அன்னையர் தினத்தை முன்னிட்டு இன்று கிண்டியில் இருக்கும் ராஜ் பவனில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர். அப்போது சிறப்புரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, ``அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள். இன்று ராஜ் பவன் ஆசீர்வதிக்கப்பட்டு புனிதமானது. ஏனெனில் ஏராளமான தாய்மார்கள் இங்கு வருகை தந்திருக்கின்றனர். இந்த ராஜ் பவன் பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கிறது. நாங்கள் அடிக்கடி பல நிகழ்வுகளை ஏற்பாடு செய்கிறோம்.

ஆனால், இது தனித்துவமானது. இந்த நிகழ்ச்சி நமது தாய்மார்களுக்கு மிகவும் பணிவான வகையில் தமது நன்றியை வெளிப்படுத்துவதாக அமைகிறது. இங்கு இருக்கும் நமது தாய்மார்களுக்கும், உலகின் பிற பகுதிகளில் இருப்பவர்களுக்கும் நன்றி செலுத்துவோம். தாய்மார்கள் அடிப்படையில் படைப்பாளிகள். என் அம்மா இல்லாவிட்டால், நான் இங்கு இருந்திருக்க மாட்டேன். நமது தாய்க்கு நன்றி தெரிவிக்க ஒரு நாளை நாம் தேர்ந்தெடுக்கிறோம்.
ஆனால் உண்மை என்னவென்றால், நாம் எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடியிலும், அந்தத் தாய்க்கு நன்றி செலுத்திக்கொண்டே இருக்க வேண்டும். அந்தத் தாயால்தான் நாமெல்லாம் இங்கே இருக்கிறோம். உலகெங்கிலுமுள்ள தாய்மார்கள் தனித்துவமானவர்கள், மொழி, இனங்களைக் கடந்து எல்லா இடங்களிலும் தாய் என்பவர், ஒரே மாதிரியாகவே இருப்பார். ஏனென்றால் தாய்மார்கள் அன்பு, இரக்கம், உணர்ச்சிவசப்படுதலுக்குப் பேர் போனவர்கள். ஒரு குழந்தை பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று பெரிய மனிதனாகி அறிஞர் சொல் கேட்டு அறிவாளியாக வளரும்போது, மனிதனாகிறது. அந்த வளர்ச்சிக்கு உதவுவது உணர்ச்சியே.

இந்த உணர்ச்சிபூர்வமான போதனை நம் தாயிடமிருந்தே நமக்குக் கிடைக்கிறது. என் அம்மா படிப்பறிவு இல்லாதவர், அது முக்கியமில்லை. ஆனால், அவர் ஒரு தாய். இது மிகவும் தூய்மையான மற்றும் நம்மைத் தூண்டி எழுப்பக்கூடிய உறவு. நாம் தெய்விக அல்லது தெய்விகத்தைப் பற்றி சிந்திக்க முயலும்போது, அதில் நீங்கள் தாயின் பிரதிபலிப்பைக் காணலாம். நான் பராசக்தியின் பக்தன். நான் கண்ணை மூடிக்கொண்டால், என் மனக்கண்களில் தெரிவது என்னுடைய தாயின் உருவமே. என்னை எல்லா வகையிலும் வடிவமைத்தவள் என் தாய்.
என் சுக, துக்கங்களின் எல்லா தருணங்களிலும் அவர் நிறைந்திருப்பார். ஒருவர் எப்படி வளர்ந்தாலும், அவருடைய தாய் அவரோடு உயிருடன் இருப்பாரானால், அந்த நபர் தன்னை இளைப்பாற்றிக்கொள்ள விரும்பும் நேரத்தில் அவருக்காகவே அவரின் தாயின் மடி காத்திருக்கும். தாய் தரும் அந்த பேரின்ப ஆறுதல் நித்தியமானது. அந்த வாய்ப்பு அமைந்தால் உங்கள் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் என்ற நம்பிக்கையை நினைவில் கொள்ளுங்கள். அதுவே ஒருவர் அன்னையை இழந்திருப்பாரானால், அந்த நபர் தமக்கு வயதாகிவிட்டது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். நமக்கு அப்பா இருப்பார்.

அவரும் முக்கியம்தான். ஆனால், அம்மாவின் இடத்தை வேறு எவராலும் நிரப்ப முடியாது. ஒரு குழந்தை பேசத் தொடங்கும்போது உச்சரிக்கும் முதலாவது வார்த்தை 'அம்மா'. துரதிஷ்டவசமாக, நாம் ஒரு நாகரிக நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறோம், இன்றைய காலகட்டத்தில் குடும்பங்கள் உடைந்துவருகின்றன. தாய்மார்கள் கவனிப்பாரற்றுக் கிடக்கும் துரதிஷ்டவசமான நிலை இருக்கிறது. குழந்தைகள் வளர்ந்து, தொலைதூர இடங்களுக்குப் பறந்து செல்கின்றனர். தாய்மார்கள் அல்லது பெற்றோர்கள் சொந்த நாட்டில் தனியாகவிடப்படுகின்றனர்.
விலங்குக்கும் மனிதனுக்குமுள்ள வித்தியாசமே, விலங்குகள் தன் குட்டிமீது அளவற்ற அன்பைச் செலுத்தும். ஆனால், அந்தக் குட்டி வளர்ந்து தனியாக ஓடவோ, இயங்கவோ, பறக்கவோ ஆரம்பித்தவுடன் அந்தத் தாய் விலங்குக்கும் குட்டிக்கும் இடையிலான பந்தம் குறைந்துவிடுகிறது. அந்த உணர்விலிருந்து வேறுபட்டு அந்த தாய்-பிள்ளை பாசத்தைப் பிணைத்து வைத்திருப்பதுதான் விலங்குக்கும் மனிதனுக்குமிடையேயுள்ள வித்தியாசம். காரணம், நமது தாய், தன் அன்பையும் அக்கறையையும் தன் கடைசி மூச்சுவரை குறைவின்றி தொடர்வார்.

இன்று இளையராஜா இசையமைப்பில் யேசுதாஸ் பாடிய `அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே' என்ற பாடலை நிகழ்ச்சியின்போது கேட்டேன். அம்மாவின் ஆசி இல்லாமல் எந்த உயரத்தையும் நம்மால் எட்ட முடியாது. இன்று ராஜ் பவன் சில தாய்மார்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறது. இந்தத் தாய்மார்களைப் போற்றுவதன் மூலம், ராஜ் பவன் தூய்மைப்படுத்தப்பட்டதைப்போல உணர்கிறேன். இங்கு ஒரு யாகம் நடந்ததுபோல இருக்கிறது. நாம் எங்கிருந்தாலும், நம் வாழ்வின் எந்த நிலையிலும் நம் தாயைக் கைவிடக் கூடாது என்பதை நினைவில் கொள்வோம்" என்றார்.