
சமீபகாலமாக யானைகள், புலிகளின் வாழ்விடங்களை, பாதைகளை மனிதர்கள் அழித்துச் சுருக்குகிறார்களே?
எம்.கல்யாணசுந்தரம், மேட்டுப்பாளையம்.
பா.ம.க தலைவர் அன்புமணி, தி.மு.க-வைப் பாராட்டிக்கொண்டேயிருக்கிறாரே என்ன விஷயம்?
தேர்தல் வரும் பின்னே... ‘மணி’ ஓசை வரும் முன்னே!
வாசுதேவன் பெங்களூரு.
பற்றவைப்பது - கொளுத்திப்போடுவது... என்ன வித்தியாசம்?
உடனே எரியும் இடத்தில் ‘கொளுத்திப்போட்டால்’ போதும். அவ்வளவு சீக்கிரம் எரியாத இடத்தில் சோர்ந்துபோகாமல் மெல்ல மெல்ல பற்றவைக்க வேண்டும். உதாரணத்துக்கு, எடப்பாடி பழனிசாமியிடம் கொளுத்திப்போட்டால் போதும். பன்னீர்செல்வத்திடம் பொறுமையாகப் பற்றவைக்க வேண்டும்.
மகாலட்சுமி, மதுரை.
ரோஜாச்செடிகளில் முட்கள் இல்லாமல் போயிருந்தால்?
நிறைய கவிதைகள் எழுதப்படாமல் போயிருக்கும்.
சரவணகுமார் சின்னசாமி, தாராபுரம்.
‘ஊழலை ஒழிப்போம்’ என்று தொடங்கப்பட்டு, பத்து ஆண்டுகளைப் பூர்த்திசெய்துவிட்ட ‘ஆம் ஆத்மி கட்சி’ ஊழலை ஒழிப்பதாகவோ, அதை எதிர்ப்பதாகவோ தெரியவே இல்லையே?
யார், என்ன சொன்னாலும் அப்படியே நம்பிடுவீங்களா பாஸ்... ரொம்ப வெள்ளந்தியா இருக்கீங்களே சரவணகுமார்!
பெ.பச்சையப்பன், கம்பம்.
மனிதனுக்கு எந்த அளவுக்கு ‘தில்’ இருக்க வேண்டும்?
உண்மையை எதிர்கொள்ளும் அளவுக்கு.
V.பாலசுப்ரமணியன், மன்னார்குடி.
பல குற்றங்கள் நிகழ மதுவே காரணம் என்று தெரிந்தும் டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு மறுக்கிறதே?
நீங்க வேற... ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல் விழாக்களை முன்னிட்டு டாஸ்மாக் வியாபாரத்துக்கு புதிய டார்கெட் எத்தனை கோடி நிர்ணயிக்கலாம்னு பிளான் பண்ணிக்கிட்டிருக்குது பாஸ் தமிழக அரசு!
வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
`நம்மைவிட்டு வெளியே சென்றாலும், ஆங்கிலேயர்களின் ஆதிக்கச் சிந்தனை இன்னும் நம்மிடம் இருக்கிறது’ என்ற கவர்னரின் பேச்சு?
உண்மைதான். கவர்னர் என்பதே ஆங்கிலேயர்கள் கொண்டுவந்த பதவிதானே?!
மு.நடராஜன், திருப்பூர் 7.
`குறுக்குவழி அரசியல் நாட்டுக்கு ஆபத்து’ என்கிறாரே மோடி?
சுயவிமர்சனம் நல்லதுதானே பாஸ்?!
சாந்தி, பாளையங்கோட்டை.
வடிவேலு நடித்த ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ படம் ஏமாற்றிவிட்டதே?
வடிவேலு ஒரு படத்தின் கேரக்டராக நடிக்க வேண்டும். வடிவேலு, வடிவேலுவையே இமிடேட் செய்து நடிக்கக் கூடாது!

தே.மாதவராஜ், கோயமுத்தூர்-45.
அரசு நிகழ்ச்சிக்கு இ.பி.எஸ் - கட்சி நிகழ்ச்சிக்கு ஒ.பி.எஸ்-ஸா?
காத்து வாக்குல ரெண்டு கழகம்!
பஷீர், காரைக்கால்.
சமீபகாலமாக யானைகளும் புலிகளும் மக்களை அடித்துக் கொல்கின்றனவே?
சமீபகாலமாக யானைகள், புலிகளின் வாழ்விடங்களை, பாதைகளை மனிதர்கள் அழித்துச் சுருக்குகிறார்களே?
இல.கண்ணன், நங்கவள்ளி.
கேரளாவில் கோயில் யானை முன்பு ‘போட்டோ ஷூட்’ செய்த மணமக்கள்மீது யானை தென்னை மட்டையை வீசியிருக்கிறதே?
யானை, தென்னை மட்டையை வீசி மணமக்களை ஆசீர்வதித்தது என்று பாசிட்டிவாக எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்!
மு.கல்யாணசுந்தரம், மேட்டுப்பாளையம்.
அ.தி.மு.க-வின் எதிரி தி.மு.க - பா.ஜ.க-வின் எதிரி தி.மு.க... வித்தியாசமென்ன?
ஒன்று பங்காளிச் சண்டை, ஒன்று பகையாளிச் சண்டை!
வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
“வாட்ச் விவகாரத்தில் விளக்கமளிக்கும்போது, அண்ணாமலை தன் சொத்து விவரங்களை முழுமையாக வெளியிடப்போவதாகவும், அப்போது தி.மு.க ஆட்சியின் அடுத்த ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்றும் பேசியிருக்கிறாரே?
ஒரு காமெடிக் காட்சியில் குறளி வித்தைகாட்டும் மயில்சாமி, வித்தைகாட்டுவதற்கு பதிலாக பேசிக்கொண்டே இருப்பார். காத்திருந்து கடுப்பாகும் வடிவேலு, ‘ஓவரா பேசிக்கிட்டே இருக்கிறாரே தவிர, பாம்பை வெளியே விட மாட்டேங்கிறாரேய்யா?’ என்று சலித்துக்கொள்வார். அந்த நகைச்சுவைதான் ஞாபகத்துக்கு வருகிறது. `மாதம் ஒரு பட்டியல் வெளியிடுவேன்’ என்று சொன்ன அண்ணாமலை. இன்னும் முதல் பட்டியலையே வெளியிடவில்லையே?!
கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!