ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகி, வழக்கம்போல மாணவிகளே அபார சாதனையாளர்களாக அறியப்பட்டிருக்கின்றனர். மாநில அளவில் முதலிடம் (600-க்கு 600 மதிப்பெண்கள்) பெற்ற திண்டுக்கல், அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி நந்தினி நேற்று முன்தினம் சென்னைக்கு வந்தார். முதல்வரை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். உயர்கல்விச் செலவை அரசு ஏற்கும் என்று நந்தினியை உற்சாகப்படுத்தி முதல்வர் அனுப்பிவைத்தார். இதன் அடுத்த நிகழ்வாக ப்ளஸ் டூ தேர்வில் மாநில அளவில் ரேங்க் பெற்ற மாணவ, மாணவிகள் அனைவரையும் அழைத்து அவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நடத்தியிருக்கிறார்.
ஆளுநர் மாளிகையில் நடந்த இந்த நிகழ்ச்சிக்காக தென்காசி மாவட்டம், கடையநல்லுாரிலிருந்து மாணவி ஷப்ரீன் இமானா, தன்னுடைய பெற்றோருடன் நேற்று சென்னைக்கு வந்தார். அவர், ராஜ் பவனில் ஜனாதிபதி, பிரதமர் போன்ற மிக முக்கியப் பிரமுகர்கள் தங்குவதற்காகக் கட்டப்பட்டிருக்கும் விருந்தினர் மாளிகையில் தங்கவைக்கப்பட்டார்.

விதிமுறைப்படி இங்கே தனி நபர்கள் தங்குவதற்கு அனுமதியில்லை என்று ராஜ் பவன் அதிகாரிகள், ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டுசென்றனர். அவர்களிடம், ‘மாநில அளவில் ப்ளஸ் டூ தேர்வில் ரேங்க் பெற்ற மாணவி. ஏழை கூலித்தொழிலாளியின் குடும்பம். தமிழ் வழியில் கல்வி பயின்று சாதனை படைத்திருக்கிறார். அவருக்காக விதிமுறைகளைத் தளர்த்துவதில் தவறே இல்லை’ என்று ஆளுநர் உறுதிபடத் தெரிவித்த பிறகே, மாணவி ஷப்ரீன் இமானா குடும்பத்துக்காக ராஜ் பவனிலுள்ள விருந்தினர் மாளிகை திறக்கப்பட்டிருக்கிறது.
மாணவி ஷப்ரீன் இமானா குறித்து கடையநல்லுார் ஹிதாயத்துல் இஸ்லாம் பள்ளி தலைமை ஆசிரியர் ஆமீன், ``எங்களது பள்ளி 99 ஆண்டுகளைக் கடந்து 100 ஆண்டை நோக்கிப் பயணிக்கிறது. மாணவி ஷப்ரீன் இமானா, எங்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்று ப்ளஸ் டூ தேர்வில் 600-க்கு 590 மார்க் பெற்றிருக்கிறார். தமிழ் வழியில் கல்வி பயின்று மாநில அளவில் முதலிடமும், ஒட்டுமொத்த அளவில் மாநிலத்தில் மூன்றாம் இடமும் பெற்றிருக்கிறார். தென்காசி மாவட்டத்தில் தமிழ் வழியில் முதல் ரேங்க் பெற்றிருப்பதுடன், ஃபர்ஸ்ட் குரூப்பில் பயின்று முதல் இடம் பெற்றவர் இவரே. இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் தலா 100 மார்க்குகள், கணிதத்தில் 99, ஆங்கிலத்தில் 96, தமிழில் 95 மார்க்குகளைப் பெற்றிருக்கிறார்.

ராஜ் பவனிலிருந்து, நேற்று (9-ம் தேதி) பிற்பகலில், ஆளுநருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு மாணவி ஷப்ரீன் இமானாவை பெற்றோருடன் சேர்ந்து சென்னைக்கு அனுப்பிவையுங்கள் என்று தகவல் வந்தது. அவர்களை எப்படி உடனடியாக சென்னைக்கு அனுப்பிவைப்பது என்று நாங்கள் யோசிப்பதற்கு முன்பே, `மாணவியின் போக்குவரத்துச் செலவை ராஜ் பவனே ஏற்றுக்கொள்ளும். நீங்கள் கவலைப்பட வேண்டாம்' என்றனர். உடனே கார் பிடித்து மாலை 6 மணிக்கு அனுப்பிவைத்தோம். மாணவியின் தந்தை சிந்தாமதார், கூலித்தொழிலாளி. முதுகெலும்பு பிரச்னையால் வீட்டில் படுக்கையில் இருக்கிறார். எனவே, மாணவியுடன் அவருடைய தாய் சிராஜினிகா, மாமா அகமது அப்சல் ஆகியோர் காரில் இன்று (10-ம் தேதி) காலை 7 மணிக்கு ராஜ் பவனுக்கு வந்து சேர்ந்துவிட்டதாகவும், அங்கேயே அவர்களுக்கு தங்கி, தயாராக ரூம் கொடுத்திருப்பதாகவும் கூறினர். எங்கள் மாணவிக்கான இந்த அங்கீகாரம் மிகப் பெருமையாக இருக்கிறது" என்றார்.