
அடிச்சுக்கூட கேப்பாக... அப்பயும் ஒண்ணும் சொல்லிராதிய... ரகசியமாவே வெச்சுக்கோங்க...’’ என்று சொன்னபடி ஓடும் போண்டா மணிதான் கண்ணில் வந்து போகிறா
பாரதிமுருகன், மணலூர்பேட்டை.
தமிழக அமைச்சர்களில் கலகலப்பான அமைச்சர் யார்?
கேமராவையும் மைக்கையும் ஆஃப் பண்ணிவிட்டால், எல்லோருமே ‘கலக்கப்போவது யாரு?’ நிகழ்ச்சி பர்ஃபார்மர்களைவிட கலகலப்பாகப் பேசக்கூடியவர்கள்தான்.
இல.கண்ணன், நங்கவள்ளி.
``எடப்பாடி பழனிசாமியால் அ.தி.மு.க பலவீனமடைந்துவருகிறது’’ என்ற டி.டி.வி.தினகரனின் குற்றச்சாட்டு?
ஆடு நனையுதுன்னு ஓநாய் கவலைப்பட்ட கதை தெரியுமா உங்களுக்கு?
வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
நாடு முழுவதும் மீண்டும் வேகமாகப் பரவும் புதிய வகை வைரஸ் காய்ச்சல்?
அச்சப்பட வேண்டாம். அதேசமயம், மத்திய, மாநில அரசுகள் இன்னும் கூடுதல் விரைவுடனும், வெளிப்படைத்தன்மையுடன் இந்த விஷயத்தில் செயல்பட வேண்டும்.

வைகை சுரேஷ், தேனி.
‘அதானி பற்றிய விவரங்களைக் கூற முடியாது’ என்று நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் கூறிவிட்டாரே... அப்படியென்ன ரகசியமாக இருக்கும்?
``அடிச்சுக்கூட கேப்பாக... அப்பயும் ஒண்ணும் சொல்லிராதிய... ரகசியமாவே வெச்சுக்கோங்க...’’ என்று சொன்னபடி ஓடும் போண்டா மணிதான் கண்ணில் வந்து போகிறார். சிரிப்புதான் வருகிறது. சிரிச்சா உடம்புக்கு நல்லது. பொருளாதாரத்துக்கு நல்லதான்னு தெரியலை சுரேஷ்!

பாரதிமுருகன், மணலூர்பேட்டை.
ஜானகி அம்மாள் பாடியதில் உங்களுக்குப் பிடித்த பாடல்?
பெரும் புதையலிலிருந்து ஒரேயொரு நாணயத்தை மட்டும் எடுத்துக்கொள் என்பதுபோல இருக்கிறது. ஆனாலும் சொர்க்கத்துக்குள்ளேயே நுழையவும் போதுமான ஒரு நாணயம் போன்றது அந்தப் பாடல். `ஜானி’ படத்தில், இளையராஜா இசையமைப்பில் ஜானகி அம்மாள் பாடிய ‘காற்றில் எந்தன் கீதம்... காணாத ஒன்றைத் தேடுதே...’
இல.கண்ணன், நங்கவள்ளி.
தனது கட்சியினரை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினால் அடக்க முடியாதுபோலிருக்கிறதே?
அப்படி தடாலடியாகச் சொல்லிவிட முடியாது. ஆனால், இன்னும் லாகவமாகவும் ஆவேசமாகவும் சாட்டையைச் சுழற்றினால்தான் வண்டியைக் கரைசேர்க்க முடியும்.
வைகை சுரேஷ், தேனி.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையில் உண்மையான குற்றவாளிகள் பிடிபடுவார்களா கழுகாரே?
இனி, 2024 நாடாளுமன்றத் தேர்தல் வேலைகள் சூடுபிடிக்க ஆரம்பிக்கும்போதுதான் அந்த ஃபைல்கள் படபடக்கும். மற்றபடி, குற்றவாளிகள்... பிடிபடுவது... என்பதெல்லாம் ‘சட்டம் தன் கடமையைச் செய்யும்’ கதைதான்.

ப.த.தங்கவேலு, பண்ருட்டி.
`மீண்டும் ஒரு ரவுண்ட் வருவார்’ என எதிர்பார்க்கப்பட்ட நடிகர் வடிவேலு, தற்போதும்கூட இயக்குநர்களுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை எனச் சொல்லப்படுகிறதே..?
‘என் ராசாவின் மனசிலே’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில், முதல் நாள் வெள்ளந்திச் சிரிப்போடு கேமராவுக்கு முன்பு நின்ற அந்த வடிவேலுவின் எனர்ஜியோடும், மனதோடும், இதுநாள் வரையிலான அனுபவத்தின் நிதானத்தோடும் மீண்டும் அவர் தன் இரண்டாம் ஆட்டத்தைத் தொடங்க வேண்டும். ஆனால், ‘தன் கிரீடங்கள் அனைத்தையும் கீழே இறக்கி வைத்துவிட்டு, வெறும் தலையோடு மீண்டும் தொடங்கிய இடத்திலிருந்து வாருங்கள்’ என்று ஒரு கலைஞனைப் பார்த்து நாம் சொல்லிவிட முடியாது. ஆனால், காலம் அதைத்தான் எப்போதும் தீர்வாகச் சொல்கிறது. அதேசமயம், வரவிருக்கும் ‘மாமன்னன்’ படம் வடிவேலுவுக்கு மிகப்பெரிய பிரேக்காக இருக்கும் என்கிறார்கள் சினிமா வட்டாரத்தில். வெயிட் பண்ணுவோம்!
கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!