Published:Updated:

RBI: பணத்தின் மீதான நம்பகத்தன்மையை இழக்கவைக்கின்றனவா ஆர்.பி.ஐ-யின் செயல்பாடுகள்?!

சக்திகாந்த தாஸ்

2,000 ரூபாய் தாள்களைத் திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருப்பதன் காரணமாக, பணத்தின் மீதான சாமானியர்களின் நம்பிக்கை கேள்விக்குறியாகியிருக்கிறதா?

Published:Updated:

RBI: பணத்தின் மீதான நம்பகத்தன்மையை இழக்கவைக்கின்றனவா ஆர்.பி.ஐ-யின் செயல்பாடுகள்?!

2,000 ரூபாய் தாள்களைத் திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருப்பதன் காரணமாக, பணத்தின் மீதான சாமானியர்களின் நம்பிக்கை கேள்விக்குறியாகியிருக்கிறதா?

சக்திகாந்த தாஸ்

2016-ம் ஆண்டு நவம்பரில், கறுப்புப் பணத்தை ஒழிக்கும்விதமாக புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். அவற்றுக்கு பதிலாக புதிய 200, 500, 2,000 ரூபாய்த் தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. கறுப்புப் பணப் புழக்கத்தைத் தடுப்பதற்காக, பல நாடுகளில் அதிக மதிப்புகொண்ட ரூபாய்த் தாள்களை அச்சிடுவதே இல்லை. ஆனால் கறுப்புப் பணத்தை ஒழிப்பதாகக் கூறிவிட்டு, புதிதாக 2,000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது அப்போதே பல்வேறு விவாதங்களுக்கு வித்திட்டது.

2,000 ரூபாய் நோட்டுகள்
2,000 ரூபாய் நோட்டுகள்

தங்களிடமிருந்த பழைய 500 மற்றும் 1,000 ரூபாய்த் தாள்களை வங்கிகளில் கொடுத்து மாற்ற, ஏழை, எளிய மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். நீண்ட வரிசையில், மணிக்கணக்கில் வங்கிகளிலும், ஏடிஎம் வாசல்களிலும் காத்திருந்து, ரூபாய்த் தாள்களை மாற்றவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகினர்.

அந்தச் சமயத்தில் பணப் புழக்கம் சீர்குலைந்து தொழில்துறைகள் கடும் நெருக்கடிக்கு ஆளாகின. சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை இயக்கிய லட்சக்கணக்கானோர் பெரும் இழப்புகளைச் சந்தித்தனர். அதிலிருந்து மீண்டு வர சில மாதங்களேனும் தேவைப்பட்டது. அதையே மக்கள் இன்னும் மறந்திருக்க மாட்டார்கள். இந்த நிலையில் மீண்டும் ஒரு முறை ரூபாய் நோட்டுகள் தொடர்பான நடவடிக்கையை ரிசர்வ் வங்கி மேற்கொண்டிருக்கிறது.

ரூ.2000 நோட்டு - ரிசர்வ் வங்கி
ரூ.2000 நோட்டு - ரிசர்வ் வங்கி

அதாவது, புழக்கத்திலுள்ள 2,000 ரூபாய்த் தாள்கள் திரும்பப் பெறப்படுவதாகவும், அவற்றை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது. இதற்கான கடைசி நாள் செப்டம்பர் 30 என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 2,000 ரூபாய்த் தாள்கள் பெரும்பாலும் புழக்கத்தில் இல்லை என்பதால், இதனால் சாமானியர்கள் பாதிக்கப்பட வாய்ப்புகள் பெரிதும் குறைவுதான்.

இருப்பினும், ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகள்மீது சாமானிய மக்களின் நம்பிக்கையை இந்த நடவடிக்கை பெரிதும் கேள்விக்குட்படுத்தியிருக்கிறது என்கிறார்கள். இது தொடர்பாக பொருளாதார வல்லுநர் சோம வள்ளியப்பனிடம் கேள்வி எழுப்பினோம். ”பண மதிப்புநீக்க நடவடிக்கையின்போது புழக்கத்தில் இருந்த 86% ரூபாய்த் தாள்கள் திரும்பப் பெறப்பட்டன. அதனால் குறுகியகாலத்தில் அதே அளவு பணத்தைப் புழக்கத்தில் விட முடியாது என்பதால்தான், 2,000 ரூபாய் என்ற உயர் மதிப்பு கொண்ட ரூபாய்த் தாள்கள் அச்சிடப்பட்டன.

சோம வள்ளியப்பன்
சோம வள்ளியப்பன்

இடைக்கால நடவடிக்கையாகத்தான் அதைக் கொண்டு வந்தார்கள். ஆனால், 2019-க்கு பிறகு 2,000 ரூபாய்த் தாள்கள் அச்சடிக்கப்படவில்லை. மக்களுக்கும் 2,000 ரூபாய்த் தாள்கள்மீது ஆரம்பத்திலிருந்தே ஒருவித பயம் இருந்தது. வங்கிகளிலிருந்து 2,000 ரூபாய்த் தாள்கள் திரும்ப வெளியே வருவதில்லை என்பதையும் மக்கள் உணர்ந்தார்கள்.

அதனால் சாமானிய மக்கள், வியாபாரிகளுக்கு 2,000 ரூபாய்த் தாள்களை திரும்பப்பெற்றது பெரிய தொந்தரவாக இருக்காது. பதுக்கிவைக்க நினைப்பவர்களுக்கு மட்டுமே 2,000 ரூபாய்த் தாள்கள் உதவும். அளவுக்கு அதிகமாக 2,000 ரூபாய்த் தாள்களை டெபாசிட் செய்பவர்களை வருமான வரித்துறை நிச்சயம் கண்காணிக்கும். 2,000 ரூபாய்த் தாள்களைப் புழக்கத்தில்விட்டு ஆறு ஆண்டுகளுக்குள் மீண்டும் திரும்பப் பெறுவது என்பது செலவு, சிரமம்தான். ஆனால், இதுவும் 2016-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பண மதிப்புநீக்கத்தின் ஒரு தொடர் நடவடிக்கைதான். இதன் காரணமாகவெல்லாம் பணத்தின் மீதான நம்பகத்தன்மை குறையாது. தற்போது 500 ரூபாய் மட்டுமே உயர் மதிப்பு பணமாக இருப்பதால், மீண்டும் 1,000 ரூபாய்த் தாள்களை அச்சடிக்க வேண்டிய அவசியமும் ஏற்படலாம்” என்றார்.