டெல்லி, பஞ்சாப்பில் ஆட்சி அமைத்ததுபோல் அடுத்த ஆண்டு கர்நாடகாவில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலிலும் ஆம் ஆத்மி கட்சி போட்டியிட்டு ஆட்சி அமைக்க திட்டம் வகுத்துள்ளது. இந்த நிலையில், கர்நாடகாவில் பல்வேறு விவசாயிகள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட விவசாயிகள் பேரணியில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "கர்நாடக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா 40 சதவிகித கமிஷன் வசூலித்ததாக ஒரு சிவில் ஒப்பந்ததாரர் சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டார்.

கடந்தகால காங்கிரஸ் அரசு 20 சதவிகித கமிஷன் அரசு. தற்போது இருக்கக்கூடிய பா.ஜ.க 40 சதவிகித கமிஷன் அரசு. டெல்லியில் நேர்மையான அரசு இருப்பதால் டெல்லியில் பூஜ்யம் சதவிகித கமிஷன் அரசு ஆட்சி நடைபெறுகிறது. ஒரு பைசாகூட லஞ்சமாக வாங்கப்படவில்லை. அதனால்தான் நேர்மையான அரசு என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் சான்றிதழைப் பெற்றிருக்கிறோம். மேலும், துணை முதல்வரான மணிஷ் சிசோடியா மற்றும் 17 எம்.எல்.ஏ-க்கள் மீது சி.பி.ஐ., வருமான வரி, டெல்லி காவல்துறை சோதனை நடத்தியது. ஆனால், அவர்களால் அந்த எம்.எல்.ஏ-க்களிடம் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
நாடு முழுவதும் உள்ள அனைத்து ரெளடிகள், முரடர்கள், நேர்மையற்றவர்கள், ஊழல்வாதிகள் அனைவரும் ஓர் அரசியல் கட்சிக்குச் செல்கிறார்கள் என்றால் அது ஒரே கட்சிதான். ஓர் அமைச்சரின் மகன் விவசாயிகள் மீது ஜீப்பை ஏற்றிக் கொலை செய்கிறார். ஆனால், அவரின் தந்தைக்கு மந்திரி பதவி கிடைக்கிறது. பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு உற்சாக வரவேற்பு கிடைக்கிறது. நாடு முழுவதும் கலவரங்கள் நடந்துவருகின்றன. இந்தக் கலவரங்களைச் செய்வது யார்... எந்தக் கட்சி கலவரம் செய்கிறது... நாட்டு மக்கள் கலவரத்தையா விரும்புகிறார்கள்? அவர்கள் அமைதியாக வாழ விரும்புகிறார்கள்.
மக்கள் கலவரத்தை விரும்பினால் அவர்கள் பா.ஜ.க-வுக்கு வாக்களிக்கட்டும். ஆனால் அவர்களுக்குப் பள்ளிகள், மருத்துவமனைகள், இலவச மின்சாரம், இலவச போக்குவரத்து, இலவச தண்ணீர் போன்ற அத்தியாவசியத் தேவைகள் நிறைவேற வேண்டுமென்றால், அவர்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். மென்மையான மக்கள், தேசபக்தர்கள், நேர்மையானவர்களின் கட்சி ஆம் ஆத்மி கட்சி என்பதால் ஆம் ஆத்மிக்கு ரெளடித்தனம் பற்றி எதுவும் தெரியாது.

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன பிறகும் விவசாயிகளின் நிலைமை இன்னும் முன்னேற்றம் ஏற்படவில்லை. 45 சதவிகித மக்கள் விவசாயத்தை நம்பி இருந்தாலும், விவசாயிகளின் குழந்தைகள் அரசியலில் சேர விரும்பவில்லை. மூன்று விவசாயச் சட்டங்களை ரத்துசெய்ய, 13 மாதங்களாக மத்திய அரசை வலியுறுத்தி நடந்த விவசாயிகளின் போராட்டம் மாபெரும் வெற்றிபெற்றிருப்பது பாராட்டத்தக்கது" எனப் பேசினார்.