சண்முகம் நாகராஜன், தேனி.
தெய்வம் இருப்பது எங்கே?
கேரளா மலப்புரத்திலுள்ள ஒரு கிராமத்தில், புன்னசேரி பகவதி கோயில் இருக்கிறது. அந்தக் கோயிலில் கடந்த வாரம் திருவிழா ஆரம்பித்தது. திருவிழா நடந்துகொண்டிருந்தபோது, அதே கிராமத்திலுள்ள ஹைதர் என்ற இஸ்லாமிய முதியவர் ஒருவர், தன் 72 வயதில் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். அவரின் இறுதிச்சடங்கு நிகழ்வுகளுக்கும், இறுதி யாத்திரைக்கும் இடையூறாகக் கோயில் திருவிழாச் சடங்குகள் இருக்க வேண்டாம் என்று, ஓரிரு நாள்கள் முன்னதாகவே அனைவரின் ஒப்புதலோடும் திருவிழாவை நிறுத்திக்கொண்டது கிராம நிர்வாகம். உங்களுக்கான பதில் கிடைத்ததா சண்முகம்!

டி.சி.இமானுவேல், மயிலாடுதுறை.
அண்ணாமலைக்கும் கே.எஸ்.அழகிரிக்கும் உள்ள வித்தியாசம்?
மீம்ஸ்களின் எண்ணிக்கைதான்!
க.சு.ஸ.மழாஹிரி, காயல்பட்டிணம்.
சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இருப்பதைப் போன்ற எந்த நிலையான சம்பளமும் இல்லாத ஊராட்சிப் பதவிகளுக்கு ஏன் கழுகாரே இவ்வளவு போட்டி... ஆர்வம்?
ஆதாயம் இல்லாம நம்மாளுங்க ஆர்வம் காட்டுவாங்களா பாஸ்..?
அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.
சவாலை ஏற்று, பொதுமேடையில் எடப்பாடி பழனிசாமியும் ஸ்டாலினும் நீட் குறித்து நேருக்கு நேர் விவாதிப்பார்களா?
ஆசைப்படலாம்... ஆனா, நீங்க பேராசைப்படுறீங்க!
ப.திருக்காமேஷ்வரன், குயவர்பாளையம்.
விஜயகாந்த், சரத்குமார், டி.ராஜேந்தர், விஷால், கமல் ஆகியோரிடமிருந்து பாடம் கற்பாரா விஜய்?
ஏன்... ரஜினியிடமிருந்தெல்லாம் கற்றுக்கொள்ளக் கூடாதா?
இல.கண்ணன், நங்கவள்ளி.
‘சாதனையைச் சொன்ன காலம் மாறிவிட்டது’ என்றும், ‘எதிர்த்தரப்பை அவமானப்படுத்தி ஓட்டுக் கேட்கும் அரசியல் நாடகம் நடக்கிறது’ என்றும் ஹை கோர்ட் கருத்து தெரிவித்துள்ளதே?
‘ஹை கோர்ட்டுக்கே இந்த விஷயம் இப்போதான் போய்ச் சேர்ந்திருக்கா?’னு கோர்ட் வாசலில் மக்கள் பேசிக்கறாங்க பாஸ்!
சரவணகுமார் சின்னசாமி, தாராபுரம்.
பொய் பேசியே சமாளிப்பதற்கும், சமாளிக்கப் பொய் பேசுவதற்கும் என்ன பெரிய வித்தியாசம்?
முன்னது தேர்தல் பிரசாரங்களென்றால், பின்னது ரெய்டுகளின்போது வரும் பேட்டிகள்!
மாணிக்கம், திருப்பூர்.
உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர்கள் கொடுக்கும் வாக்குறுதிகளைப் பார்த்தால், வரப்போகும் கவுன்சிலர்களால் ஒவ்வொரு வார்டும் சிங்கப்பூராகிவிடும் போலிருக்கிறதே?
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது மாணிக்கம்!

பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை.
‘கவர்னரை முதல்வர் விமர்சிப்பது, ஏற்புடைய செயல் அல்ல’ என்கிறாரே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்?
சென்னா ரெட்டி - ஜெயலலிதா மோதல்களையெல்லாம் ஜெயக்குமார் மறந்துவிட்டார் போல!

கணேஷ், மயிலாடுதுறை.
வாக்கு கேட்டு காலில் விழுவது மாறியிருக்கிறதா?
ஒன்று காலில் விழுகிறார்கள் அல்லது காலை வாருகிறார்கள். இப்போ மிரட்டலெல்லாம் நடக்குது கணேஷ்! உ.பி-யில் வெளியான பிரசார வீடியோ ஒன்றில், “ஆயிரக்கணக்கான புல்டோசர் மற்றும் ஜே.சி.பி-க்களை வாங்கி, யோகி ஆங்காங்கே நிறுத்திவைத்திருக்கிறார். பா.ஜ.க-வுக்கு வாக்களிக்காத பகுதிகள் அரசால் அடையாளம் காணப்படும். புல்டோசர், ஜே.சி.பி எதற்கு என்று தெரியுமல்லவா?” என்று கொக்கரித்திருக்கிறார் தெலங்கனா பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜா சிங். இங்கே நம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தில், வாணியம்பாடியில் பேசிய அமைச்சர் துரைமுருகன்
“தி.மு.க-வைத் தேர்ந்தெடுக்காவிட்டால் ஐந்து ஆண்டுகளுக்கு வாணியம்பாடி புறக்கணிக்கப்படும் என்று எச்சரிக்கிறேன்” என்று மிரட்டியிருக்கிறார். ஒரு ஜனநாயக நாட்டில் இப்படியான எல்லை மீறும் நாக்குகள் ஆபத்தானவை!
கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!