பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநரிடம் இருக்கிறது. இந்த நிலையில், பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை மாநில அரசு நியமிக்கும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சட்டப்பேரவையில், "தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமனத்தில் மாநில அரசு அதிகாரம் பெற்றுள்ளது.

கர்நாடக மாநில சட்டத்தின்படி துணைவேந்தர்கள் மாநில அரசின் இசைவுடன்தான் நியமிக்க முடியும். எனவே, அதன் அடிப்படையில், 1923-ம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகச் சட்டம் உட்பட, 13 பல்கலைக்கழகங்களில் சட்டங்கள் திருத்தப்படவுள்ளன. அதில், அண்ணா பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், திருவள்ளுவர் பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் மற்றும் ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்டவற்றின் சட்டங்கள் திருத்தப்படவுள்ளன.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இனி மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் தமிழ்நாடு அரசு நியமிக்கும் வகையில் சட்டத் திருத்தம் தாக்கல் செய்யப்படுகிறது. மேலும், பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் நீதித்துறையைப் பொறுப்பில் கொண்டுள்ள அரசுச் செயலாளரை ஆட்சிக்குழு உறுப்பினராகவும் நியமிக்க வழிவகை செய்யப்படும்” எனக் குறிப்பிட்டார்.
இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், ``மாநில அரசை மதிக்காத ஆளுநரின் போக்கு மக்கள் ஆட்சிக்கு விரோதமானது. மாநில அரசை ஆளுநர் மதிக்காமல் செயல்படும் போக்கு தலைதூக்கியிருக்கிறது” என்றார்.
இன்று உதகையில் ஆளுநர் ஆர்.என் ரவி.தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறும் நிலையில், இந்தச் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.