
சம்பத்குமாரி, பொன்மலை.
உலகம் யாரால் இயங்குகிறது?
சென்னை மாநகராட்சி துப்புரவு ஊழியர் மோகன சுந்தரம் என்பவர் சென்னை கொருக்குப்பேட்டையில் குப்பையைத் தரம்பிரிக்கும்போது அதில் கிடந்த 10 சவரன் நகையை உடனே கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்திருக்கிறார். அதே பகுதியைச் சேர்ந்த தேவி என்பவருக்குச் சொந்தமான நகை அது என்று தெரிந்து, உடனே அவரிடம் ஒப்படைத்திருக்கிறார்கள் காவல்துறையினர். மோகனசுந்தரம் போன்றவர்களால்தான் உலகம் சுழன்றுகொண்டிருக்கிறது!

கே.இந்து குமரப்பன், விழுப்புரம்.
கண்ணதாசன், வாலி, வைரமுத்து மூவரில் கவிதை எழுதுவதில் வல்லமை படைத்தவர் யார்?
மூவரும் மூன்று ரகம். வாலி தன்னை அப்டேட்டாக வைத்துக்கொண்டு கடைசி வரை அடித்து விளையாடிக்கொண்டிருந்தார். வைரமுத்து இலக்கியத்தை நம் மண்ணின் மணம் கமழக் கொடுப்பார். கண்ணதாசன் தொட்ட எல்லைகள் வேறு ரகம். இதுவரை பலரும் அந்த எல்லைகளைக் கண்ணால் மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்!
@ஏ.எஸ்.நடராஜன், சிதம்பரம்.
ஜூனியர் விகடனின் கருத்துக்கணிப்பு பலித்துவிட்டதே?
மக்களின் மனதை ஜூனியர் விகடன் பிரதிபலிக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி!
@பி.அசோகன், கொளப்பலூர் (அஞ்சல்).
இந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் கழுகாரை ஆச்சர்யப்படவைத்த ஒன்றாக எதைக் கூறுவீர்கள்?
`வாக்குகளைப் பணம் கொடுத்து வாங்கலாம்’ என்ற அரசியல்வாதி களின் எண்ணத்தையும், `மக்கள் பணம் வாங்கிக்கொண்டு வாக்களிப்பார்கள்’ என்ற பொதுக்கருத்தையும் உடைத்த திருத்துறைப்பூண்டி மாரிமுத்துவின் வெற்றி. குடிசை வீட்டில் வசிக்கும் எளிமையான இந்த மனிதரின் வெற்றி ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது.

@சரோஜா பாலசுப்ரமணியன்.
முதன்முறை முதல்வர் ஸ்டாலின், தற்போது நிலவும் சவாலான நிகழ்வுகளைச் சமாளிப்பாரா?
முதல்வராகத்தான் முதன்முறையே தவிர, எம்.எல்.ஏ., மேயர், துணை முதல்வர் என்று அனுபவம்கொண்டவர்தானே... சமாளிப்பார் என்ற நம்பிக்கையில்தான் மக்கள் வாக்களித்துள்ளார்கள்!
@இல.கண்ணன், நங்கவள்ளி.
இனிமேல் மு.க.அழகிரியின் ‘ரியாக்ஷன்’ எப்படியிருக்கும் கழுகாரே?
இத்தனை நாள்கள் கழித்து ஸ்லோமோஷனில் வாழ்த்து தெரிவித்ததுதான் அவரின் ரியாக்ஷன்!
வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
`நாங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் அ.தி.மு.க சரிவர வேலை செய்யவில்லை’ என்ற பா.ம.க-வினர் சிலரின் குற்றச்சாட்டு?
காரைவிட்டு இறங்காமலேயே பிரசாரம் செய்து முடித்த டாக்டர் ராமதாஸே இதை நம்ப மாட்டாரே!
சுகன்யா, சென்னை-110.
தேர்தலில் பொறுமை காத்தது யார்?
வாகன சோதனை, கொரோனா பயம் என எல்லாவற்றையும் பொறுமையாகச் சமாளித்து வாக்களித்த மக்கள்தான்!
நாகமாணிக்கம், திருப்பூர்.
``இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலையைத் தடுக்க முடியாது. ஆனால், இந்த மூன்றாம் அலை எப்போது ஏற்படும் என்பதுதான் தெளிவாகத் தெரியவில்லை. மக்கள் தயாராக இருக்க வேண்டும்’’ என்று மத்திய அரசின் அறிவியல் ஆலோசகர் விஜயராகவன் சொல்லியிருக்கிறாரே?
`மூன்றாவது அலைக்குத் தயாராக இருங்கள்’ என்று அரசிடம் சொல்லி முன்னேற்பாடுகளை முடுக்குவதை விடுத்து, மக்களைத் தயாராக இருக்கச் சொல்வதற்கு எதற்கு ஓர் அறிவியல் ஆலோசகர்?!
கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:
கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002. kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!