சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் (MIDS), இந்திய சமூக அறிவியல் ஆய்வுக் கழகத்தின் (ICSSR) உதவியுடன், ‘மாநிலம், சமூகம், சந்தை - இயக்கவியல் புரிதலும் இடைநிலை வெளிகளும்’ (The State, Society and Market: Understanding the Dynamics and Interface) என்ற ஐந்து நாள் பட்டறையை நடத்துகிறது.

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று மாலை நடந்த இந்தப் பட்டறையின் தொடக்க நிகழ்வில், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் சிறப்புரை ஆற்றினார். சமூக அறிவியலுக்கு முக்கியப் பங்களிப்புகளை வழங்கிய, சில மாதங்களுக்கு முன்பு காலமான சமூகவியலாளர் கெயில் ஓம்வேதித்தின் நினைவாக இந்த உரை அமைந்தது.
`ஜனநாயகம் மற்றும் இந்தியப் பொருளாதார வளர்ச்சி’ என்ற தலைப்பில் தனது உரையைத் தொடங்கிய ரகுராம் ராஜன், ஐந்து அம்சங்களைத் தன்னுடைய உரையில் கவனப்படுத்தினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS“முதலாவதாக அரசாங்கம் என்பது மக்களை முன்னிறுத்திச் செயல்படவேண்டும். சமூகத்தின் அனைத்து தரப்பினரும் போட்டியிட பொதுவான ஒரு தளம் அமைக்கவேண்டும். பெண்களுக்கும் பிற்பட்ட சமூகத்தினருக்கும் போதிய அளவு வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும். தாழ்த்தப்பட்ட சமூகம் பலவீனமானதாகத்தான் இருக்கும். உலகில் வேகமாக வளர்ந்து வரும் சமூகங்கள் எல்லாம் சக மக்களை மோசமாக நடத்தும் பழக்கத்தை அறவே ஒழித்து வருகின்றன. இதனை நாமும் கையில் எடுக்க வேண்டும். அரசாங்கத்துக்கும் சாதாரண மக்களுக்கும் உள்ள இடைவெளியைத் தகர்த்து நேருக்கு நேர் தொடர்பு வலுப்பட வேண்டும். சமீபத்தில் 2022-23 -க்கான தமிழக நிதிநிலை அறிக்கையில் பெண் குழந்தைகளுக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் மாத ஊக்கத் தொகைத் திட்டம் வரவேற்கத்தக்கது. இதனைக் கருத்தில் கொண்டு பெண் குழந்தைகள் பள்ளிக்கு அதிகளவில் அனுப்பப்படுவார்கள். எனவே, மக்களை முன்னிறுத்தி ஒரு அரசாங்கம் செயல்படுதல் அவசியம்,” என்றார்.

“இரண்டாவதாக அரசாங்கம் என்பது விமர்சனங்களை வரவேற்கும் அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும். மூன்றாவதாக, அரசாங்கம் தொழில்நுட்ப வளர்ச்சியின் அங்கமாக ‘சிப்’களின் உற்பத்தியை ஊக்குவித்தல் வேண்டும். தற்காலிகத் தொழில் வளர்ச்சியைக் கணக்கில் கொண்டால் குவால்காம் (qualcomm), ஸ்னாப்டிராகன் (snapdragon) போன்ற தொழில்நுட்ப மென்பொருள் நிறுவனங்களை நாமே வடிவமைத்திருக்க வேண்டும். ‘சிப்’கள் தயாரிப்பில் வேகமெடுத்தல் பொருளாதார வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கும்,” என்றார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
“நான்காவதாக அனைத்து விஷயங்களிலும் ஒரு கற்றல் அணுகுமுறையை அரசாங்கம் கடைப்பிடிக்கவேண்டும். இதன் வெளிப்பாடாக அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும். அதிகாரப் பரவலாக்கம் என்பது மத்தியிலிருந்து மாநிலத்திற்கு மட்டுமன்றி, மாநிலங்களிலிருந்து பிரியும் மாநகராட்சிகள், நகராட்சிகள், ஊராட்சிகள் என அனைத்துப் பிரிவுகளுக்கும் இருத்தல் வேண்டும். கனடா போன்ற நாடுகளில் ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தால் அதனை முதலில் சமூக அளவில் சிறிய சோதனைகளுக்குப் பிறகே பெரிய அளவில் கொண்டு செல்கின்றனர். பொருளாதார வளர்ச்சியைக் கண்டறிய இம்முறை பயனளிப்பதாக இருக்கும்,” என்றார்.

“இறுதியாக, பன்னாட்டு ஏற்றுமதி-இறக்குமதி விதிமுறைகளை மாற்றி அமைக்க வேண்டும். உதாரணத்திற்கு, இந்திய மாணவர்கள் வெளிநாடு சென்று மருத்துவம் பயில்கிறார்கள் என்றால் அவர்கள் அந்நாட்டில் பணியைத் தொடங்கும் முன் நம் நாட்டுக் குடிமக்கள் என்ற அடிப்படையில் தங்கள் சேவைகளுக்கான சேவை வரியைப் பெறும்படி ஓர் அமைப்பை உருவாக்க வேண்டும். பொருட்களுக்கான ஏற்றுமதி வரியைப் போல் சேவைகளுக்கான ஏற்றுமதி வரி என்பதற்கான திட்டமே இது. சேவைகளை முன்வைத்து உலகமயமாக்கல் என்பதே இதன் நோக்கம்,” என இந்தியா போன்ற ஜனநாயக நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்களாக ரகுராம் ராஜன் தன் உரையில் கவனப்படுத்தினார்.
அமெரிக்காவில் சிகாகோ பல்கலைக்கழகத்தின் நிதித்துறைப் பேராசிரியராகப் பணியாற்றிவரும் ரகுராம் ராஜன், தமிழ்நாட்டின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
-சுபஸ்ரீ
(பயிற்சிப் பத்திரிகையாளர்)