
சுற்றாத பம்பரத்தில் ஆளுக்கு ஆள் ஆக்கரைப் போடத்தான் செய்வார்கள்.

வாசுதேவன், பெங்களூரு.
“கமலின் அரசியல் தடம் மாறிவிட்டது” என்று வானதி ஸ்ரீனிவாசன் கூறியிருக்கிறாரே?
`தடம் மாறிவிட்டார்’ என்று சொல்ல முடியாது. `தடம் மாறாமல் இருந்திருக்கலாம்’ என்று வேண்டுமானால் சொல்லலாம்.
செந்தில் முருகன், கோவை.

மே தினத்தன்று ரீவைண்டில் என்ன பாடல் கேட்டீர் கழுகாரே?
‘மூச்சு வாங்க உழைத்தீர்கள்
முடிவென்ன ஆச்சு?
குனிந்து குனிந்து நடந்தீர்கள்
கூன் விழுந்தாச்சு!
நெசவு செய்து கொடுத்தீர்கள்
அடிமைகள் போலே...
உடுத்திக்கொள்ள உடையில்லை
இடுப்புக்கு மேலே!
அடுப்பு உண்டு பூனைக்கு
அதுவுமில்லை ஏழைக்கு.
உழைக்கும் மக்களே
ஒன்று கூடுங்கள்...
வேளை வந்தது
கேள்வி கேளுங்கள்...
உழைக்க ஒருவன் பிழைக்க ஒருவன்
என்ற விதியைக் கொளுத்துங்கள்!’
வைரமுத்துவின் ‘சுத்தியல்’ வரிகளில், இளையராஜாவின் ‘அரிவாள்’ இசையில், மலேசியா வாசுதேவனின் நெருப்புக் குரலில் உருவான ‘எழுகவே படைகள் எழுகவே’ என்ற நரம்புகளை முறுக்கேற்றும் பாடலைத்தான்!

பாரதிமுருகன், மணலூர்பேட்டை.
‘12 மணி நேர வேலை’ சட்ட மசோதா வாபஸ் எதைக் காட்டுகிறது?
தி.மு.க தடுமாறி விழுந்து எழுந்ததைக் காட்டுகிறது. எழுந்தது நல்ல விஷயம். விழுந்ததில் பட்ட கறை மாறுமா?
ப.த.தங்கவேலு, பண்ருட்டி.
‘ம.தி.மு.க-வை தி.மு.க-வுடன் இணைக்க வேண்டும்’ என்ற கோரிக்கை அந்தக் கட்சியிலிருந்தே கிளம்பியிருக்கிறதே?
சுற்றாத பம்பரத்தில் ஆளுக்கு ஆள் ஆக்கரைப் போடத்தான் செய்வார்கள்.
சி.கனகராஜ் கூடுவாஞ்சேரி.
நான் புதிதாக ஒரு தொழில் தொடங்கவிருக்கிறேன். என்ன தொழில் செய்யலாம் கழுகாரே..?
அரசியலில் மட்டும் இறங்கிவிட வேண்டாம்!
எல்.ஆர்.சுந்தரராஜன், மடிப்பாக்கம்.
அடுத்த தமிழக நிதியமைச்சர் தங்கம்தானே?
பாஸ்... உளவுத்துறையில் என்ன பதவியில் இருக்கிறீர்கள்?
வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
மக்களின் உணர்வுகளே ‘மனதின் குரல்’ என்ற மோடியின் பெருமிதம்..?
உண்மையான மக்கள் ‘மனதின் குரல்’ 2024-ல் ஒலிக்கும்.
சி.கனகராஜ், கூடுவாஞ்சேரி.
தடைசெய்யப்பட்ட பொருளை விற்பனை செய்யும் வியாபாரிக்கு அபராதம் விதிக்கும் அரசாங்கம், அதன் உற்பத்தியை ஏன் தடுத்து நிறுத்துவதில்லை?
ஒரு பிரச்னையை எப்போதும் முடியாமல், தீராமல் பார்த்துக்கொள்வதற்குப் பெயர்தான் அரசியல்.
மாறன், புதுக்கோட்டை.
பேருந்துப் பயணத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பான உடை சேலையா, சுடிதாரா?
என் எல்லாத் தோழிகளிடமும் விசாரணையில் இறங்கினேன். எல்லோரும் வாக்களித்தது சுடிதாருக்குத்தான்.

பாரதிமுருகன், மணலூர்பேட்டை.
கோடை வெயிலுக்கு சில்லுனு ஒரு நியூஸ்?
நடிகை ‘ஐஸ்’வர்யா லட்சுமியின் கிராப் `ஜிவ்’வென ஏறிக்கொண்டிருக்கிறதாம்!
பெ.பச்சையப்பன், கம்பம்.
நடிகை சமந்தா கோயிலுக்குப் பூசாரியாக வேண்டுமானால் என்ன தகுதி வேண்டும்..?
19-ம் வாய்ப்பாட்டைத் தலைகீழாகச் சொல்லத் தெரிந்திருக்க வேண்டும்.
பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை.
அ.தி.மு.க தலைமையில்தான் கூட்டணி என்றால், சென்னையில்தானே கூட்டணி உறுதிசெய்யப்பட வேண்டும்?
அடுத்த பக்கம் புரட்டுங்க!
கி.சீனிவாசன், சிவகங்கை
முதலமைச்சரைத் தூங்கவிடாமல் செய்துவிட்டு, ஒருசில அமைச்சர்கள் நன்றாகத் தூங்குகிறார்களே..?
அந்த வகையில் முதல்வரை நினைக்கும்போது அவர்மீது பரிவு வரத்தான் செய்கிறது!
கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!