கிரிவலம் மாவட்டத்தைச் சேர்ந்த சீனியர் அமைச்சர் நடத்தும் கல்வி நிறுவன வளாகத்தைச் சுத்தம் செய்ய, 100 நாள் திட்ட பணியாளர்களைப் பயன்படுத்துகிறார்களாம். இதற்கு உள்ளாட்சி நிர்வாகிகளும் உடந்தை. இந்தப் பணிகளை அமைச்சரின் வாரிசு மேற்பார்வையிடுவதாகவும் சொல்கிறார்கள். “கல்லூரியைச் சுத்தம் செய்யச் சொன்னால் பரவாயில்லை. கழிவறைக்குள்ளும் வேலை பார்க்கச் சொல்கிறார்கள்” என்று புகார் எழுந்திருக்கிறது. சமீபத்தில் சப்-கலெக்டர் நடத்திய குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்ற சிலர், இது குறித்து பொரிந்து தள்ளிவிட்டார்களாம். ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம் அந்த சப்-கலெக்டர். மாறாக, குறை சொன்னவர்களின் லிஸ்ட் வாரிசின் கைக்கு அனுப்பப்பட்டுவிட்டதாம்!
பணிவானவரின் அணியை பலவீனப்படுத்த ‘ஆபரேஷன் சவுத்’ ஆளிழுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியிருக்கிறது துணிவானவரின் தரப்பு. ஆனால், கடைக்கோடி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கத்தில் முக்கியப் பொறுப்பு வகிக்கும் புள்ளி, தூதுவிட்டும்கூட அவரைச் சேர்க்கத் தயங்குகிறதாம் துணிவானவர் தரப்பு. “பணிவானவரின் முரட்டு பக்தர்ண்ணே அவரு” என்று யாரோ போட்டுக்கொடுத்ததுதான் காரணம். “அவரையெல்லாம் நம்ப முடியாது. முதலில் இருக்கிற வழக்குகளையெல்லாம் முடித்துவிட்டு வரட்டும்... பார்க்கலாம்...’’ எனச் சொல்லிவிட்டதாம் துணிவு தரப்பு. "ஒரு காலத்துல மா.செ-வா இருந்தவரு... இப்படி அந்தரத்துல விட்டுட்டாங்களே?!" என்று புலம்புகிறார்கள் அவருடைய ஆதரவாளர்கள்.
தி.மு.க-வில் உயர்மட்டப் பொறுப்பிலிருக்கும் ‘மன்னர்’ பிரமுகரின் ஆதரவில் அமைச்சர் பொறுப்புக்கு வந்தவர், தற்போது அவருக்கு எதிராகவே ‘சிவ’ தாண்டவம் ஆடுகிறாராம். மத்திய மாவட்டத்திலிருந்து பிரிந்த மாவட்டம் ஒன்று ‘மன்னர்’ பிரமுகரின் கோட்டையாக இருக்க, பக்கத்தில் இருக்கும் அரிதான மாவட்டத்தை எப்படியாவது தன் வசப்படுத்திட வேண்டும் என்பதில் அமைச்சர் தீவிரமாக இருக்கிறாராம். அதற்காக அரிதான மாவட்டத்தில் போஸ்டர், ஃபிளெக்ஸ், சுவர் விளம்பரம் என்று எதிலுமே மன்னர் பிரமுகரின் பெயரையோ, புகைப்படத்தையோ அமைச்சர் தரப்பு போடுவதில்லையாம். திட்டமிட்டு நடத்தப்படும் இந்தப் புறக்கணிப்பால் ‘ஏற்றிவிட்ட ஏணியையே எட்டி மிதிப்பதா?’ என மன்னர் பிரமுகர் தரப்பு கொதித்துக் கிடக்கிறதாம்.
அருவி மாவட்ட கல்குவாரிகளிலிருந்து கரும்பாறைகள், ஜல்லி, எம்-சாண்ட் என விதவிதமாக கேரளாவுக்குக் கடத்தப்படுகின்றன. அனுமதி பெற்ற அளவைவிட பல மடங்கு கனிமங்கள் இப்படிப் பட்டப்பகலில் கொள்ளைபோவது குறித்து சமூக ஆர்வலர்களும், எதிர்க்கட்சியினரும் தொடர்ந்து முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. ‘இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணாமல் விடக் கூடாது’ என்று அவர்கள் மாவட்ட அதிகாரியின் அலுவலகத்துக்குப் புகார் கொடுக்கப் படையெடுத்திருக்கிறார்கள்.
‘ப்ளீஸ்... இந்த விவகாரம் தொடர்பாக என்னிடம் பேசாதீர்கள். பேசியதாகவும் வெளியில் சொல்லாதீர்கள். மேட்டர் ரொம்ப சீரியஸா போகுது. சீனியர் அமைச்சர் துறை என்பதால், அவரே நேரடியாகக் கண்காணிக்கிறார். புரிஞ்சுக்கோங்க’ எனக் கையெடுத்துக் கும்பிடுகிறாராம். “பெரிய அதிகாரியே இவ்வளவு பயப்படுகிறார். பிறகெப்படி தாசில்தாரும், வி.ஏ.ஓ-வும் நடவடிக்கையில் இறங்குவார்கள்?” என்று புலம்புகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
டெல்டாவில் ட்ரிபிள் இனிஷியல் புள்ளியின் கூடாரத்தை காலிசெய்யக் கொடுத்த அசைன்மென்ட்டில் 50 சதவிகிதம் முடித்துவிட்டாராம் கர்மவீர புள்ளி. சமீபத்தில் அங்கு சென்ற துணிவானவர், ‘இவரைப் பார்த்து கத்துக்கோங்க... சிலரெல்லாம் ஒரு வேலைக்கும் லாயக்கில்லாமல் இருக்கிறார்கள்’ என கர்மவீர புள்ளியைப் புகழ்ந்து தள்ளியதோடு, டெல்டாவின் மணியானவரை ஜாடை மாடையாகத் திட்டினாராம். “அவரு 10 தலைமுறைக்கு சேர்த்துவெச்சுருக்காரு... அள்ளி இறைக்கிறாரு... என்கிட்ட என்ன இருக்கு?’ என நெருக்கமானவர்களிடம் நீலிக்கண்ணீர் வடித்தாராம் டெல்டாவின் மணியானவர்.