Published:Updated:

அன்று தடகளத்தில் சாதித்த காயத்ரி... இன்று ஐ.டி ரெய்டில் தாக்கப்பட்ட பெண் அதிகாரி - யார் இவர்?!

அதிகாரி காயத்ரி

கரூரில் வருமான வரித்துறை சோதனை நடத்தச் சென்ற இடத்தில் தி.மு.க-வினரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண் அதிகாரி காயத்ரி, தடகளத்தில் பல சாதனைகளைச் செய்தவர் என்பது தெரியவந்திருக்கிறது.

Published:Updated:

அன்று தடகளத்தில் சாதித்த காயத்ரி... இன்று ஐ.டி ரெய்டில் தாக்கப்பட்ட பெண் அதிகாரி - யார் இவர்?!

கரூரில் வருமான வரித்துறை சோதனை நடத்தச் சென்ற இடத்தில் தி.மு.க-வினரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண் அதிகாரி காயத்ரி, தடகளத்தில் பல சாதனைகளைச் செய்தவர் என்பது தெரியவந்திருக்கிறது.

அதிகாரி காயத்ரி

கரூர், கோவை, சென்னை என்று தமிழ்நாடு முழுவதும் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவர் தம்பி அசோக்குமார் தொடர்புடைய, 40-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று வருமான வரித்துறையினர், சோதனை நடத்திவருகின்றனர். இந்த நிலையில், கரூர் ராமகிருஷ்ணபுரத்திலுள்ள அசோக்குமார் வீட்டில் அதிகாரிகள் சோதனை மேற்கொள்ளச் சென்றபோது, அங்கு குவிந்த தி.மு.க தொண்டர்களுக்கும், அதிகாரிகளுக்குமிடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்தக் களேபரத்தில் பெண் அதிகாரி காயத்ரி தி.மு.க நிர்வாகி குமார் என்பவரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், அதிகாரிகள் வந்த கார் ஒன்றின் கண்ணாடியும் தி.மு.க-வினரால் அடித்து உடைக்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் தி.மு.க-வினர், அதிகாரிகள் தங்களைத் தாக்கியதாகக் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.

வருமான வரித்துறை அதிகாரிகளின் கார்
வருமான வரித்துறை அதிகாரிகளின் கார்
நா.ராஜூமுருகன்

இந்தக் களேபரங்களால், 10-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெறவிருந்த வருமான வரித்துறை சோதனையை நிறுத்திய அதிகாரிகள், கரூர் நகர காவல் நிலையம், கரூர் மாவட்ட எஸ்.பி ஆகியோரிடம் சென்று, பாதுகாப்புக் கேட்டு மனு அளித்தனர். சில வருமான வரித்துறை அதிகாரிகளும் எஸ்.பி அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர். இந்த நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள் மத்தியில், தி.மு.க-வினரால் தாக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட காயத்ரி உள்ளிட்ட நான்கு அதிகாரிகளும், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இதில், தி.மு.க-வினரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண் அதிகாரி காயத்ரி, தடகளத்தில் பல சாதனைகளைப் புரிந்தவர் என்பது தெரியவந்திருக்கிறது. அரியலூர் மாவட்டத்தைப் பூர்வீகமாகக்கொண்ட காயத்ரி, ஏழ்மையான குடும்பப் பின்னணியைக்கொண்டவர். பள்ளியில் படிக்கும் காலத்திலேயே தடகளப் போட்டிகளில் ஜொலிக்கத் தொடங்கியிருக்கிறார். படிப்பிலும் கெட்டிக்காரராகவே இருந்திருக்கிறார். பன்னிரண்டாம் வகுப்பில், 91 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்கிறார்.

வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை
வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை
நா.ராஜூமுருகன்

தடகளத்தைப் பொறுத்தமட்டில், 16 வயதினருக்கான தடை தாண்டுதலில் தங்கம், 2016-ம் ஆண்டு அஸ்ஸாம் மாநிலத்தில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் 100 மீட்டர் தடை தாண்டுதலில் தங்கம், 2008-ம் ஆண்டு புனேவில் நடைபெற்ற காமன்வெல்த் இளையோர் விளையாட்டுப் போட்டியில் 100 மீட்டர் தடை தாண்டுல், மும்முறைத் தாண்டுதல் உள்ளிட்ட விளையாட்டுகளில் வெள்ளிப் பதக்கம் வாங்கியிருக்கிறார்.

அதேபோல், 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியவர், 100 மீட்டர் தடை தாண்டுதல் போட்டியில் இவரது பெஸ்ட் 13:59  விநாடிகளாகவும், மும்முறைத் தாண்டுதல் போட்டியில் இவரது பெஸ்ட் 13:48 விநாடிகளாகவும் பதிவாகியிருக்கிறது. இப்படி, தடகள விளையாட்டுப் போட்டி சாதனைகள் மூலம் ஏற்கெனவே ஊடகங்களில் அடிக்கடி செய்தியாக அவர் பெயர் வந்த நிலையில், தற்போது வருமான வரித்துறை அதிகாரியாக இருக்கும் காயத்ரி, கரூருக்குச் சோதனை நடத்த வந்த இடத்தில், தி.மு.கவினரால் தாக்கப்பட்டதாகக் கூறி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதன் மூலம், மீண்டும் கவனம் பெற்றிருக்கிறார்.