தேசிய புலனாய்வு அமைப்பு கடந்த வாரம் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் அதன் தலைவர்களின் வீடுகளில் சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர், கேரளாவில் கண்டனப் போராட்டங்களும், கடையடைப்பு போராட்டங்களும் நடத்தினர்.

இதில் அரசுக்குச் சொந்தமான பொருள்கள் சேதமடைய, கேரள உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து இதைக் கண்டித்தது.
இத்தகைய பரபரப்புக்கு மத்தியில், `பயங்கரவாதத்தின் முக்கிய இடமாக கேரளா மாறிவிட்டது’ என பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கூறியிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு பேசிய நட்டா, ``கேரளா தற்போது தீவிரவாதத்தின் முக்கிய இடமாக மாறிவிட்டது. வாழ்க்கை என்பது இங்கு பாதுகாப்பாக இல்லை. மேலும், சாதாரண குடிமக்கள், தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக உணரவில்லை. வகுப்புவாத பதற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துவருகின்றன. அதுமட்டுமல்லாமல், வன்முறையை உருவாக்குபவர்கள், அதை ஊக்குவிப்பவர்களுக்கு இந்த இடதுசாரி அரசாங்கத்தின் மறைமுக ஆதரவு இருக்கிறது" எனக் கூறினார்.