தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி பொறுப்பேற்றது முதல் பல்வேறு சர்ச்சைக் கருத்துகளைத் தெரிவித்துவருகிறார். சமீபத்தில் `` `தமிழ்நாடு’ என்பதைவிட `தமிழகம்’ என்று குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்’’ எனத் தெரிவித்தது விவாதமானது. இதற்கிடையில், சட்டமன்றத்தில் நடந்த சலசலப்பும், அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் பேசிய பேச்சும் அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பின.

இந்த நிலையில், `தமிழ்நாடு ஆளுநர் மாளிகை’ என்று குறிப்பிட்டு, ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்க அறிக்கை வெளியாகியிருக்கிறது. அதில், ` 2023, ஜனவரி 4-ம் தேதி ஆளுநர் மாளிகையில், சமீபத்தில் நிறைவடைந்த காசியுடன் தமிழ் மக்களின் பழைமையான கலாசார தொடர்பைக் கொண்டாடும், ஒரு மாத காசி - தமிழ்ச் சங்கமம் விழாவில் பங்கேற்ற தன்னார்வத் தொண்டர்களைப் பாராட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அந்த நிகழ்வில் வரலாற்றுப் பண்பாடு பற்றிப் பேசும்போது, காசி, தமிழ்நாட்டுக்குமிடையே இருக்கும் தொடர்பைக் குறிக்க `தமிழகம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தினேன். அந்தக் காலத்தில் `தமிழ்நாடு’ என்பது இருக்கவில்லை. எனவே, வரலாற்றுப் பண்பாட்டுச் சூழலில் `தமிழகம்’ என்பதை மிகவும் பொருத்தமான வெளிப்பாடு என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிட்டேன்.

எனது கண்ணோட்டத்தை தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரைபோல பொருள்கொள்வதோ, அனுமானம் செய்துகொள்வதோ தவறானது, யதார்த்தத்துக்குப் புறம்பானது என்று தெரிவித்துக்கொள்கிறேன். எனது பேச்சின் அடிப்படை புரியாமல், `ஆளுநர் தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை’ எனும் வாதங்கள் விவாதப்பொருளாகியிருக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த விளக்கம்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.