`ஓர் அரசியல் புரட்சி உங்களை நெருங்கிக்கொண்டிருக்கிறது!’ - பரமக்குடியில் கமல்ஹாசன்

`நான் உங்கள் ஊர் பிள்ளை. அந்த உரிமையில் கேட்கவில்லை. எங்கள் கட்சியின் திறமைக்காகக் கேட்கிறோம். பல திறமையாளர்களைக் கூட்டி இங்கே குவித்திருக்கிறோம். அவர்கள் எல்லாம் செயல்படத் தொடங்கினால் பரமக்குடி மட்டுமல்ல, தமிழகமே சீரமைக்கப்படும்’ என்கிறார் கமல்ஹாசன்.
`நதிக்கரை நாகரிகத்தைச் சாக்கடைக் கரை நாகரிகமாக மாற்றிய ஊழல் அரசியலைத் தூக்கியடிக்கும், அரசியல் புரட்சியை ஏற்படுத்தும் கட்சியாக மக்கள் நீதி மய்யம் செயல்படும்’ என பரமக்குடியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் கமல்ஹாசன் பேசினார்.

மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று திருமயம், திருப்பத்தூர், சிவகங்கை ஆகிய ஊர்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து கமல்ஹாசனின் சொந்த ஊரான பரமக்குடி அருகேயுள்ள எமனேஸ்வரம், பரமக்குடி காந்திசிலை, கிருஷ்ணா பேட்டை, பொன்னையாபுரம், மணிநகர், பார்த்திபனூர் பகுதிகளிலும் திறந்த வேனில் சென்றபடி பிரசாரம் மேற்கொண்டார். எமனேஸ்வரம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட கமல்ஹாசன், ``வணக்கம், `என்’ எமனேஸ்வரத்துக்கு வணக்கம். நான் சிறுபிள்ளையாக இருந்தபோது இங்கே நடந்து வந்திருக்கிறேன். இந்த ஆற்றுப் படுகையில் குதிரையேற்றம் பயின்றிருக்கிறேன். என் குடும்பம் பரமக்குடியில் ரொம்பப் பெரியது. இன்று அவர்களுடன் பேசும் இந்த அரிய வாய்ப்பை நான் இழப்பதாக இல்லை.
இங்கே ஓய்ந்துபோயிருக்கும் தறிகளையெல்லாம் மீண்டும் இயக்கச் செய்ய வேண்டும் என்பதுதான் எங்கள் சூளுரை. அதைச் செய்து காட்டுவோம். இங்கு நொடித்துப் போயிருக்கும் அந்தத் தொழில்களை மீட்டெடுப்போம். இங்கே மகளிருக்காக நாங்கள் போட்டுவைத்திருக்கும் திட்டங்களை அவர்கள் கேட்க வேண்டும். வேறு எந்தக் கட்சியும்ம் சிந்திக்காத திட்டங்களைச் சிந்தித்து செயல்படுத்தவும் முனைப்புகொண்டிருக்கிறோம். சூளுரை கொண்டிருக்கிறோம். இது வாக்குறுதி அல்ல. செய்யணும்னு மனசுல நினைச்சுக்கிட்டு கடமையாக வந்திருக்கிறோம். பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, பரமக்குடியில் திறமை மேம்பாட்டு மையம் ஒன்றை உருவாக்கிவருகிறோம்.

இது வேலை தேடி அலையும் தொழிலாளர்களை உருவாக்கும் மையம் அல்ல. பலருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தரக்கூடிய முதலாளிகளாக மாற்றும் மையம். அது நடக்கும். அதை நடத்திக் காட்டுவோம். பரமக்குடி மட்டுமல்ல, தமிழகத்திலுள்ள அனைத்துச் சிறு ஊர்களையும், பெரிய ஊர்களுக்கு நிகராக நவீன வசதிகளும்கொண்ட ஊர்களாக மாற்றும் திட்டம் எங்கள் கையிலிருக்கிறது. இது தேர்தலுக்காகச் சொல்லப்படுவை அல்ல. நான் அரசியலுக்கு வந்ததே இவற்றைச் செய்து காட்ட வேண்டும் என்பதற்காகத்தான். அதைச் செய்து காட்டுவேன். மக்கள் எங்களுடன் இருக்கிறார்கள் என்பதற்கு இங்கு மலர்ந்த முகத்துடன் திரண்டவர்களே சான்று.
நான் உங்கள் ஊர்ப் பிள்ளை. அந்த உரிமையில் கேட்கவில்லை. எங்கள் கட்சியின் திறமைக்காகக் கேட்கிறோம். பல திறமையாளர்களை கூட்டி இங்கே குவித்திருக்கிறோம். அவர்களெல்லாம் செயல்படத் தொடங்கினால் பரமக்குடி சீரமைக்கப்படும். பரமக்குடி மட்டுமல்ல, தமிழகமே சீரமைக்கப்படும். பரமக்குடி பனிஷ்மென்ட் பகுதி என்பதெல்லாம் மாறி பரமக்குடியிலா வேலை பார்க்கிறீர்கள் என ஆச்சர்யப்பட்டுக் கேட்கவைப்போம். ஏனெனில், இதெல்லாம் நதிக்கரை நாகரிகம் கொண்ட ஊர். ஆனால் அதையெல்லாம் சாக்கடைக் கரை நாகரிகமாக மாற்றியது ஊழல் அரசியல்தான். அதை அகற்றுவோம். தமிழகத்தை மீட்டெடுப்போம். அதற்கு உங்கள் ஆதரவு தேவை. நான் சினிமா நட்சத்திரமாக இருக்கலாம். இனி உங்கள் வீட்டில் எரியும் சிறு விளக்காக இருக்க அனுமதிக்க வேண்டும். அப்படி அனுமதித்து ஆதரித்தால் நாளை நமதே.

இந்த ஆற்றுப்படுகையில் இரண்டடி தோண்டினால், குடம் குடமாகத் தண்ணீர் கிடைக்கும். ஆற்றில் விளையாடிவிட்டு கையாலேயே தோண்டி தண்ணீர் எடுத்துக் குடிக்கலாம். ஆனால், இப்போது 100 அடி தோண்டினாலும் கிடைப்பதில்லை. அதற்குக் காரணம், சாக்கடையையெல்லாம் இங்கே கொண்டு வந்துவிட்டதுதான். இப்போது 400 அடி தோண்டினாலும் குடிநீர் கிடைக்கலை என மக்கள் சொல்கிறார்கள். அதற்குக் காரணம், நிர்வாகம்தான். அத்தகைய நிர்வாகத்தை நீக்குவதற்கான ஓர் அரசியல் புரட்சி அரசியல் கட்சி உங்களை நெருங்கிக்கொண்டிருக்கிறது. அதைத் தூக்கிப் பிடியுங்கள். நாளை நமதாகும்'' என்றார்.