நாடாளுமன்ற அலுவல் மொழிக்குழுவின் 37-வது கூட்டம் நேற்று நடைபெற்றது. அதற்கு தலைமை வகித்து பேசிய அமித் ஷா, ``ஆங்கில மொழிக்கு பதிலாக இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும். உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல... அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. வெவ்வேறு மொழிகளைப் பேசும் மாநிலங்களிலுள்ள மக்கள், ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ளும்போது, அது `இந்திய மொழியில்' இருக்க வேண்டும். இந்தி மொழியின் முக்கியத்துவத்தை அதிகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்தித் தேர்வுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அமைச்சரவையின் 70 சதவிகித நிகழ்ச்சி நிரல் இந்தியில் தயாரிக்கப்பட்டுள்ளது'' என்றார்.

இந்தக் கூட்டத்தில் மத்திய உள்துறை இணை அமைச்சர்கள் அஜய் குமார் மிஸ்ரா, நிசித் பிரமானிக், அலுவல் மொழி நாடாளுமன்றக் குழுவின் துணைத் தலைவர் பர்த்ருஹரி மஹ்தாப் மற்றும் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். பாஜக அரசு இந்தி மொழியை மக்களின் மீது திணித்துவருவதாகக் குற்றச்சாட்டுகள் இருந்து வரும் நிலையில் அமித் ஷாவின் இந்தப் பேச்சு விவாதமாகியிருக்கிறது.
