பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி கடந்த திங்கள்கிழமை இரவு உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக யு.என்.மேத்தா இருதயவியல் மற்றும் ஆராய்ச்சி மைய நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், `ஹீராபென் மோடியின் உடல்நிலை தற்போது சீராக இருக்கிறது' எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், இன்று அகமதாபாத் வந்தடைந்த பிரதமர் மோடி, தன்னுடைய தாயாரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இதற்கிடையில் அரசியல் தலைவர்கள் பலரும் மோடிக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வரிசையில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தன் ட்விட்டர் பக்கத்தில், ``தாய்க்கும், மகனுக்குமான அன்பு என்பது நித்தியமானது, விலைமதிப்பற்றது. மோடி ஜி, இந்த கடினமான நேரத்தில் என்னுடைய அன்பும், ஆதரவும் உங்களுடன் இருக்கிறது. உங்களின் தயார் விரைவில் குணமடைவார்" என்று ட்வீட் செய்திருக்கிறார்.
99 வயதாகும் ஹீராபென் மோடி, இந்த மாத தொடக்கத்தில் நடைபெற்ற குஜராத் சட்டமன்றத் தேர்தலில், உறவினர்களின் உதவியுடன் சக்கர நாற்காலியில் சென்று வாக்களித்தார் என்பது குறிப்பிடத்தக்கது