்பூரைச் சேர்ந்த வாசிம் அக்ரம் மற்றும் சோழவரத்தைச் சேர்ந்த சிலம்பரசன் ஆகியோரைத் தொடர்ந்து... கடந்த 3.12.2022 அன்று முனுசாமி என்ற இன்ஃபார்மர் கொலைசெய்யப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. உண்மையில் கஞ்சா போன்ற போதைப்பொருள்கள் நடமாட்டத்தை இந்த விடியா அரசின் ஏவல் துறை கட்டுப்படுத்த நினைக்கிறதா அல்லது ஆளுங்கட்சியினரின் கண்ணசைவுக்கு ஏற்ப நடக்க நினைக்கிறதா என்று சந்தேகம் வருகிறது.

கஞ்சா விற்பனை அறவே தடுக்கப்பட்டதாகவும், கஞ்சா விற்பனை செய்தவர்களின் கைது எண்ணிக்கை, பிடிப்பட்ட கஞ்சாவின் மதிப்பு என மாதம் ஒரு முறை செய்திக்குறிப்பு வழங்கி சுய தம்பட்டமடித்துக்கொள்ளும் இந்த விடியா அரசின் ஏவல்துறை, இதற்கு என்ன பதில் சொல்லும் என்று தெரியவில்லை.
ஏற்கெனவே ராமநாதபுரம் மாவட்டம், வேதாளம் அருகே கடந்த 27.11.2022 அன்று பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கலக்கப்பட்ட, 20 லிட்டர் வாட்டர் கேன்கள் சாதிக் அலி என்பவரின் நாட்டுப் படகு மூலம் இலங்கைக்குக் கடத்தபிருப்பதை கடற்படை போலீஸார் தடுத்து குற்றவாளிகளைக் கைதுசெய்தனர்.

இதில் சம்பந்தப்பட்ட கீழக்கரை நகராட்சி 19-வது வார்டு தி.மு.க கவுன்சிலர் சர்ப்ராஸ் என்பவரும், கீழக்கரை தி.மு.க முன்னாள் கவுன்சிலர் ஜெயினுலாபிதீன் என்பவரும் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். தவறிழைத்தவர்கள்மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி நானும் அறிக்கை வெளியிட்டிருந்தேன். உடனே இவை அனைத்தும் சில ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நுண்ணுயிர் கலந்த உர வாட்டர் கேன்கள் என்று செய்திகள் வெளிவந்தன.
சில ஆயிரம் மதிப்புள்ள வாட்டர் கேன்கள் ஏன் வேறு மாநிலங்களிலிருந்து, சென்னை வழியாக, ராமநாதபுரத்துக்குக் கடத்தப்பட்டு, பின்னர் இலங்கைக்குக் கடத்தப்படவிருந்தன என்ற மிகப்பெரிய கேள்விகளுக்கு இந்த ஏவல்துறையிடமிருந்து தகுந்த பதில் இல்லை.

இந்த நிலையில், கடந்த 12.12.2022 அன்று மீண்டும் ராமநாதபுரம் மாவட்டத்தில், மண்டபம் என்ற இடத்தில் சுமார் 160 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா ஆயில், கிரிஸ்டல் மெத்தெம்பேட்டமைன் போன்ற போதைப்பொருள்களை மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் கைப்பற்றியிருக்கின்றனர் என்று நாளிதழ்களில் செய்திகள் வந்திருக்கின்றன. சென்னையிலிருந்து இலங்கைக்குக் கடத்திச் செல்வதற்காக, இந்த போதைப்பொருள்களைக் கடத்திவந்த சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த பால்ராஜ், தனசேகர் ஆகிய இரண்டு பேரை மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினர் கைதுசெய்திருக்கின்றனர்.
சென்னை முதல் ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வரையுள்ள அத்தனை சோதனைச்சாவடிகளையும் கடந்து எந்தவிதத் தடையும் இன்றி சுமார் 160 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள்கள், மண்டபம் வந்தது எப்படி என்று மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினர் ஆச்சர்யப்படுகின்றனர்.

எனவே இந்த விடியா அரசின் ஏவல்துறை, `வாய்ச்சொல்லில் வீரரடி' என்று இல்லாமல் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், சட்டம்-ஒழுங்கைக் காக்கும் வேலையைப் பார்க்காமல், மக்கள் தன்னை பாராட்டுவதாகக் கனவு உலகில் மிதந்து, மணல் கோட்டை கட்டிக்கொண்டிருக்கிறார்.
தன் குடும்பத்தின் கையில் மட்டுமே அரசு அதிகாரம் இருக்க வேண்டும் என்ற சர்வாதிகார மனப்பான்மையுடன் செயல்படுகிறார். தற்போதைய இந்த அவலம் நிர்வாகத் திறனற்ற விடியா தி.மு.க ஆட்சியில் தொடருமேயானால் தி.மு.க குடும்பத்தின் ஆக்டோபஸ் ஆட்சியால் பாதிக்கப்படும் மக்கள் கொதித்தெழுந்து ஆட்சியாளர்களை விரட்டியடிப்பார்கள் என்று எச்சரிக்கிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.