தமிழ்நாட்டில் இந்துத்துவா, சனாதன தர்மம் போன்ற சர்ச்சைக் கருத்துகளை ஆங்காங்கே பேசிவரும் ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசின் மசோதாக்களை நிலுவையில் வைத்தல் போன்ற அரசுடனான நிர்வாக மோதல் போக்குகளைத் தாண்டி அடுத்தகட்டமாக மாணவர்களிடையேயும் அவ்வப்போது பேசிவருகிறார். ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ரவி ஒப்புதலளித்த பிறகு, அரசுக்கும் ஆளுநருக்கும் பெரிதாக மோதல் எதுவும் அரங்கேறாத நிலையில், ஆளுநர் மாளிகை வரவு, செலவு விவகாரத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாக நிதியமைச்சர் குற்றம் சாட்டிய நிலையில், மீண்டும் மோதல்போக்கு முளைவிட ஆரம்பித்திருக்கிறது.

இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி, பிரபல ஆங்கில ஊடகமான `டைம்ஸ் ஆஃப் இந்தியா'வுக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் தமிழ்நாடு அரசின் கல்வித்தரத்தைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார். இந்த நேர்காணலில் பல்வேறு கேள்விகளுக்கு ஆளுநர் ரவி பதிலளித்தார். அவற்றில் சில கேள்வி பதில்கள்...
``தி.மு.க அரசின் ஒட்டுமொத்த ஆட்சிக் குறித்து உங்கள் கருத்து என்ன?”
``அரசின் செயல்பாடு குறித்து நான் கருத்து கூறுவது சரியாக இருக்காது. மக்கள்தான் அதைக் கூற வேண்டும். இருப்பினும் அரசின்மீது எனக்கிருக்கும் கவலை என்னவென்று கேட்டால், அது மனித வள தரத்தில் ஏற்பட்டிருக்கும் சரிவு என்று கூறுவேன். நாட்டிலேயே அதிகளவில் பொறியாளர்களை உருவாக்குபவர்களாக தமிழ்நாடு இருக்கலாம். இருப்பினும், இந்த ஆண்டு பொறியாளர்களில் 90 சதவிகிதம் பேர் வேலையில்லாமல் இருக்கின்றனர். ஒரு காலத்தில் தமிழ்நாடு சிறந்து விளங்கியது. ஆனால், இன்று சரிவை நோக்கி நகர்கிறது. எந்தக் கட்சி ஆட்சியில் இருக்கிறது என்பது முக்கியமல்ல. நாடு முன்னேற வேண்டும். மக்கள் திறமையானவர்களாக இருந்தால்தான் அதை அடைய முடியும். அதற்குத் தரமான கல்வியில் அதிக முதலீடு செய்ய வேண்டும்.”

``ஆளுநர்கள் மாநில ஆட்சியில் தலையிடுவதாகக் குற்றம் சாட்டப்படுவது உங்கள் பார்வை என்ன?”
``எல்லை மீறுகிறார் என்பது தவறான குற்றச்சாட்டு. அவ்வாறு சொல்வது முற்றிலும் அபத்தம். எனக்குத் தெரிந்தவரை ஆளுநர் வரம்பு என்பது அரசியலமைப்புச் சட்டத்தால் வரையறுக்கப்பட்டது. அரசியலமைப்பு ஒவ்வொருவருக்கும் ஒரு கோடு வகுக்கிறது. மாநிலத்துக்குள் அந்த அரசாங்கம் அந்தக் கோட்டைக் கடக்க முற்பட்டால், அதைக் கட்டுப்படுத்துவது ஆளுநரின் கடமை. ஆட்சியின் அனைத்துக் கருவிகளும் மாநில அரசிடம் இருக்கின்றன, ஆளுநரிடம் எதுவும் இல்லை. இப்போது, ஆளுநரின் கடமை என்பது அரசியலமைப்பு வகுத்த கோடுகளுக்கு மதிப்பளிப்பதாகும். எனவே, மாநில அரசு எல்லை மீற முயன்றால், மாநிலத்தைக் கட்டுப்படுத்துவது ஆளுநரின் கடமை.”
``தமிழகத்திலிருந்து வெளியேறும் சிவில் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை ஏன் குறைந்திருக்கிறது?”
``அதற்கு முக்கியக் காரணம், நம் கல்வியின் தரம் மிகவும் மோசமாகிவிட்டது. 1950, 1960, 1970-களின் முற்பகுதியில் நமது பல்கலைக்கழகங்களின் தரம் உயர்ந்ததாக இருந்தது. சென்னைப் பல்கலைக்கழகம் முதல் 10 இடங்களுக்குள் இருந்தது. இன்று 100-வது இடத்தைப் பிடித்திருக்கிறது. கல்வி, அடிப்படை அறிவு, வாசிப்பு, எழுத்து மட்டுமே இன்று போதாது. இது போட்டி நிறைந்த உலகம். கல்வியும், கற்பித்தலும் தரமானதாக இருக்க வேண்டும். நம் சிறுவர் சிறுமிகளுக்கு அது மறுக்கப்படுகிறது. இன்று, தமிழ்நாட்டில் நம் இளைஞர்கள் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். நாட்டுக்கு வெளியே என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளவில்லை. அவர்களுக்கு வழிகாட்டுதல் கிடைக்கவில்லை. இதுவே சிவில் சேவைகளில் மோசமான செயல்திறனாகப் பிரதிபலிக்கிறது.”

``எத்தனை மசோதாக்கள் இப்போது உங்களிடம் நிலுவையில் இருக்கின்றன?”
``2022-ல், எனக்கு வந்த 59 மசோதாக்களில் 48-ஐ அனுப்பிவிட்டேன். மூன்று மசோதாக்கள் குடியரசுத் தலைவருக்கு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஒரு மசோதாவை அரசு திரும்பப் பெற்றுவிட்டது. எட்டு மசோதாக்களுக்கான ஒப்புதல் நிறுத்தப்பட்டுவிட்டது. எனவே, 2022-க்கான மசோதா எதுவும் நிலுவையில் இல்லை. 2023-ல் ஏழு மசோதாக்கள் வந்தன. ஏழுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டது. இதற்கிடையில், மசோதாவை நிறுத்திவைத்தாலே அது அவ்வளவுதான் என ஆளுநர் கூறியதாகப் பல நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன. மேலும், சட்டசபையில் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டால் அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற தோற்றம் உருவாக்கப்பட்டது.
அரசியலமைப்பின் 200-வது பிரிவைப் படித்துப் பார்க்க வேண்டும். அதன்படி சட்டப்பேரவையிலோ அல்லது சட்டமன்றக் குழுவிலோ ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டால் ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதன் பின்னர், அதற்கு ஒப்புதல் அளிப்பதா, நிலுவையில் வைப்பதா, குடியரசுத் தலைவருக்கு பரிசீலனைக்கு அனுப்புவதா என்பதை ஆளுநர் அறிவிப்பார்.”

``முதல்வர் ஸ்டாலினுடனான உங்களின் தனிப்பட்ட உறவு எவ்வாறு இருக்கிறது?”
``உண்மையில் தனிப்பட்ட முறையில் அவர்மீது எனக்கு மரியாதை உண்டு. அவர் ஒரு நல்ல மனிதர். அவரிடம் நான் மிகவும் அன்பாக நடந்துகொள்வேன். அவரும் என்னிடம் அவ்வாறே அன்பாக நடந்துகொள்வார். தனிப்பட்ட முறையில் எங்களுக்கிடையிலான உறவு சுமுகமாக இருக்கிறது.”