பீகாரின் ஆளும்கட்சியாக இருக்கும் ஐக்கிய ஜனதாதளம், கடந்த 2013-ம் ஆண்டு பா.ஜ.க-வுடனான கூட்டணிலிருந்து விலகி, லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்டிரீய ஜனதா தளத்துடன் கூட்டணியில் இணைந்தது. பின்னர் 2017-ம் ஆண்டு அந்தக் கூட்டணியிலிருந்து விலகி, பாஜக-வுடன் மீண்டும் கூட்டணி அமைத்தது. கடந்த ஆண்டு பா.ஜ.க கூட்டணியை விட்டு விலகி ராஷ்டிரீய ஜனதா தளத்துடன் மீண்டும் கைகோத்தது.
இந்த நிலையில், ராஷ்டிரீய ஜனதா தளத்துடன் மீண்டும் நிதிஷ்குமாருக்கு மோதல் ஏற்பட்டிருப்பதாகத் தகவல் வெளியானது. அதனால் அவர் மீண்டும் பா.ஜ.க-வுடன் இணைவாரா? என்ற கேள்வி எழுந்தது.
அது குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த நிதிஷ் குமார், "பா.ஜ.க-வுடன் மீண்டும் சேருவதை விட நான் உயிரை மாய்த்துக்கொள்வேன். கடந்த 2017-ம் ஆண்டு லாலு பிரசாத், அவருடைய மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் மீதான ஆதாரமற்ற ஊழல் குற்றச்சாட்டுகள் அடிப்படையில்தான், நான் பா.ஜ.க கூட்டணிக்குச் சென்றேன். அது மிகவும் தவறு என்பதை உணர்கிறேன்.

அந்தக் கூட்டணியிலிருந்தபோது எனது ஆதரவாளர்கள் அனைவரின் ஓட்டுகளையும் பா.ஜ.க பெற்றுவந்தது. முஸ்லிம்களின் ஓட்டுகளும் அதில் அடங்கும். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பீகாரிலுள்ள 40 தொகுதிகளில் 36 தொகுதிகளைக் கைப்பற்றப் போவதாக பா.ஜ.க கூறுவது கேலிக்கூத்தாகத்தான் தோன்றுகிறது" என தெரிவித்திருக்கிறார்.