தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி சென்றார். அங்கிருந்து திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். விமானநிலையத்தில் பரிசோதனையின்போது நிதியமைச்சரிடம் இரண்டு மடிக்கணினிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
எதற்காக இரண்டு லேப்டாப்களைக் கொண்டு செல்கிறீர்கள் என்று அப்போது பணியிலிருந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளர் கேட்டதாகவும், அதற்கு, " விமானத்தில் இரண்டு லேப்டாப்களைக் கொண்டு செல்ல அனுமதியில்லை என்று எந்த சட்டமும் கிடையாது" என அமைச்சர் பதில் கூறியதாகவும் சொல்லப்படுகிறது.
உதவி ஆய்வாளருக்குத் தமிழும் தெரியவில்லை, சரியாக ஆங்கிலமும் புரியவில்லை என்று கூறப்படுகிறது. தான் இந்த மாநிலத்தின் நிதி அமைச்சர் என்று கூறியும் உதவி ஆய்வாளர் அமைச்சரின் பதிலைப் பொருட்படுத்தவில்லை எனச் சொல்கிறார்கள். விமானத்திற்கு தாமதம் ஆவதால், `லேப்டாப்பை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்!' என்று அமைச்சர் கூறிவிட்டுக் கிளம்ப முற்பட்டார் என்கிறார்கள். விவரம் அறிந்து அங்கு வந்த உயர் அதிகாரி அமைச்சரைச் சமாதானப்படுத்தியதுடன் மன்னிப்பும் கோரியதுடன், அமைச்சரோடு வாக்குவாதத்தில் ஈடுட்ட அந்த உதவி ஆய்வாளரும் மன்னிப்பு கோரிய பின்னரே அமைச்சர் தூத்துக்குடிக்குப் புறப்பட்டுச் சென்றார் என்கிறார்கள்.

இந்த சம்பவம் தொடர்பாக அமைச்சரின் தரப்பில் பேசியபோது, ``அமைச்சரிடம் இரண்டு லேப்டாப் இல்லை. ஒரு லேப்டாப்பும், ஒரு ஐ-பேட் மட்டுமே உள்ளன. காலையில் விமான நிலையத்தில் நடைபெற்றது ஒரு சாதாரண பரிசோதனை மட்டுமே" என்று கூறினார்கள்.