திருவனந்தபுரம் யு.ஏ.இ தூதரக பார்சல் மூலம் தங்கம் கடத்திய வழக்கில் சிக்கிய ஸ்வப்னா சுரேஷ் இப்போது ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார். தினமும் கேரள அரசுக்கு எதிராகவும், முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராகவும் பல குற்றச்சாட்டுகளைக் கூறிவருகிறார். ஸ்வப்னா சுரேஷின் குற்றச்சாட்டுகளுக்கு ஆளுங்கட்சியான சி.பி.எம் பதிலடி கொடுத்துவருகிறது. ஆனால், ஸ்வப்னா போலிச் சான்றிதழ் கொடுத்து வேலைக்குச் சேர்ந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க கேரள அரசும், போலீஸும் தயங்குவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
முதல்வர் பினராயி விஜயனின் கட்டுப்பாட்டில் இருந்த ஸ்பேஸ் பார்க் நிறுவனத்தில் போலிச் சான்றிதழ் கொடுத்து லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கியிருக்கிறார் ஸ்வப்னா. இந்தக் குற்றச்சாட்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே நிரூபிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இந்த வழக்கு விசாரணை இழுத்தடிக்கப்படுவதற்குப் பல காரணங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

கேரள அரசின் ஸ்பேஸ் பார்க் நிறுவனத்தில் வேலைக்குச் சேருவதற்கு முன்பு ஏர் இந்தியா நிறுவனத்திலும், ஐக்கிய அரபு அமீரக தூதரகத்திலும் பணிபுரிந்திருக்கிறார் ஸ்வப்னா சுரேஷ். எல்லா இடங்களிலும் பணியில் சேருவதற்காக மகாராஷ்டிராவில் உள்ள டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் டெக்னாலஜிக்கல் பல்கலைக்கழகத்தில் பி.காம் பட்டம் பெற்றதற்கான சான்றிதழைக் கொடுத்திருக்கிறார். தங்கம் கடத்தல் வழக்கில் சிக்கியபோது ஸ்வப்னா சுரேஷின் சான்றிதழ்கள் போலியானவை எனத் தெரியவந்தன. போலிச் சான்றிதழ் குறித்து, திருவனந்தபுரம் கண்டோன்மென்ட் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSடாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் டெக்னாலஜிக்கல் பல்கலைக்கழகத்தில் ஸ்வப்னா சுரேஷ் மாணவியாக இருந்ததில்லை. இந்தப் பல்கலைல்கழகத்திலோ, அதன் கீழுள்ள இணைப்புக் கல்லூரிகளிலோ பி.காம் படிப்பு இல்லை என்றும் பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீஸாரின் தீவிர விசாரணையில் ஸ்வப்னா சுரேஷ் வழங்கிய சான்றிதழில் உள்ள கையெழுத்து, சீல் ஆகியவை போலியானவை எனவும், சான்றிதழில் பாதுகாப்பு முத்திரைகள் எதுவும் இல்லை எனவும் 2020, ஜூலை மாதம் நடத்தப்பட்ட விசாரணையிலேயே கண்டறியப்பட்டுவிட்டது. ஆனாலும், அதற்கு மேல் விசாரணை நடத்த வேண்டாம் என போலீஸாருக்கு அரசு முட்டுக்கட்டை போடுவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

"எனது சான்றிதழ் தொடர்பான அனைத்து விஷயங்களும் ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கருக்குத் தெரியும். ஆனாலும், சிவசங்கர் தனது பவரை பயன்படுத்தி ஸ்பேஸ் பார்க்கில் என்னை வேலைக்கு நியமித்தார்" என ஸ்வப்னா சுரேஷ் அடிக்கடி கூறிவருகிறார். சிவசங்கர் மட்டுமல்ல, மேலும் சில உயரதிகாரிகள் ஸ்வப்னா வேலைக்குச் சேர உதவியுள்ளனர். ஸ்பேஸ் பார்க்கில் ஸ்வப்னா வேலைக்குச் சேர்ந்தபோது அறிவிக்கப்பட்ட 19,06,730 ரூபாய் சம்பளத்தில், ஜி.எஸ்.டி போக 16,15,873 ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. போலிச் சான்றிதழ் மூலம் வேலைக்குச் சேர்ந்த ஸ்வப்னாவுக்கு வழங்கப்பட்ட சம்பளப் பணத்தை, ஸ்பேஸ் பார்க்கில் ஸ்வப்னாவை வேலைக்கு அமர்த்திய நிறுவனத்திடமிருந்து வசூலிக்க வேண்டும் என நிதி தணிக்கை பிரிவு பரிந்துரைத்திருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஆனால் அந்த நிறுவனம் பணம் வழங்க முடியாது என தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது. அப்படியானால் சிவசங்கர் உள்ளிட்ட அதிகாரிகளிடமிருந்து பணத்தை வசூலிக்க வேண்டும் அல்லது அதிகாரிகளின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்ய வேண்டும் எனவும் சிபாரிசு செய்யப்பட்டிருக்கிறது. இந்த வழக்கைத் தீவிரமாக விசாரித்தால் கேரள அரசின் தலைமைச் செயலகத்திலுள்ள அதிகாரிகள் பலரும் சிக்குவார்கள் என்பதால் போலீஸார் விசாரணையை இழுத்தடிப்பதாகச் சொல்லப்படுகிறது. இது பற்றி போலீஸ் தரப்பில் கேட்டால் "விரைவில் மகாராஷ்டிராவுக்குச் சென்று விசாரணை நடத்தவிருக்கிறோம்" எனக் கடந்த சில ஆண்டுகளாக சொல்லிவருகின்றனர். அதிகாரிகள் ஏற்படுத்திய சிக்கலை முடித்துவைக்க வழிதெரியாமல் நிற்கிறது கேரள அரசு.