மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கரூர் சுங்ககேட்டிலுள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்துகொண்டார்.
பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "பா.ஜ.க ஆட்சி எல்லை தாண்டிப் போகிற ஆட்சியாக இருக்கிறது. முழுமையாக நாடாளுமன்றத்தை நடத்த முடியாத ஆட்சியாக பா.ஜ.க ஆட்சி இருக்கிறது. அதானி குழுமத்தில் முறைகேடுகள் நடந்தனவா, இல்லையா என்பதை விசாரணைக்குழு நடத்தட்டும், அதுவரை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த பட்ஜெட்டைக்கூட விவாதிக்காமல் இருக்கிறார்கள். உச்ச நீதிமன்றம்கூட விசாரணைக்குழு அமைக்க முன்வரும் நிலையில், நாடாளுமன்றத்தில் அதை விவாதிக்க முடியாத நிலை இருக்கிறது. சொத்துக்குவிப்புக்கும், மோடிக்கும் தொடர்பு இருக்கிறது. அதானியும் மோடியும் கூட்டுக் களவாணிகள்தான். உச்ச நீதிமன்றம் தலையிட்டு விசாரணைக்குழு அமைக்கிறது. ஆனால், ஒன்றிய அரசு விசாரணைக்குழுவைப் பார்த்து அஞ்சுகிறது. குறிப்பாக, பிரதமர் மோடி அரசு, அவசரகதியில் ராகுல் காந்தியின், பதவியைப் பறித்திருக்கிறது. வீட்டை காலி செய்ய நோட்டீஸ் வழங்கியிருக்கிறார்கள். 30 நாள்கள் நீதிமன்ற கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், ஏன் அவசரமாக ராகுல் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது?
டெக்ஸ்டைல் தொழில் நகரமான கரூரில் குறைவான ஆர்டரே கிடைத்திருப்பதால், தொழில் முடங்கிக்கிடக்கிறது. சர்வாதிகாரப் போக்கை நோக்கி மத்திய ஆட்சி சென்றுகொண்டிருக்கிறது. பட்ஜெட்டில் நல்ல திட்டங்களை மாநில அரசு கொண்டு வந்திருக்கிறது. அதை, எங்கள் கட்சி வரவேற்றிருக்கிறது. நல்ல திட்டங்களை வரவேற்கிறோம். அதேநேரத்தில் நிதியமைச்சர் சொல்லும் கருத்து அவரது சொந்தக் கருத்தா அல்லது அரசின் கருத்தா என்பது தெரியவில்லை. அந்த மாதிரியான பொருளாதாரக் கொள்கைகளை அமல்படுத்தினால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். சிறு, குறு தொழில்களை ஊக்கப்படுத்த வேண்டும்.

தி.மு.க தேர்தல் வாக்குறுதியில் சொன்னதை செயல்படுத்த வேண்டும். 152 அரசாணையின்படி, அவுட் சோர்ஸிங் முறையை மாற்ற வேண்டும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திட்டத்தில் நல்ல முடிவை எடுக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் கொண்டுவரப்பட்ட தொகுப்பூதியம், மதிப்பூதியத்தை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். தமிழக அரசு பட்ஜெட்டில் வெளியிட்டுள்ள அறிவிப்புகள் குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் பல்வேறு விளக்கங்களை அளித்துவருகிறார்.
பள்ளிக்கல்வித்துறையில் தமிழக மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் திட்டம் நிறுத்தப்படும் என செய்திகள் வெளியாகியிருப்பது பற்றிக் கேட்கிறீர்கள். அ.தி.மு.க அரசுத் திட்டங்கள் நிறுத்தப்படவில்லை. லேப்டாப் உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்றுவோம் என அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். தமிழக அரசு மாதம்தோறும் குடும்பத்தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் மதிப்பூதியம் வழங்கப்படும் என அறிவித்திருக்கிறது. எந்த ஒரு நிவாரண திட்டத்தையும் அனைவருக்கும் கொடுக்கத் தேவையில்லை. யாருக்கு தேவை என்பதை உணர்ந்து அவர்களுக்குக் கொடுப்பதுதான் நல்லது.
வடமாநிலத் தொழிலாளர்கள் இல்லை என்றால், தமிழகத்தில் தொழில்கள் நடத்த முடியாது. தமிழ்நாட்டின் தொழில் விஸ்தரிப்பால் தொழிலாளர்கள் தேவைப்படுகிறார்கள். தமிழகத்தைச் சார்ந்தவர்கள் வெளி மாநிலங்களில் வேலை பார்த்திருக்கிறார்கள். ஒன்றிய அரசு, மாநில அரசுகள் அரசு வேலைவாய்ப்பில், தமிழ்நாடு இளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்" என்றார்.