சுந்தரராஜ், மேட்டுப்பாளையம்.
``கொரோனா காலத்தில் தன் வலியைக் காட்டத்தான், மோடி தாடியை வளர்த்திருக்கிறார்’’ என்றிருக்கிறாரே அண்ணாமலை?
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா, நாட்டில் ஆறு பேருக்கு மட்டுமே தொற்று ஏற்பட்டிருந்த நிலையில் ஊரடங்கை அறிவித்தார். உடனடி நடவடிக்கைகள் எடுத்து, வெளிநாட்டிலிருந்து நியூசிலாந்துக்குள் வருபவர்களைத் தனிமைப்படுத்தினார். அடுத்த சில நாள்களில் வெளிநாட்டிலிருந்து நியூசிலாந்துக்குள் யாரும் வர முடியாதபடி தடைசெய்தார். ஒருகட்டத்தில் நியூசிலாந்து ‘ஜீரோ கோவிட்’ என்ற நிலையை எட்டியது.
ஐஸ்லாந்து பிரதமர் காத்ரின், நாட்டிலுள்ள அனைவருக்கும் இலவசமாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். கொரோனா பாதித்தவர்களோடு தொடர்புடையவர்களைக் கண்டறியும் டிராக்கிங் சிஸ்டத்தை முழுமையாகக் கடைப்பிடித்த நாடுகளில் ஐஸ்லாந்தும் ஒன்று.
இப்படி சிலதெல்லாம் ஞாபகத்துக்கு வருது.... என்னத்த சொல்ல, அண்ணாமலையின் கருத்தைக் குறித்து?
சரவணன் பாலகுமார், பழநி.
டெல்லியில் மோடியை இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் சந்திக்கும்போது என்ன மனநிலையில் இருந்திருப்பார்கள்?
தேர்வில் கம்மி மார்க் வாங்கிவிட்டு, புராகிரஸ் ரிப்போர்ட்டுடன் ஸ்ட்ரிக்ட்டான அப்பாவைப் பார்க்கச் செல்லும் மகனின் மனநிலையில் இருந்திருப்பார்கள்!

சேகர்.பி.ஏ., கோவை.
பெண்கள் விளையாட்டுத்துறையில் முன்னேறினாலும், இதற்கான பாதை கடினமானதாகத்தான் இருந்திருக்கும் அல்லவா?
நிச்சயமாக. ஓர் உதாரணம் உண்டு. 1967-ல் கேத்தரின் ஸ்விட்சர் என்ற பெண், பாஸ்டன் மாரத்தானில் ஓடியபோது அவரைப் பலரும் ஏற்றுக்கொள்ளவில்லை. கேத்தரின் எல்லைக்கோட்டை நெருங்கும்போது, அந்தப் போட்டியின் மேலாளர்களில் ஒருவரான ஜாக் செம்பிள் என்பவர், கேத்தரினின் முதுகிலிருந்த நம்பர் பட்டையைக் கிழித்தெறிய முயன்றார். அந்தப் புகைப்படம் மிகவும் பிரபலம். அதன் பிறகு 1972-லிருந்துதான் அதிகாரபூர்வமாகப் பெண்களையும் மாரத்தானில் அனுமதித்தனர்.
மல்லிகா அன்பழகன், கே.கே.நகர், சென்னை.
சசிகலா திடீரென்று உங்களுக்கு போன் செய்தால் என்ன சொல்வீர்கள்?
ஹலோ... ஹல்லல்லோ!
மாணிக்கம், திருப்பூர்.
விஜயகாந்த் ரசிகர்களுக்குத் தடுமாற்றம்... கமல்ஹாசன் ரசிகர்களுக்கு ஏமாற்றம்... ரஜினி ரசிகர்களுக்கு..?
ரஜினி ரசிகர்களுக்குத்தான் இருக்கே... ‘அண்ணாத்த!’
திருப்பூர். அர்ஜுனன்.ஜி, அவிநாசி.
அ.தி.மு.க-வில் இருக்கும்போது ஊழல்வாதிகளாக இருப்பவர்கள் அணி மாறி எதிர் முகாமுக்கு வந்தவுடன் புனிதராகிறார்களா?
புனிதமாகறதாத்தான் நம்பச் சொல்றாங்க. ஆனா, யாரும் நம்பறதில்லை! ‘ஆக்ஷன்’ கம்மியா இருக்குங்கிறதாலதான் இதெல்லாம் நடக்குது!
மு.க.அழகிரி, ஒதியடிக்காடு.
பாலியல் புகாரில் சிக்கும் கல்வியாளர், சர்ச்சைப் பேச்சில் சிக்கும் மத போதகர்கள்..?
கடுமையான நடவடிக்கை அவசியம். இவர்கள்மீது எடுக்கப்படும் நடவடிக்கை, குழந்தைகள் நலனுக்கும் தேச ஒற்றுமைக்கும் கேடு நினைப்பவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும்!
மாணிக்கம், திருப்பூர்.
‘கட்சிக்கு உண்மையாக உழைத்தேன்’ என்று கூறுவதன் அர்த்தம் என்ன?
இதுகூடவா புரியலை... இப்படியொரு ஸ்டேட்மென்ட் கொடுத்தாலே வெகு விரைவில் அவர் கட்சி மாறப்போகிறார் என்பதுதான் அர்த்தம்!
@சரோஜா பாலசுப்ரமணியன்.
‘ஜூனியர் விகடன்’ கட்டுரையின் எதிரொலியாக, தி.மு.க அரசு குட்கா விற்பனைமீது நடவடிக்கை எடுத்துள்ளதே... இது விகடனுக்குக் கிடைத்த வெற்றிதானே?
சட்டவிரோதமான போதைப் பழக்கத்தை எதிர்த்து குரல் கொடுத்துக்கொண்டேயிருக்கும் ஒவ்வொருவருக்கும் கிடைத்த வெற்றி!
வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
பிரேமலதா, சசிகலா, குஷ்பு... இவர்கள் மூவரும் ஒன்றுசேர்ந்தால் அரசியலில் மாற்றம் ஏற்படுமா?
கிச்சுகிச்சு மூட்டாதீங்க... சிரிப்பு வருது. ஆமா... ஏன் இப்படி விபரீதமான ஆசையெல்லாம் வருது உங்களுக்கு? ஹா ஹா ஹா..!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:
கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,
757, அண்ணா சாலை, சென்னை-600 002. kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!