டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி நிறுவனத்துக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்தப் பேட்டி குறித்து, தமிழ்நாடு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை, கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் தங்கள் கண்டனங்களைப் பதிவிட்டிருந்தனர். அந்த வரிசையில் ம.தி.மு.க தலைவர் வைகோ, ஆளுநர் ரவியைச் சாடி அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், ``டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளேட்டுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்தப் பேட்டி இன்று வெளியாகியிருக்கிறது.

அந்தப் பேட்டியில் `திராவிட மாடல்' குறித்து அவர் விமர்சித்திருக்கிறார். `திராவிட மாடல் என்பது காலாவதியான கொள்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சி. திராவிட மாடல் என்று எதுவும் இல்லை. அது வெறும் அரசியல் முழக்கம் மட்டுமே. திராவிட மாடல் கொள்கை ‘ஒரே நாடு, ஒரே பாரதம்’ கொள்கைக்கு எதிரானது. இந்தக் கொள்கை சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்கள், வரலாற்றை மறைக்கப் பார்க்கிறது' என்று கூறியிருக்கிறார். ஆர்.என்.ரவி இந்தப் பேட்டியில் திராவிட இயக்கத்தின்மீது புழுதியை வாரித் தூற்றியிருப்பது விஷமத்தனமானது. கடும் கண்டனத்துக்குரியது.
மனுதர்ம நீதியை மறுத்து மனித நீதிக்கான குரல், சமூகநீதி, சமத்துவம், பெண் உரிமை, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை மக்களின் நலன், மொழி, இனம், பண்பாட்டு உரிமை, அரசியல், பொருளாதாரத்துறைகளில் தமிழ்நாட்டின் உரிமைப் பாதுகாப்பு, மாநில சுயாட்சிக்கான குரல் இவற்றையெல்லாம் உள்ளடக்கியதுதான் திராவிட மாடல். இதை வெற்று முழக்கம் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி முகாரி ராகம் பாடுவது அவரது இந்துத்துவ ஆதிக்க மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது.

ஆர்.எஸ்.எஸ் கோட்பாடுகளை ஆர்.என்.ரவி ஆளுநர் மாளிகையிலிருந்துகொண்டு உளறிக் கொட்டக் கூடாது. ஆளுநர் பதவியைவிட்டு வெளியேறிப் பேசட்டும். திராவிட இயக்கத்தின் கருத்தியலை இழிவுபடுத்திவரும் ஆளுநர் ஆர்.என்.ரவி மன்னிப்புக் கேட்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.